Sunday 30 January 2011

மீனவ மக்கள் போராட்டம்


தங்களது தனிப்பட்ட வாழ்வைத் தாண்டி பிறன் மீது அக்கறை கொள்கிற ஒருவன்தான் மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை வேறு படுத்திப் பார்க்கும் உரிமையைப் பெறுகிறான் என்று சொல்ல முடியும்.

இன்றைக்கு இருக்கிற சூழலில் தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிலிருந்து மீள முடியாமல் இருக்கிற சூழலில் பொதுவாக மக்கள் கூடி வருவது என்பதே கடினமாகி விட்டது.


ஒருவிதத்தில் அடிபட்டவன் தான் அவனுக்கான மீட்பைப் போராடிப் பெறவேண்டியிருக்கிறது என்றாலும், அவனோடு கூட இருக்கிற, பலப்படுத்துகிற செயலிலாவது ஒன்று சேர்வதுதான் மனிதன் என்பதற்கான மதிப்பை வழங்குகிறது.

மீனவ மக்கள் போராட்டம, மீண்டும் ஒருமுறை நாம் கூடி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான விடயத்தில் பல இணைய எழுத்தாளர்கள் பேசுவது குறித்து பெருமைப் படுகிறேன்.
http://www.tamilpaper.net/?p=௨௩௯௯

 http://twitter.com/வஸந்த௧௭௧௭

http://www.savetnfisherman.org/

வெறும் பெருமை என்ன செய்துவிடும்? இயக்கங்கள் தேவைப் படுகின்றன. நிறைய... இன்னும் நிறைய...

கடலோர மக்கள் கூட்டமைப்பு   
தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறது. நாமும் நமது எதிர்ப்பையும், போராட்டத்தையும் வலுப் படுத்துவோம்.

Saturday 29 January 2011

கருத்து மோதல்

கருத்து யுத்தம் என்பது எல்லாக் காலங்களிலயும் நடக்கும்.

ஒவ்வொருவரின் தத்துவம், வாழ்வின் நெறிகள் இவைகளைக் கொண்டு தங்களுக்குள் ஒரு போராட்டம் எப்போதுமே நிகழும். ஆனால் எல்லாமே அவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று சொல்வதற்கில்லை -

இங்கே சில உதாரணங்கள்: உரையாடல்கள்: மோதல்கள்: என் பல..

ஏறக்குறைய எல்லாவற்றிலயும் ஜெயமோகன் - பிறருக்கிடையிலேயானதாக இருப்பது ஒரு தற்செயலாய் நிகழ்ந்த்ததே. ஒருவேளை ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிப்பதும் கூட இருக்கலாம்.

ஒன்று: [கடந்த வருடம்]
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விமர்சனம் செய்வதற்குப் பிறகு - வினையும் எதிர்வினையும்:

இரண்டு: [இந்த வருடம்]

ம.க. இ.க. வின் தோழர் மருதையனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையே நடந்த, நடக்கிற கருத்து யுத்தம் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் - எழுத்து என்பது எதனால் - எதற்காக என்பதைப் பற்றிய விடயங்களும் இருக்கின்றன என்பதற்காக.







இது எங்கே போகும் என்பதை படிப்பவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதைப் பற்றிய எனது பின்னோட்டம் சற்றே ஒத்திப் போடப் பட்டுள்ளது.


Wednesday 26 January 2011

குடியரசு தினம் - யார் குற்றம்?

 62 வது குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.



  • குடியரசு தினக் கொண்டாட்டத்தை - நாசிக் அருகே பெட்ரோலில் கலப்படம் செய்த கும்பல் ஒன்று கூடுதல் மாவட்ட ஆட்சியரை [கலக்டர் சோனாவானேவை ] உயிருடன் எரித்து - தொடங்கி வைத்திருக்கிறது. மக்களாட்சியைக் கொண்டாட இதை விட சிறப்பான கொண்டாட்டம் இருக்கமுடியுமா?

ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
  • இறந்த அந்த மாவட்ட அதிகாரியின் நினைவு இல்லாமலே குடியரசு தினம் நிறைவு பெரும். நமது நாட்டைப் போல வேறு ஜனநாயக நாடு இல்லவே இல்லை என்கிற பெருமையோடு இந்த விழாவும் நிறைவு பெரும்.
இந்த ஆண்டு பிறந்து பன்னிரண்டு நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்த வருத்தமோ தெரிவிக்க முடியாமல் இருக்கிற அரசு நமது அரசு.

அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?

  • புத்தக் கோவிலில் கல்லெறிந்தால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை இருந்தால் இது யார் குற்றம்?
  • இந்த அரசு எங்களுக்கு பாதுகாப்பு தரவில்லைஎன்றால் இலங்கை அரசிடம் சென்று தஞ்சமடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று நாகப்பட்டினம் மீனவர்கள் சொல்கிறார்களே - இது யார் குற்றம்.?
  • கச்சத் தீவை சென்று கொடுத்தது யார் குற்றம்? இலங்கைக் கடற்படையினருக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பலை வழங்கியதே  இந்த இந்திய அரசு - இது யார் குற்றம். இறந்து போன மீனவர்கள் குற்றமா?
  • என்நாட்டு மக்களைக் கொள்கிற ஹிட்லரே மேல் என்று இந்த நாட்டு மக்களை நினைக்க வைப்பதுதான் குடியரசா?
நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்...

பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?

பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
                 - பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.


Tuesday 25 January 2011

மணத்துறவு 1


தமிழத்தின் துப்பறியும் இதழ்கள் - பாதிரக்குடியில் ஒரு குரு பாலியல் தொடர்பான (பெடபிலியா) சிக்கல்களில் மாட்டிக் கொண்டதைப் பற்றியும் -அதனைத்தொடந்து உதகையைச் சேர்ந்த குரு சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அதே பிரச்சனைக்காக மாட்டிக் கொண்டதைப் பற்றியும் விலாவாரியாக எழுதித் தீர்த்தன.
இன்னும் எத்தனை நபர்கள் அடுத்து இதில் வர இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
தினமலர் இதை மறந்து விடாமல் எழுதி வந்ததது.
இதை ஏன் சன் டி. வி. ஒளிபரப்ப வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். ஏதோ சன் டி.வி. யும் நாமும் சித்தப்பா மக்கள் மாதிரி.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து திருச்சபைகள் மிகப் பெரிய சவால்களை இதனால் சந்தித்து வருகின்றன என்பதும்அதைத் தொடர்ந்து திருச் சபையின் உயர் மட்டத் தலைவர் மிகப் பெரும் குற்றச் சாட்டுகளை சந்தித்து வருவதும் நாம் அறிந்ததே.
திருச்சபை உலக அளவிலும் மிகப்பெரிய ஊடகச் சவால்களை சந்தித்து வருகிறது.
இதைப் பற்றிய தொடர் கிண்டல்களும் - திருச்சபையைப் பற்றிய கேலிச் சித்திரங்களும் நமக்கு இப்போது தேவையான ஒன்றுதான்.
இந்த கார்ட்டூன்களைப் பார்த்து சிரிக்கலாம். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமல்லவா!
நியூ யார்க் டைம்ஸ் - இதைப் பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறது. அதில் இன்னும் தேடினீர்கள் என்றால் இன்னும் நிறைய இருக்கின்றது.
நியூ யார்க் டைம்ஸ் இதையே ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்று சொன்னதற்காக ஒரு பேராயரைப் பற்றிய ஒரு கட்டுரையும் கேலி செய்து இடம்பிடித்திருக்கிறது.

முதலில் சில கருத்துக்களை மிகத் தெளிவாக பதிய வேண்டியது அவசியம்.
  • எந்தத் தருணத்திலும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப் படுத்த முடியாது.
  • அதிலும் பல ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு பணிக்கென அமர்த்தப் படுகிற குருக்கள் அதில் ஈடுபடுவதை நாம் ஒருபோதும் சரி என்று சொல்லிவிட முடியாது.
  • வன்கொடுமைக்கு ஆளான அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல: அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைக் கண்டிப்பாய் செய்ய வேண்டும்.
  • தனி மனித மதிப்பீடுகள் அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் எதிர்க்கிறோம்.
  • அதோடு சேர்த்து இதில் ஈடுபட்ட நபர்களையும் நாம் இந்த ரீதியில் பார்க்க வேண்டும் - மன அளவில் பாதிக்கப் பட்டதன் விளைவாகவே இச் செயல்களில் ஈடுபடிருந்தால் அதிலருந்து மீண்டு வர நம் உதவிகளை செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகே நாம் பின் வருவனவற்றை எழுதுகிறோம்.

ஏற்கனவே நித்தியானந்தா செய்தியில் பத்திரிக்கையின் பொறுப்புணர்வு பற்றி அதிகம் எழுதிவிட்டதாலும் -பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரப் போக்கையே அதிகம் தன் மூலதனமாகக் கொண்டிருப்பதை நாம் அறிந்ததாலும் இப்போது அதை விடுத்து மற்ற நுணுக்கங்களை அலசுவோம்.

இதுக்கு கலைஞர் ஸ்டைலுதான் சரிப் பட்டு வரும்னு தோணுது - கேள்வியும் நானே பதிலும் நானே.

1. ஏன் பத்திரிக்கைகள் திருச்சபையை தாக்குவதையே தன் முதல் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன?

திருச்சபை தன் ஆக்டோபஸ் கரங்களை எல்லாத் தளங்களிலும் விரித்து தான்தான் எல்லா அறக் கேள்விகளுக்கும் - அறப் புதிர்களுக்கும் பதில் சொல்லும் அல்லது எது சரி என்று சொல்லும் ஆற்றல் படைத்த அற அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய நிறுவனமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அதாவது, எல்லாத் தளங்களிலும் (உலகப் படைப்பு - அழகியல் - மனித வாழ்வின் நோக்கம் - இன்னும் பிற) விரிந்திருந்த கரங்கள் வெறும் அறத்தளத்திற்கென்று மட்டும் சுருங்கிப் போனது. அதில் மட்டுமே தான் சக்தி வாய்ந்தவன் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறது. இதில் மட்டும்தான் திருச்சபை தன் இருப்பைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்று யாரும் திருச்சபையைக் கேட்கப் போவது இல்லை. அல்லது ஒரு மனிதனுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை பற்றி விசாரிக்க யாரும் திருச்சபை நபர்களைத் தேடி வர வேண்டிய அவசியம் இல்லை. சிசுக்கொலை தவறு - ஓரினச்சேர்கை தவறு - திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தவறு - என்று இன்றைய உலகம் எதை எல்லாம் சரி என்று அறவியலில் நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறதோ அந்த தளத்தில் திருச்சபை தன் இருப்பை உரத்த குரலில் தெரிவித்துக் கொண்டிருந்தது.

இப்போது இது போன்று அறப் பிரச்சனை தொடர்பாக திருச்சபை உறுப்பினர்கள் மாட்டிக் கொள்கிறபோது - அறப் பிரச்சனை தொடர்பாக எது சரி எது தவறு என்று சொல்வதற்கான அருகதை உனக்கு இல்லை என்று சொல்வதுதான் இன்றைய பத்திரிக்கைகளின் நோக்கமாகத் தெரிகிறது. உங்க பிரச்சனையை முதலில் சரி பண்ணு பின்னாடி எங்க கதையைப் பாக்கலாம் - அப்படிங்கிறதுதான். அதுமட்டுமல்ல, திருச்சபை எந்தவிதத்திலும் உலகில் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக இருக்கக் கூடாது என்பதும்தான் இதன் முதல் பிரச்சனை. எனவே இது வெறும் பாலியல் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல யார் பெரியவன் என்பதற்கான சண்டையில் வருகிற அதிகார அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். இருளில் குற்றங்கள் செய்துவிட்டு வெளியில் பாவமன்னிப்புக் கொடுக்கும் நமக்கு இது சரியான சவுக்கடியாகவே தெரிகிறது. இது நிச்சயம் நமக்குத் தேவைதான். பல வரலாற்றுப் பிழைகளுக்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பானவர்களே.

2 . சரி அதுக்கு போப் என்ன பண்ணுவார் பாவம்?

அதுவும் சரிதான். ஆனா ஒரு அப்பா தன் மகனோ மகளோ தவறு செய்தால் மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க அதை மறைக்க முயற்சிப்பார். அதைப் போலவே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குரு தவறு செய்யும்போது அதை மறைக்க அவர் முயன்றிருக்கலாம் அல்லது தெரியாமலே இருந்திருக்கலாம். ஆனால் பிற்பாடு செய்திகள் வெளிவரும் போது அதை மறைத்ததற்காக ஒரு தந்தை என்ன கவலையை அடைவாரோ அல்லது தண்டனையை அனுபவிப்பாரோ அதையே தற்போது திருத்தந்தையும் அனுபவித்து வருகிறார் என்று நினைக்கிறேன்.

ஆனாலும், உடனடியாக தவறு என்று தெரிகிற போது அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமும் வேண்டும்.


ஒரு விஷயம்: சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிற ஒரு குரு திருச்சபையின் உறுப்பினர்தான் என்பது ஊடகங்களில் வெளி வருவதற்கு முன்புவரை திருத்தந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நபர் திருச்சபையில் குருவாக இருக்கிறார் என்பது கூட அவருக்குத் தெரியாது - தெரிந்து கொள்ளவும் முடியாது - தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தன் உறுப்பினரையே தெரியாத நிலையில் எல்லாவற்றிற்கும் அவரைக் குறை சொல்லுவது தவறு என்று தோன்றுகிறது.

ஒரு குரு மாட்டிக் கொண்டதற்காக திருத்தந்தையைக் குறை சொல்லுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏன்?
ஒரு குருவும் திருச்சபையின் உறுப்பினர்தான் என்கிற விதத்தில் அதற்காக அந்த நிறுவனத்தின் தலைவரை குறை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனினும் சிலர் அதை சரி என்று வாதிடலாம்.
எனக்கு ஏன் வேதனை என்றால் - இது சரி என்றாலும் –
எந்த ஒரு கிறித்தவன் பாலியல் பிரச்சனை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அல்லது கிரிமினல் வழக்கில் மாட்டிக்கொண்டாலும் - அதற்காக ஊடகங்கள் திருத்தந்தையைக் குறை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் - குருக்கள் மாட்டும்போது மட்டும் திருத்தந்தையைக் குறை சொல்லுவது - எனக்கு வேதனையை உண்டு பண்ணுகிறது - ஏனெனில் நம் திருச்சபை இன்னும் (வத்திக்கான் இரண்டிற்குப் பிறகும்) மக்கள் திருச்சபையாக இல்லை - வெறும் குருக்கள் திருச்சபையாகத்தான் இருக்கிறது அல்லது அதிகாரத் திருச்சபையாகத்தான் இருக்கிறது என்பதற்கு இது மிகப் பெரிய உதாரணம். உலக இறையியலார்கள் மற்றும் தமிழக இறையியலாளர்கள் எழுதுவது போல இன்னும் இது மக்கள் திருச்சபையாக எல்லாம் இல்லை.
இதுதான் மிகப் பெரிய வேதனை.

எந்த ஒரு அடிமட்ட உறுப்பினர் தவறு செய்தாலும் அதற்காக திருச்சபை தவறு செய்தது போல உணர வேண்டும் என்பது மட்டுமல்ல - குருக்கள் எந்த விதத்திலும் அடிமட்ட உறுப்பினர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் இல்லை. [பணியில் மட்டுமே உயர்ந்தவர்கள்] எனவே இந்த நிகழ்விற்குப் பிறகாவது திருச்சபை தனது அமைப்பைப் பற்றி - ஆயர்களின் குருக்களின் பனி பற்றி - அனைவரின் அதிகாரம் பற்றி - இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று இன்றைய நிலையில் நமது பனியின் நோக்கம், திருச்சபையின் நோக்கம் - இன்றைய இறையாட்சிப் பனி என்ன - உண்மையான கிறித்தவ வாழ்வு எது - எப்படி சமுதாய விடுதலை என்பது முழு மனித விடுதலையோடு ஒன்றியிருக்கிறது -

இதெல்லாம் இதுவரை பேசாமல் இல்லை. இருக்கிறதை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டாலே போதும்.
இல்லையென்றால் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் - மீண்டும் லத்தீனில் பூசை வைப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆல்டரில் mic வைக்கலாமா - பூத்தொட்டிகள் வைக்கலாமா வைக்கக் கூடாதா என்று பேசலாம்.

3 . அப்ப ஆயர்கள் மீது குறை சொல்லலாமா?

அவர்களும் என்ன பண்ணுவார்கள் பாவம்.
பிள்ளைகள் செய்யற தவறுக்கு அப்பா என்ன செய்வார்.
கண்டிக்கலாம்.எனக்குத் தெரியும்னு சொல்ற பிள்ளைகளை என்ன பண்ண முடியும்?
சரி நீனே பாத்துக்கன்னு விட்டுற வேண்டியதுதான்.
போப் சொன்னமாதிரி கை கழுவி விட்டுட்டா நல்லதா?
(எழுத நிறைய விஷயங்கள் இருக்கே!)
அதுவுமில்லாமல் ஒருவர் செய்கிற தவறுக்கு இன்னொருவரை பலிகடா ஆக்குவதும் தவறுதான்.
ஆனால் ஏன் குருக்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதற்குஅவர்களுக்கும் ஆயர்களுக்கும் உள்ள உறவு நிலை கூட ஒரு காரணமாக இருக்கலாமோ?
தெரியலை .
இருந்தாலும், அதைபோய் ஒரு காரணமா சொல்லுவது எப்படின்னு தெரியலை.


4 . அப்ப யாருதான் காரணம்?
யாரு - நம்மதான். அடிப்படையில குருக்களின் மன நிலை நிறைய மாறியிருக்குன்னு தோணுது.
என்னதான் நாம் வந்து வாழ்க்கையை sacrifice பண்ணுனேன் பேர்வழி - ன்னு பேசுனாலும்
அப்படி யாரும் sacrifice பண்ணின மாதிரி தெரியலை.
நல்ல இடம் - நல்ல சாப்பாடு - அதிக அதிகாரம் - நம் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த மரியாதை -
கடவுளின் குரல் என்கிற விதத்தில் அதற்குக் கிடைக்கிற பயம் கலந்த மரியாதை -
நாம் தவறே செய்தாலும் மறைக்க முயல்கிற மக்களும் உயர் அதிகாரிகளும் -
அல்லது மறைக்க செய்வதற்கான சக்தி வாய்ந்த பணம் - இன்னும் என்னவெல்லாம் ----

இதுதான் எந்தத் தவறையும் துணிந்து செய்வதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறது.
கட்டுப் படுத்துவதற்கு யாரும் இல்லை என்கிற துணிச்சல்
சமூகம் கொடுக்கும் அழுத்தம்
[பாலியல் உணர்வைக் வெளிப் படுத்தினால் அதனால் சமுதாயம் நமது பேரைக் கெடுக்கிற நிலை.
ஒரு சாமியார் ஒரு பெண்ணோடு பேசினாலே இட்டுக் கட்டி பேசும் சமுதாயம்.
எனவே யாருக்கும் தெரியாத விதத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது]
தன் சிறு வயதில் தான் இவ்வாறு கொடுமைப் படுத்தப் பட்டது,
அல்லது புதியதாய் ஏதாவது முயற்சி செய்யும் ஆர்வம் –

இன்னும் என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பதெல்லாம் பட்டியல் இடலாம்.

எந்த ஒரு தவறையும் தனி ஒரு மனிதன் தான் செய்கிறான் என்கிற விதத்தில்
அவரவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அதே சமயத்தில் குற்றம் புரிந்தவர் மனதளவில் பாதிக்கப் படும் போது
அவர்களை ஆற்றுப் படுத்தும் செயல்களும் அவசியம்.
இதில்தான் ஆயர்களின் பங்களிப்பும் சக குருக்களின் உதவியும் அதிகம் தேவைப் படுகிறது. அதற்காக எல்லாத் தவறையும் சரி என்று சொல்ல முடியாது.

எல்லாருமே தவறுகிறவர்கள் என்கிற நிலையில் இது போன்ற தவறுகள் - குற்றங்களுக்கு எதிராக நாம்தான் இன்னும் உரத்து குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

நித்தியானந்தா பரவாயில்லை என்று அவருக்கு ஆதரவான அலை
தமிழகத்தில் வர நாம் காரணமாக இருக்கிறோம்.

எப்படி ஒரு மனிதன் அதுவும் குரு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியும். சிறுவர்களை –
கேட்கக் கூட முடியவில்லை.
நம் உருவாக்கத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

நல்ல மனிதனாக இருக்கிறவன் - கெட்ட மனிதனாக வெளியேற்றப் படும் சூழல்.
குருகுலம் வந்தவுடன் - அன்புக்குப் பதில், பணிவுக்குப் பதில், வேலைக்குப் பதில் -
நமக்கே ஒரு திமிர் வந்து விடுகிறது. நான் குரு மாணவன். என்ன பண்ண முடியும்.
நான் திருத்தொண்டன் - நான் பணியாளன் - [வெளியிலருந்து இதையெல்லாம் யாரவது படித்தால் சிரிப்பான்.]
குரு பணியை மையப் படுத்துபவனாக இருக்க வேண்டும்.
தன் நோக்கமல்ல பிறரின் நல வாழ்வுக்கான சேவைகளில் ஈடு படுபவனாக இருக்க வேண்டும்.

துறவறம் என்பதே எந்த ஒரு சிறு உறவுச் சிக்கல்களுக்கும் தன்னை குறுக்கிக் கொள்ளாமல் பரந்து பட்ட மன நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது.
இது நாமே உருவாக்கிக் கொண்டது.
இதில் கடவுளை இழுப்பதற்கு வேலையில்லை.
[ஒருவேளை எனக்கு திருச்சபை வரலாறு தெரியவில்லையோ என்னவோ.
இதைப் பற்றி வேண்டுமானால் பிறகு எழுதலாம்]

சிறு பந்தத்துக்குள் யாரும் குறுகிப் போய்விடக் கூடாது என்பதுதான் நோக்கம்.
ஆனால் நாம் மனதளவில் சுருங்கிபோய்விட்டோம்.
பணம் மையப் படுத்தப்பட்டு விட்டது.
பணம் பெற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற நிலையில்
பணத்தளவில் நம்மைச் சுருக்கிக் கொண்டோம்.
பணம் வந்ததும் பொருள்கள் வாங்கிக் குவித்து
பொருள்களோடு நாம் நம்மைப் பொருத்திக் கொண்டோம்.
மனிதன் என்பதைத் தாண்டி நாம்
சாதிய அளவில் நாம் சுருங்கிப் போனோம்.

மனித நேய உணர்வுகள் மழுங்கிப் பொய்
உணர்சிகளுக்குள் சிக்குண்டு போனோம்.

அதனால்தான் எல்லாமே.

பாலியல் என்கிற உணர்வின் சக்தியை மாற்றுப் படுத்த ஆயிரம் வழிகள் இருக்கும்போது நாம் -- மாற்றுப் படுத்துவது எப்படி என வழி தெரியாமல் இருக்கிறோம்.

எதற்காக குருக்கள்?

திருப்பலி வைக்க மட்டுமென்றால் அதற்கு மனத்துறவு அவசியமில்லை.
எனவே நமது பணியை பற்றி அது எப்படி இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வதற்குஇறை இயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதால்

நாம் இப்போது சுய ஆய்வு செய்யலாம்.

நாம்தான் விரும்பி இதில் வருகிறோம்.
என்னால் இயலாது என்றால் - வெளி வருவதற்கான துணிவு நமக்கு வேண்டும்.


5 . சரி என்னதான் செய்யலாம்?

செபம் செய்யலாம்.
வேறென்ன.

இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும்


விளையாட்டு வினையாகும் என்பார்கள்.
விளையாட்டாய் ஒரு மெயில் அனுப்பப் போய் அது எதிர் வினையாகிவிட்டது.

நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்பியது அனைவருக்கும் தெரியட்டுமே என்று மீண்டும் இங்கே.
முன்பே பதிவு செய்யப் பட வேண்டியது தாமதமாய் வருகிறது.
வேலைப் பளு - வேறென்ன செய்வது? இனி ...

ஞானியின் இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும் பலரால் விரும்பிப் படிக்கிற பகுதி. விகடன் வாங்கியவுடன் அந்தப் பகுதியை வாசித்து விடும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்தித்த பகுதி அது. ஞாநி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் - அரசின் மிரட்டல்களுக்கு பத்திரிக்கைகள் பணிந்து அவர் பக்கம் பத்திரிகையில் மறுக்கப்பட 'பத்திரிகை விட்டு பத்திரிகை தாவி' -  ஒற்றைக் குரலாய் அரசு இயந்திரத்தைச் சாடும் அவருக்கு என்றும் நாம் பூச் செண்டு கொடுக்கலாம்.

ஆனால் அதே சமயம் - இ.வா.திட்டு. - சங்கமம் விழாவை தமிழ் மையத்துடன் இனைந்து நடத்தும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சென்று சேரும் என்று ஞானி எழுதியதனால் அவரை நாமும் திட்டுவது சரி என்றும் படுகிறது என்றும் எழுதினேன்.
நமது "திட்டை"  ஆயிரமாயிரம் பேர் படித்து கோபம் கொள்ளப் போவதுமில்லை - சண்டைக்கு வரப் போவதுமில்லை. இருந்தாலும் சில கேள்விகளை எழுப்புவதுதான் எனது நோக்கம்.
  • இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை தமிழ் மையத்தோடு இனைந்து சங்கமம் நடத்துமெனில் அவரின் திட்டு சரியாகும். எப்போதும் நிகழ்கிற நிகழ்வின் தொடர்ச்சி என்கிற போது இந்தத் திட்டு சரியா?
  • ரெய்டு நடந்ததால் அவர் குற்றவாளி என்ற 'முன் முடிவோடு' அவரோடு இணைந்து ஒரு விழா நடத்துவது தவறு என்று சொல்வது சரியா?
  • அரசு இயந்திரங்களின் அனுமதி இன்றி எதுவும் நடக்காது. பல சமயங்களில் அவைகளின் தூண்டுதலின் பேரில் ரெய்டு நடத்துவதும், அதற்குப் பிறகு அமைதி காப்பதும், என்கிற அவ நிலையில் இருக்கும் இந்த அமைப்புகளுக்கும் அரசிற்கும் இந்த வாரத் திட்டு பொருந்தும் என்று தோன்றுகிறது. மைய அரசின் அனுமதியின்றி ஊழல் ஒழிக்கப் படவேண்டும் என்கிற நீதியின் அடிப்படையில் மட்டும் நமது அரசு அதிகாரங்கள் பணி புரியும் சுதந்திரத்தோடும், அர்ப்பணத்தோடும் எப்போதைக்கு வருகிறதோ .... அது இப்போதைக்கு இல்லை என்பது ஞாநிக்கு மிக நன்றாகத் தெரியும். தனிப்பட்ட விதத்திலே அந்தக் கொடுமைகளுக்கு [ரெய்டு இல்லை / அனால் மிரட்டல்கள், இத்யாதிகள்] ஆளானவர் என்கிற விதத்தில் இதை அவர் அறிவார்.
  • குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தான் 'தான் எப்போதும் செய்யும் செயலைச் செய்ய வேண்டுமென்றால், இந்திய, தமிழக அரசியலில், ஊழலற்ற அமைச்சகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், குற்றம் சாட்டப்படாதவர்கள், எத்தனை உண்டு? அவர்கள் என்னதான் செய்ய முடியும்? எதுவும் அசையாது -
  • அரசின் பணம் ஒரு தனி நிறுவனத்தோடு இனைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்விற்கு வழங்கப் பட வேண்டுமா என்பது கேட்கப் படலாம். ஆனால் இத்தகைய கேள்விகள் ஏற்கனவே கேட்கப் பட்டுவிட்டன. தமிழக பண்பாட்டுத் துறையில் - தமிழ் மையத்தோடு இனைந்து பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப் படும் சங்கமம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உண்டு என்றாலும், அதில் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும் - வருடா வருடம் நடந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்விற்கு - இந்தவாரத் திட்டு என்பது குறித்தே நான் எழுதினேன் [என்று நினைக்கிறேன்].
  • எப்படி இருப்பினும் அரசுக்கு எதிராய் தொடர் குரலாய் - ஒற்றைக் குரலாய் இருக்கும் ஞானிக்கே இந்தவாரப் பூச்செண்டும். ஆனாலும் நன்றாய் எழுதும் ஞானி தொடர்ந்து தேவையற்ற முன்முடிவுகளோடு எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது.

Friday 21 January 2011

மகர ஜோதி

மகர ஜோதியைக் காணச் சென்ற லட்சக் கணக்கான பக்தர்களில் - எதிர்பாராத விபத்துக் காரணமாக நுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

எதிர்பாராத விபத்துக் காரணமாக மக்கள் நூற்றுக் கணக்கில் இறப்பதும் அதைச் செய்திகளில் படிப்பதும் நமக்குப் புதிதல்ல. விபத்துகள் நடந்த பிறகு நடக்கும் விவாதங்களும், விசாரணைகளும், கொண்டுவரும் சட்டங்களும் புதியதல்ல. இதைப் பற்றி பலமுறை நாமும் எழுதித் தள்ளியிருக்கிறோம்.
http://unmayapoyya.blogspot.com/2010/07/blog-post_22.ஹ்த்ம்ல்

http://unmayapoyya.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்

 எழுதுவதைத் தவிர வேறு என்ன நாம் செய்ய முடியும்?
எல்லாமே ஒருவாரத்திற்குத்தான்.

ஆனாலும் இன்னும் ஆழமாக வெகுசனப் பத்திரிக்கைகளும், அரசு இயந்திரங்களும் - செய்திகளாக மட்டும் வெளியிடுவதைத் தவிர்த்து விமர்சிக்கவும் - தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்ய வேண்டும்.

மகரஜோதி இயற்கையானதா செயற்கையானதா என்பது ஊரறிந்த செய்தி. இப்போது மீண்டும் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
அதற்கு பதிலளிக்கும் போது "சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பேசவல்ல ராகுல் ஈஸ்வர் கருத்துத் தெரிவிக்கும்போது, பொன்னம்பல மேட்டில் உருவாகும் ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதே நேரத்தில், சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும்போது உருவாகும் ஒளிபடைத்த நட்சத்திரம்தான் மகரஜோதி என்றும் கூறியுள்ளார்." அதாவது ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள் - ஆனால் மகர ஜோதி என்பது ஒரு நட்சத்திரம். அதேசமயத்தில் மக்களிடம் அந்த நம்பிக்கை இருக்கிறது. இதைவ்டியா இன்னும் ஒரு படி மேலே போய்: "அதேசமயம், அது தெய்வ அருளால் ஏற்படுவது என்று தேவஸ்தானம் எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றும் அவர் வாதாடினார்."  
இதற்கு  மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. நம்பிக்கையோடு செல்கிற மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நமது  கேள்வியெல்லாம் - எப்படி தமிழ் மக்களிடம் இந்த நம்பிக்கை அதிகமாக - கேரள மக்களைக் காட்டிலும் இருக்கிறது என்பதுதான். 
நாம்  வாழும் விளம்பர உலகில் கட் அவுட்டுகளும் - தொலைக் காட்சி விளம்பரங்களும்தான் விளம்பரம் என்று இல்லை. வெளிவராத மக்கள் தங்களுக்குள்ளே பரிமாறும் நம்பிக்கைச் செய்திகள்தான் மிகப் பெரிய விளம்பரங்களாக இருக்கின்றது. 
மதம் என்கிற நம்பிக்கைக்குள் நமது மக்களை வீழ்த்துவதற்கு பெரிதாக வியூகம் எதுவும் யாரும் அமைக்க வேண்டியதில்லை. அவர்களாகவே போய் விழுவார்கள். 

ஆனால் மகர ஜோதி பிரச்சனையில் - தேவஸ்தானமே ஆட்களை வைத்து தொலை தூரத்தில் ஏற்றுகிற தீயை - ஏமாற்று வேலை என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது. 
இது கடவுளால் நிகழ்ந்தது என்று விளம்பரப் படுத்தினால்தான் நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் - என்று அவர்கள் வாதிடலாம். 
இதே ஜோதியை வேறு ஒரு மணியோ, ராசாவோ செய்தால் பரவாயில்லை. 
ஏன்  கோவிலில் வைத்துக் கொண்டு இந்தத் தில்லு முள்ளு வேலைகளைச் செய்ய வேண்டும்?
ஆனால் நீதி மன்ற விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு.

ஏமாற்றும் வேலைகள் தொடரும். 
"முல்லைப் பெரியாறு" விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்காமலும், மனச்சாட்சிக்கு செவிகொடாமலும், அண்டைய நாட்டின் தேவை அறிந்தும் செயல்பட மறக்கிற கேரளாவில் உள்ள இந்த தேவஸ்தானத்தையும் எந்தத் தீர்ப்பும் கட்டுப் படுத்திவிட முடியாது என்றே தோன்றுகிறது.

ஏமாற்றும் வேலைகள் தொடர்வது போல விபத்துக்களும் தொடரலாம்.  
தொடரும்...

Tuesday 18 January 2011

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு.
நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமக்கென்று இருக்கவே இருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு – அரையாண்டு விடுமுறையில் வருவதால் நன்றாகக் கொண்டாடவும் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் எத்தனைப் புத்தாண்டுதான் கொண்டாடுவது என்ற கேள்வி வேறு எழுகிறது? ஆங்கிலப் புத்தாண்டு, பிறகு, தமிழ் புத்தாண்டு; பிறகு தெலுங்குப் புத்தாண்டு. சிறு பிள்ளைகள் போல நினைத்தால், அவைகளெல்லாம் வெறும் விடுமுறை நாட்களாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பின்புலம் எதுவும் உண்டா என்பது புரியாமலே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் அடையாளம்தான் [identity]. நமது அடையாளம் எது என்பது புரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மொழி மட்டுமா அல்லது அதனோடு தொடர்புடைய விழாக்களா / பண்பாட்டுக் காரணிகளா , அல்லது சமயமா, அல்லது தேசமா, உலகமா? எதில் நம் அடையாளம் இருக்கிறது. எல்லாமே என்றால் தனித்துவ அடையாளம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? அது எது? எதனடிப்படையில் அதை வரையறுப்பது? புத்தாண்டுக் கேள்வியாய் இது இருக்கட்டும்.

வேறு விடயத்திற்கு வருவோம்.
நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள் என்று நானே எண்ணிக் கொள்கிறேன். எனவே அதற்கான தர்க்கத்திற்கு வருவோம்.
சித்திரையைத் தான் இத்தனை ஆண்டுகளாய் நாம் தமிழர் புத்தாண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எனவே அதை கலைஞர் மாற்றி விட்டார் என்பதனால், அந்தக் கோபத்தினால் இந்தப் புத்தாண்டு வேண்டாமென்றால் நாம் தமிழர் வரலாற்றை [இதை எப்போது முடிவு செய்தார்கள், யார் யார் செய்தார்கள் – எதற்காக முடிவெடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்] ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்.

அல்லது "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சற்று இடைவெளி விட்டு - "மூன்று மாதங்களுக்கு முன்பாகவே" என்று சோ போல கிண்டல் அடிக்கலாம்.
வேதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சமஸ்கிருத வருடங்கள் ஏப்ரலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு விரோதி ஆண்டு. இப்போது விக்ருதி ஆண்டில் இருக்கிறோம். இது பங்குனி மாதம் முடிந்து “கர” ஆண்டு சித்திரையில் தான் தொடங்குகிறது. எனவே அப்போதுதான் தமிழ் ஆண்டு தொடங்குகிறது என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. “இந்து இந்தி இந்தியா” பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றுச் சடங்காககிப் போன இந்தப் பொங்கலைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா என்ற வேதனை இருப்பதால் இப்பொங்கல் விழாவை கொண்டாட மனதில்லை என்றால் சடங்காக இல்லாமல் உண்மையான பண்பாட்டு விழாவாய்க் கொண்டாட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
அல்லது
இதைக் கொண்டாடுகிறவர்கள் என்றால் எதற்காக இந்த விழா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டாடுவதும் முக்கியமானது. மொழி என்பது வெறும் தொடர்பு இணைப்பான் – எனவே இந்த மொழி பேசுகிறவர்கள் கொண்டாடுவது என்கிற மேலோட்டமான புரிதல் மட்டுமே போதாது. ஏனென்றால் விழாக்களுக்கு மட்டுமே நாம் பேர் போனவர்கள் – எனவே இதன் சிறப்பும் நமக்குப் புரியாது.

ஆக என்ன செய்யலாம். இதை எழுதிய என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யலாம்: அல்லது இந்தப் பண்பாட்டு விழாவை பொருள் உணர்ந்து கொண்டாடலாம். பொங்கலாம்.
இது வெறும் புத்தாண்டு மட்டுமல்ல – அடையாள விழா! ஆனால் அடையாளம் பற்றிய நீண்ட விவாதமும் தேவைப்படுகிறது. விவாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

Friday 14 January 2011

பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்
  • பொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.

  • சித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.
  • தமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.
  • இது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.
  • ஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.
  • விவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.
வாழ்த்துகள்


Saturday 1 January 2011

புத்தாண்டு

புத்தாண்டு புதிய நம்பிக்கையை விதைக்கின்ற நாளாக இருக்கட்டும். வரலாற்றின் கடந்த பக்கங்கள் படிப்பினையச் சொல்லித் தரும் பாடங்கள். படிக்கிறவன் கற்றுக் கொள்கிறான். இல்லாதவன் பழைய தவறுகளையே மீண்டும் செய்கிறான்.
புதியது என்பது பழையதிலிருந்து ஊற்றெடுக்கும். அதைப் புரிந்தால் பழைய நல்லவைகள் தொடரும். பழைய குற்றங்கள் மறையும்.
நம்பிக்கையின்மை மறையவும், வெறுப்பு குறையவும், வாழ்வின் சரியான புரிதல் இன்னும் சற்று அதிகமாக எல்லா மதத்திலும், எல்லார் மத்தியிலும் இருக்கவும் விழைகிறோம்.
நீதிக்கான தாகமும், நேர்மைக்கான வேட்கையும்,  அடிமைப்படுத்தும் எண்ணம் தவிர்க்கவும், அன்பின் கண்கொண்டு பார்க்கவும் இந்த ஆண்டு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையும் நம்மிடம் இருக்க விழைகிறேன்.

வெளிக்கொண்டாட்டங்கள் உள்மன புரிதல்களின், வெளிப்பாடுதானே தவிர,  வெறும் வெளிக் கொண்டாட்டம் மட்டுமே அல்ல.
வெறும் காலண்டர் கொண்டாட்டமாக இல்லாமால் - உள்ளிருந்து வரும் உண்மைக் கொண்டாட்டமாக இருக்கட்டும்.

புதிய ஆண்டு - 2011

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் புதிய நாள். பல்வேறு காரணங்களுக்காக அது அவ்வாறு இருக்கும். எனவே ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் எல்லாரும் விமரிசையாகக் கொண்டாடுகிற நிலை ஒரு குழும உணர்வை - தான் தனித்து இல்லாமல் அனைவரோடும் இருக்கிறோம் - ஒரே மன நிலையில் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது.

மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

ஆங்கிலப் புதிய ஆண்டை ஏறக்குறைய எல்லாரும் கொண்டாடுகிற போது அனைவரும் தங்களது குறுகிய மனநிலையத் தாண்டி ஒரே எண்ணத்தோடு இருக்கிறோம் என்பது இதின் பலம்.

ஆனால் - இந்த விழாக்கள் நிறைய வியாபார நோக்கிலேயே இருக்கின்றன. குழும உணர்வு என்கிறதைத் தாண்டி, அதன் பொருள் மாறி - உணர்வற்ற, பொருளற்ற, சத்தங்கள் எழுப்புகின்ற, சத்தங்கள் மட்டுமே எழுப்புகின்ற நாட்களாக மாறி விட்டன.

எதுவும் செய்வதற்கில்லை - இக்கடலில் கலப்பதைத் தவிர.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.