Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, 24 February 2015

இந்தி. வாழ்க. தமிழ் இந்து வின் கட்டுரை

இந்தி மொழிக்குக்கூடப் பயன்படாத இந்தியாவின் மொழிக்கொள்கை! இதை வைத்துக்கொண்டு என்ன செய்வார் மோடி?
தமிழர்கள் என்றால் இந்தியை எதிர்த்துத்தான் பேச வேண்டுமா என்ன? நஹி. உலக தாய்மொழிகள் நாளான இன்று, எல்லா தாய்மொழிகளுக்கும் ஆதரவாகப் பேசலாமே! குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக. அதுவும் இது மோடி அரசின் கணக்குப்படி இது ‘மாத்ரிபாஷா திவஸ்’ அல்லவா? 
கடந்த வாரம் ட்விட்டரில் இந்திய மொழிகளுக்கான ஹேஷ்டேகுகள் புதிய போக்கை உருவாக்கின. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றவுடன், #ஜெய்ஹிந்த் என்கிற இந்தி வாசகம் ட்விட்டரின் (இந்தியப் பதிப்பில்) டிரெண்டிங் பட்டியலில் முதலாவதாக வந்தது. ஆனால், மறுநாளே தமிழ்ப் பயனர்கள் #தமிழ்வாழ்க என்றொரு ஹேஷ்டேகை ட்விட்டரில் வெளியிட்டு அதை ட்விட்டர் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். இது வேறு ஒரு விளையாட்டு! 
இந்தியின் மீது தமிழர்கள் சற்றுக் கரிசனம் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பாவம், இந்தி! இந்தியாவில் இந்தியை முதல் மொழியாகப் பேசுவோர் 18 கோடிப் பேர் என்றும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 30 கோடிப் பேர் என்றும் மத்திய இந்தி இயக்குநரகம் சொல்கிறது. இவ்வகையில், உலகில் ஏழாவது பெரிய மொழியாக இந்தி இருக்கிறது. ஆனால், வட இந்தியாவின் சில தனிப்பட்ட மொழிகளை இந்தியின் கிளைமொழிகளாகக் காட்டி, 26 கோடிப் பேர் அதைப் பேசுவதாக மற்றொரு கணக்கும் உண்டு. இந்த அடிப்படையில், எத்தனோலாக் என்கிற அமைப்பின் புள்ளிவிவரப்படி சீனம், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய மொழி இந்தி. 
வெற்றிகரமான மொழியா இந்தி? 
மொழிகளின் மதிப்பை அதன் வளர்ச்சி, சந்தை மதிப்பு, அவற்றினூடாக வெளிப்படும் அறிவுச்செல்வங்களின் மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு போன்றவற்றின் மூல மாகவே நாம் அளவிட முடியும். இந்திய அரசும் இந்தி மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் சுதந்திரத் துக்கு முன்பிருந்தே இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக ஆக்குவதற்காகப் படாத பாடுபட்டார்கள் என்பதை அறிவோம். ஆனால், அவர் களால் இந்தியை ‘வெற்றிகரமான ஒரு மொழியாக’ இன்னமும் ஆக்க முடியவில்லை. உலக மொழிகளின் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கும் தகைமை பெற்றிராத ஒரு மொழியாகத்தான் இந்தி மொழி இன்றும் இருந்து வருகிறது என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 
இந்தியின் இன்றைய பெறுமதி என்ன? விக்கிபீடியாவில் 287 மொழிகளில் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் முதலாவது இடத்தில் சுமார் 47 லட்சம் கட்டுரைகளோடு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தி 49-வது இடத்தில்தான் வருகிறது. வளர்ந்த மேலைநாட்டு மொழிகளை விட்டுவிடுங்கள், வளரும் நாடுகளின் மொழிகளான துருக்கி, கசாக், ஆர்மீனியன், இந்தோனேஷியன் போன்ற மொழிகள்கூட இந்திக்கு முன்னால் இருக்கின்றன. 1.17 லட்சம் கட்டுரைகள் மட்டுமே இந்தியில் உள்ளன. (சுமார் 67 ஆயிரம் கட்டுரைகளோடு 61-வது இடத்தில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்தியத் துணைக்கண்ட மொழிகள் இதற்கும் கீழேதான் இருக்கின்றன). இந்தப் புள்ளிவிவரத்துக்குப் பின்னால் எத்தனையோ தோல்விகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. 
3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக மொழிபெயர்ப்புத் துறை மற்றுமொரு மறைமுக ஆதாரம். இந்தச் சந்தையில் இந்தி உட்பட எல்லா இந்திய மொழிகளையும் சேர்த்தாலும் உலகச் சந்தை மதிப்பில் ஒரு சதவீதம்கூட அவை வராது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்பங்களும் இணையச் சேவைகளும் இந்தியாவில் இந்தி உட்பட எந்த மொழிகளுக்கும் உள்ளார்ந்த ஏற்பை (நேட்டிவ் சப்போர்ட்) அளிப்பதில்லை. இந்திய மொழிக் கொள்கை அதை உத்தரவாதப்படுத்துவதில்லை. இது சீனாவில் நடக்காது. அதனால்தான் சீனாவில் தனியார் சந்தையின் தேவைக்கான சீன மொழிபெயர்ப்பாளர்களில் பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்தியாவில் இந்திக்கு அது சில ஆயிரங்களைத் தாண்டாது. 
5 ஆயிரமும் 26 கோடியும்! 
கடந்த ஆண்டு புதுடெல்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின்போது, 50 ஆண்டு கால அனுபவமுள்ள இந்திப் பதிப்பாளர் ஒருவரிடம் கேட்டேன்: “இந்தியில் ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லர் என்றால், எத்தனை பிரதிகள் விற்கும்?” அவரது பதில்: “அதிகபட்சம் 5 ஆயிரம்.” 
26 கோடிப் பேர் 5,000 பிரதிகள். தமிழ்ப் பதிப்பாளர்களே, சந்தோஷப்படுங்கள்! இந்தி மொழியில் இணையதளங்களின் நிலைமை என்ன? நல்லது. இதைப் பற்றிப் பேசாமலேயே விட்டுவிடுவோம். அமேசானில் இந்தி மின்னூல்களின் கதி என்ன? மன்னிக்கவும். 
கோடிக் கணக்கில் கொட்டி அழுது, மற்றவர்கள் தலைமீது திணித்தும்கூட, இந்தி நவீன உலகில் ஒரு கேட்பாரற்ற மொழியாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல, இந்திய அரசுதான். டெல்லியில் அதிகாரத்தைக் குவித்துவைப்பதற்கான ஒரு அதிகார உத்திதான் இந்தியாவின் மொழிக்கொள்கையே தவிர, மற்றபடி அது எந்த மக்களுக்கும் - இந்தி பேசும் மக்கள் உட்பட - பயன்தரக்கூடிய ஒரு மொழிக் கொள்கை அல்ல. தொடக்கம் முதலே இந்தி ஒரு அரசியல் கருவியாகவே இங்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஒரு சமூக ஆதிக்கக் கருவியாகவே அது வடிவமைக்கப்பட்டது. அதனால்தான் பிற நாடுகளைப் போல இந்தியாவில் ‘வட்டார மொழிகள்’ மட்டுமல்ல ‘தேசிய மொழி’கூட வளரவில்லை. 
சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ராஷ்ட்ரபாஷா! 
இதிலும்கூட இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1950-களில், சீனாவில் சீன மொழியை ஆட்சிமொழியாக ஆக்கும்போது, அந்த மொழியை எளிமைப்படுத்துவதிலிருந்துதான் மாவோ அரசு தொடங்கியது. ஆனால், நேரு அரசு என்ன செய்தது? பாமர மக்களின் இந்துஸ்தானியை சம்ஸ்கிருதமயமாக்கி, அதைப் பண்டித மக்களின் மொழியாக அவரது அரசு ஆக்கியது. அதன் விளைவாக இந்தி பேசுகிற மக்களுக்கே ராஷ்ட்டிரபாஷா இரண்டாம் மொழியாக மாறிவிட்டது. அதுமட்டுல்ல, போஜ்புரி, மைதிலி, மகதி, சத்தீஸ்கரி, கார்வாலி, ராஜஸ்தானி போன்ற 50-க்கும் மேற்பட்ட தனித்தனி மொழிகளை (அவற்றில் பல இந்தியைவிட மூத்தவை, செவ்வியல் மரபுகளை உடையவை) வலுக்கட்டாயமாக இணைத்து, அவற்றின் மீது சம்ஸ்கிருத ஞானஸ்நானம் செய்து, அதன் கையில் அரசியல் சாசனக் குண்டாந்தடியைக் கொடுத்து, என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். இறுதியில் பல கோடி மக்கள் பேசிய இந்துஸ்தானியையும் சக மொழிகளையும் ஊனமாக்கியதுதான் மிச்சம். 
இந்தியைப் பரப்புவதில் நமது பிரதமர் அலாதிப் பிரியம் காட்டுகிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு செய்தி, சில நாளிதழ்களில் ஜனவரி 2-ம் வாரம் வெளிவந்தது. செய்தியின் சாரம்சம் இதுதான்: உத்தரப் பிரதேசத்தில் வாராணசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜீவ் சங்லா, மருத்துவம், பொறியியல் துறைகளுக்கான பாடநூல்களை போஜ்புரி, மைதிலி, மகஹி ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிட்டார். வாராணசியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு உத்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய இடங்களிலிருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமோ இந்தியோ சரிவரத் தெரியவில்லை என்றும், அந்த மொழிகளில் பாடம் நடத்தினால்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சங்லா குறிப்பிடுகிறார். எனவே, வேறு வழியின்றி பூர்வாஞ்சல் என்று அழைக்கப்படுகிற அந்த பகுதி மக்களின் உண்மையான தாய்மொழிகளான போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடங்களை மொழிபெயர்த்திருக்கிறார்! 
‘இந்திக்காரர்களுக்கு’ ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, இந்தியிலும் அவர்களால் பாடம் படிக்க முடியவில்லை என்றால்? அதுவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மாணவர்களால்? மண்டையில் பளீரென இறங்கவில்லையா இந்தச் செய்தி? 
‘இந்தியே இந்தியாவின் தேசிய மொழி’, ‘இந்தியே இந்தியாவில் பெரும்பான்மையோர் பேசும் மொழி’, ‘உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் இந்திதான் பேசுகிறார்கள்’ என்கிற எல்லா ‘உண்மை’களையும் இந்தச் செய்தி உடைத்தெறிகிறதே! 
மோடிஜி, பூர்வாஞ்சலிகளின் மொழிகளை இனியாவது மதித்து, அவற்றை அங்கீகரியுங்கள். இல்லையென்றால், உங்கள் தொகுதியான வாரணாசியில் ஓர் இந்திப் பிரச்சார சபாவையாவது தொடங்குங்கள்! #இந்திவாழ்க. 
- ஆழி செந்தில்நாதன், 
தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

Wednesday, 29 May 2013

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

Tuesday, 23 April 2013

அன்னை தெரசாவும் அபியும்


[அபி இக்கட்டுரை எழுதிய அ. பிரபாகரனைக் குறிக்கிறது.]

************************************************************

ரொம்ப நாளாயிற்று - ஏதேனும் எழுதி. உண்மையா பொய்யாவில் அவ்வப்போது ஏதாவது எழுதச் சொல்லி அப்பு அன்பாய்க் கேட்பார். என் சோம்பேறித்தனம் அதற்கு ஆப்பாய் வந்து நிற்கும். நண்பரும் ஆரம்பத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை பதிவேற்றம் செய்தால் சுமார் 15 காமேன்ட்டுகளாவது வரும். இப்போது அவரே எப்போதாவதுதான் எழுதுகிறார். எனவே அவரைத் தொடர்ந்தவர்களும் அவரைக் கை விட்டு விட்டார்கள். அவரே எழுதி, அவரே படித்துக் கொண்டு அவரே சிலாகிக்கும் நார்சிச மனோபாவத்திலிருந்து அவரை விடுவிக்கும் கடமை எனக்கு இருப்பதாலும், வெகுநாள் கழித்து அவரை இப்போதுதான் சந்தித்ததாலும் ஏதேனும் எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. பல மாதங்களுக்கு முன் நானும் அப்துல் கலாமும் என்று எழுதியதாக ஞாபகம். இனி கட்டுரை ....

************************************************************
சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரையை எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அவர் ஒரு கிறித்தவர் - அன்னை தெரசாவின் அபிமானி. அந்தப் புத்தகம் அன்னைத் தெரசாவைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்டிருக்கிறது. நண்பருக்கோ அன்னை தெரசாவைப் பற்றி மனதில் மிகப் பெரிய பிம்பம் இருக்கிறது. தற்காலத்தில் வாழ்ந்த தெய்வப் பிறவியாக அவரை நண்பர் பாவித்துக் கொண்டிருக்கிறார். இந்த விமர்சனத்தைப் படித்ததும் அவருக்கு நிலை கொள்ளவில்லை. குழப்பமாகப் போய் விட்டது. பிம்பம் தகர்ந்து விடுமோ என்று பயப்படுகிறார்.

பல நேரங்களில் நாம் பிம்பங்களில்தான் சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். பிம்பங்கள் நொறுங்குவது நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நொறுங்குகிற பிம்பங்களிருந்துதான் உண்மையின் வாசல் உங்களுக்குக் கொஞ்சமேனும் புலப் படும். ஆனால் உண்மையின் வெளிச்சங்கள் அவர்களது அறிவுக் கண்களை கூசச் செய்யும் என்பதால் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. பிம்பங்களிலேயே வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள்.

சிறுவயதில் நம் எல்லோருக்கும் நம் தந்தைதான் ஹீரோ. சிறு வயதில் நாங்கள் கிராமத்தில் வசித்த போது எங்கள் வீடு ஊரின் ஓரத்தில் இருந்தது. என் தந்தை வேலையின் நிமித்தம் இரவு நேரங்களில் அடிக்கடி தாமதமாக வருவார். அவர் வரும் வரை என் தாயார் வீட்டினுள் விழித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார். ஒரு கால் ஊனமான எண்பது  வயதான என் தாத்தா பாதுகாவலுக்காக கையில் தடியுடன் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார். திருடன் யாரேனும் வந்தால் வெளியே ஆம்பிளை உட்கார்ந்திருக்கிறாரே என்று என் அம்மாவுக்குத் தைரியம். என் தந்தை வந்ததும் என் அம்மா இன்னும் தைரியமாகி விடுவார்.

ஆனால் என் தாத்தாவாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் சாதாரணத் திருடன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.  இதுதான் உண்மை. சாதாரணத் திருடனை எதிர்ப்பதற்குக் கூட இருவருக்குமே உடல் வலிமை நிச்சயமாய் இல்லை. ஆனால் நாங்கள் எமது இரவுகளை சாந்தமாகக் கழிப்பதற்கு எங்களுக்கு வீரமான என் தாத்தாவின் பிம்பமோ, தந்தையின் பிம்பமோ தேவைப்பட்டது. [ப்ராய்டு கூட கடவுளைப் பற்றி பேசும் போது இது பற்றிக் குறிப்பிடுகின்றார்] இப்போது அந்தப் பிம்பம் உண்மையில்லை என்று தெரிய வந்ததால் என் தந்தை மீதோ அல்லது தாத்தா மீதோ என் அன்போ மரியாதையோ குறைந்து விட வில்லை.

என் நண்பரின் வருத்தத்தைக் கேட்ட போது என் சிறு வயதில் என் அம்மாவும் நாங்களும் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஞாபகம் வந்தது. ஏறத்தாழ எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் பிம்பங்கள் உண்டு. பிம்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. பிம்பங்கள் வைத்திருப்பதில் தவறில்லை. பிம்பங்கள் எல்லாருக்கும் கண்டிப்பாகத் தேவை. ஆனால் மனிதப் பிம்பங்களை  அதீதப் புனைவுகளோடு மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கிற போதுதான் பிரச்சனை வருகிறது. 

அன்னை தெரசா ஒன்றும் கடவுள் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் அவரை நேரடியாக ஒரு முறை பார்த்திருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னை லயோலாக் கல்லூரியில் வைத்து அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் வாகனம் வந்ததும் எல்லாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் நான் ஓடவில்லை.  சிலர் கை குலுக்கவும், ஆசீர் வாங்கவும் எத்தனித்தார்கள். நான் அதையும் செய்ய வில்லை. ஆனால் கொஞ்சம் அருகிலேயே நின்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் எனக்கு அப்போது அவ்வளவாக ஆர்வமில்லை. நான் மாணவனாக இருந்தபோது அன்னை தெரேசா குறித்து யாரோ சொன்ன ஒரு சில விமர்சனங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. 

ஆனால், பிறகு வந்த காலங்களில் அவரது சபையினர் நடத்தும் இல்லங்கள் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய ஆளுமையின் தாக்கம் அப்போது புரிந்தது. சித்தாந்த ரீதியாக அவரது சபையினரின் செயல்பாடுகள் ஒரு சிலருக்கு [அமைப்பு ரீதியான மாற்றம் பற்றி {வெறுமனே ! } பேசும் ஒரு சிலருக்கு] பிடிக்காதிருக்கலாம். ஆனால் அந்த சகோதரிகளின் அர்ப்பணமும் , ஏழைகள் மீதான கரிசனையும், சேவையும், துறவு மனப்பான்மையும் நிச்சயமாய்ப் போற்றப்படத் தக்கவை.

இப்போது நண்பர் சொன்ன நூலுக்கு வருவோம். ஒருவர் மிகப் பிரபலமாகி விட்டால் அவரது அடுத்த பக்கத்தைப் பற்றிப் பேசுவதும், விமர்சிப்பதும் பொதுவான நடைமுறைதான். இப்படி விமர்சிப்பதாலேயே விமர்சிப்பவர்களில் சிலர் பிரபலமாகி விடுவார்கள். அந்தவகையில் இந்த நூலும் அன்னை தெரசாவின் அடுத்த பக்கத்தைப் பற்றி பேசுகிறது. நூலினுடைய மொத்த நோக்கமே அதுதான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. 

இது அன்னை தெரசாவிற்கு மகிமையே சேர்க்கிறது. அவர் சாதாரண மனிதர்தான் - கடவுளல்ல என்ற உண்மையை அது தெரிந்தோ தெரியாலோ வலியுறுத்துகிறது. அதனாலேயே அவர் போற்றப்படத்தக்கவர் என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. அதாவது - குறைகளோடு வாழ்ந்த மனிதராய் இருந்தும் - தனது குறைகளைக் கடந்து அன்பை விதைத்து இவ்வளவு பெரிய தாக்கத்தைப் பலரிலே ஏற்படுத்தியிருக்கிறாரே  என்பது வியப்பாய் இருக்கிறது.

ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகள் அவர் மனிதராக எத்தனை குறைபாடுகளைக் கொண்டிருந்தார் என்பதை வைத்துச் செய்யப்பட முடியாது. மாறாக அவர் வரலாற்றில்  அவரைப் பின்பற்றுவர்களிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே செய்யப்பட வேண்டும். இது காந்தியிலிருந்து பிரபாகரன் வரை எல்லாருக்கும் பொருந்தும்.

எனவே அந்த நண்பரிடம் நான் இப்படிச் சொன்னேன் - "ஒரு மனிதர் மீது விமர்சனங்கள் வைப்பதால் அவரது  மனிதத்தன்மை மென்மேலும் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த மனிதத்தன்மையோடு அவர் செய்த பெரிய காரியங்களாலேயே அவர் மகானாகிறார் - விட்டுத்தள்ளுங்கள்."
                                                                                                         
                                                                                                            - அ . பிரபாகரன் 
*********************************************************

அபிக்கு
நார்சிச மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டிய கடமை உணர்ந்து கொண்டதனால் இன்றிலிருந்து நீர்
நார்சிசம் மீட்ட சுந்தர பாண்டியன் என்று அழைக்கப் படுவாயாக!


[அபி என்பது திகப் பிரசங்கி என்பதையும் குறிக்கும்]
*********************************************************

Sunday, 14 April 2013

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான்புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

Wednesday, 20 March 2013

தமிழின எழுச்சியும் மக்களாட்சியும்

இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]



இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]


Wednesday, 13 February 2013

தடைகளுக்குப் பின்னால் ....



தமிழ்த் திரை உலகத்தில் உதித்திருக்கிற இந்த தடை விவகாரங்கள் தமிழக மக்களை பல்வேறு விதத்தில் கூறு போட்டிருக்கிறது. தன்னுடைய நிலைப்பாட்டைச் சார்ந்து தனது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் தான் அறிந்தோ அறியாமலோ பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்குப் பின்னால் வேண்டுமென்றே இனத்தைக் கூறு போடும் சக்திகள் இருப்பதை இந்தப் பலர் அறியாமல் இருப்பது வேதனைதான்.
உண்மையிலேயே அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தனது சமூகம் ஒரு குரல் எழுப்பியது என்பதற்காக அதனோடு சேர்ந்த இஸ்லாமிய சமூகம் ஒரு புறம் – கமலின் விஸ்வரூபத்தை தடை செய்வதா – எனில் அமீரின் ஆதி பகவானைத் தடை செய் என்று இந்து முன்னணி வீரர்கள் ஒரு புறம் – எல்லாரும் பாதிக்கப்பட்டால் கிறித்தவ சமூகம் என்னாவது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சில கிறித்தவர்கள் ஒரு புறம் – இந்த தடைகளின் தேவைகள் என்ன? எதற்காக இந்தப் போராட்டங்கள்? இவைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
  • -    ஒவ்வொரு மனிதனின் அடையாளமும் மிக முக்கியம். ‘அடையாளப் படுத்துதல்’ என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவைகளின் தாக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது இரு நூற்றாண்டுகளாகத் தான். இப்போது தனது அடையாளம் என்பது தனது இனத்தைத் தாண்டி உலக அளவில் அல்லது இந்திய அளவில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சி தான் இது.
  • -    தனக்கான எதிரி யார் என்பதை இஸ்லாமியர்கள் கட்டமைக்கிற முயற்சியில் இந்துக்களை எதிரிகளாகக் கருதி தங்களது தமிழ் இனத்தின் அடையாளத்தை மறந்து உலக இஸ்லாமியர்களோடு ஒன்று படுத்துகிற முயற்சி என்பது ஒரு புறம். 
  •   தங்களது எதிரிகளாக இஸ்லாமியர்களை உருவாக்கி அதன் வழியாக இந்திய இந்துக்களாக, இந்து, இந்தியா என்ற அடையாளத்திற்குள் வரையறுத்து தங்களது சொந்த இன அடையாளத்திற்கு எதிரான ஒரு நிலைப் பாட்டையும் எடுக்கிறார்கள். இவர்களுடைய அந்தக் கட்டமைப்பில்தான் இஸ்லாமியர்கள் அந்த நிலைப்பாட்டிற்குத் தள்ளப் படுகிறார்கள் என்பதும் உண்மைதான். 
  •   இதில் கிறித்தவத்தையும், கிறித்தவர்களையும் சில சமயங்களில் தங்களது எதிரிகளாக, வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர்களோடு அடையாளப் படுத்தப் படுவதில் தங்களது தமிழின அடையாளத்தை மறக்கவும் சமயத்தின் அடையாளத்தை முன்னிறுத்தவும் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். அதனாலேயே தேவையற்ற நேரங்களில் கூட, சிலர் கிறித்தவ அடையாளத்தை முன்னே வைக்கிறார்கள் – கடல் திரைப்படத் தடை வழியாக.
  •  அடிப்படையில் ஒரு மனிதன் தனது சமூகக் குழு உறுப்பினராகவே இந்த மண்ணில் கால் வைக்கிறான். மனித அடையாளத்தின் அடிப்படை என்றால் அது அவர் சார்ந்த இனம்தான். இதுதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதே வேளை சமயம் – மதம் என்பது ஒரு மனித வாழ்வின் தொடர்ச்சி அல்லது இலக்கு என்கிற வகையில் அதுவும் மிக முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. தனது அடிப்படை அடையாளம் தகர்க்கப் படுகிற போது, தன்னை வாழ்வின் இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் சமய அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது தமிழ் இன அடையாளம் என்பது அழிக்கப் பட்டு, அவனை சாதிய வழியில் பிரித்த போது தன்னை இந்து சமயத்தின் புறந்தள்ளப் பட்ட ஒரு இனமாகவே அடையாளப் படுத்த தள்ளப்பட்டார்கள். எனவே தலித் அடையாளம் என்பது தேவையும், அவசியமும் ஆகிறது. ஆனால் இதில் தமிழ் இன அடையாளம் நமது அடிப்படை என்பதும் முன் வைக்கப் படுகிற போது – இந்திய இந்துக்கள் மீண்டும் அனைவரையும் சமய அடிப்படையில் ஒன்று சேர்க்கவும் தங்களது அடிப்படை அடையாளத்தை மறக்கவும் கையிலெடுத்ததுதான் இந்துத்துவம். அதற்காக கட்டமைக்கப் பட்ட எதிரிகள்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்.
  •   ஒரு பயங்கரமான எதிரி கட்டமைக்கப் படுகிற போது, அந்த எதிரியை எதிர் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள், அடிப்படை அடையாளத்தை மறந்து ‘மத’ அடிப்படைவாதத்தை முன்னெடுக்க கட்டமைக்கப் பட்ட எதிரிகள் எதைச் செய்தாலும் அதனை தவறாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் பயங்கரமான எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
  • -    இதைத்தான் இந்த திரைப்படத் தடை விவகாரங்களில் பார்க்கலாம். விஸ்வரூபம் தடைக்குப் பின்னால் இருக்கிற அரசியலை அலச தனிக்கட்டுரை அவசியம். ஆனால் இது நடந்த பிறகு ஒரு தொலைக் காட்சியின் விவாத மேடையில் ஆதி பகவானைத் தடை செய்ய கோரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சில காரணங்கள்: அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நாங்கள் புண்பட மாட்டோமா? அது மட்டுமல்ல – வள்ளுவர் மைலாப்பூரில் இருந்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை – என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.   இறுதிக் காரணம்தான் மிக முக்கியமானது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது ஆனால் வள்ளுவர் என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மைலாப்பூரில் மட்டுமல்ல – தமிழகத்திலே இல்லை என்பதற்கான முதல் படிதான்.
  •   இதுதான் இங்கே காரணம். மீண்டும் மீண்டும் ஆதிக்க சக்தியின் கைகளையும் கால்களையும் விரித்து அடிமையாக்கும் நவீன அடிமைத்தனம். அதுதான் மதங்களின் அடையாளத்தை முன்னிறுத்தும் தந்திரம்.

- வலை விரிப்பவர்களின் தந்திரம் தெரியாமல் வலையில் மாட்டும் பறவைகள் போல தமிழ் இனம் மத வலையில் மாட்டுவது பரிதாபத்துக்குரியது. இதுதான் காவிரி நீர் மறுப்பில் கர்நாடகாவுக்கு எதிராக மௌனம் சாதிக்கவும், முல்லைப் பெரியார் விவகாரத்தில் விலகி இருக்கவும், அணுமின் உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பேசாமல் இருப்பதற்கும் வழி வகுக்கிறது.

-    இத்தகைய நிலையில் நம்மை வைத்து நமது அடிப்படை அடையாளத்தை மறக்கடிக்கச் செய்வதே நவீன இந்துத்துவத்தின் சாமர்த்தியம். இதை எதிர்ப்பதற்கான வழி தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.


Friday, 8 February 2013

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

Tuesday, 21 February 2012

மாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு


மாயன் காலண்டர்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது.

மாயன் காலண்டறென்ன மாயன் காலண்டர்
நம் பெரம்பலூர் சாமியார் வேறு சொல்லியிருக்கிறார்
இந்த ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று...
முழுதும் அழியா விட்டாலும் முக்கால்வாசியாவது அழுந்து விடும் அப்படியே இல்லையென்றாலும் அரைவாசியாவது அழிந்து விடும் என்கிறார்கள்.

அறிவியல் வயப்பட்டு இன்றைய அறிவியல் அறிஞர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிற மேற்குலக நாடுகளின் அறிஞர்கள், பழங்கால மக்களின் ஞானம், நம்பிக்கைகள், அவர்களது விஞ்ஞான அறிவை மூட நம்பிக்கை என்று சொல்லும் இந்த மேற்குலக வாதிகள் இந்தக் காலண்டரின் குறிப்பில் ஆழ்ந்து இருப்பது - அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

என்னதான் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் நம்மை மீறி நம் மனதுக்குள் சென்று விடுகின்றன.
பகுத்தறிவு பேசினாலும் மஞ்சள் துண்டு தேவைப்படுவது மாதிரி..
திராவிடக் கட்சியின் தலைவி என்றாலும் சோவின் தயவில் இருப்பது மாதிரி...
சில விஷயங்கள் நம்மை அறியாமலே உள்ளே சென்று விடுகின்றன..
மாயன் காலண்டர்  மீதான நம்பிக்கையும்தான்..
அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருப்பதனால்... உலகம் அழிவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டார்களா என்ன? இல்லை.
ஒருவர் படமெடுத்தார்... நல்ல வரவு... அவருக்கென்ன...
...
மனிதர்கள் எப்போது உலகில் வாழத் தொடங்கினார்களோ 
அப்போதே உலகம் முடியத் தொடங்கி விட்டது.
ஒருவன் கண்ணை மூடும் போது உலகம் முடிந்து போகிறது. 
அவ்வளவுதான். அதில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.
என்று நான் முடிகிறேனோ அன்றே உலகம் முடியத் தான் போகிறது.
மாயன் என்ன மாயாண்டி என்ன...
என் உயிர் பிரியும் நேரம் நான் உலகைப் பிரியும் நேரம்
அல்லது
உலகம் என்னைப்பிரியும் நேரம்.

உலகம் முடிவதும் தொடர்வதும் அதன் கையில்...
அதைக் காப்பாற்ற நாம் தேவையில்லை.
அதற்காக நாம் அதை அழிக்கத் தேவையில்லை.
எனக்கான உலகம் என்னோடு முடிகிறதென்பதால்
இந்த உலகை என்னோடு முடிக்க வேண்டிய அவசியமில்லை.
அணு உலைகள் அதை அவசரமாய் அழிக்கும்.
அணுகுண்டுகள் அழிக்கும்,
எப்போதும் இந்த உலகம் இருக்காதேன்பதற்காய்
விரைவாய் அழிக்க வேண்டுமா.


எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
எல்லா வருடங்களும் நல்ல வருடங்களே.
நல்லவைகளும் தீயவைகளும்
மனிதர் நம் கையிலே.


மாய உலகம்
"என்ன ராஜேஷ் ஏன் இந்த முடிவு? வாருங்கள்...  மீண்டும் ... விரைவில் ..." என்று மாய உலகம் ராஜேஷின் பின்னூட்டத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னூட்டம் இட்டேன். ஆனால் நண்பர் மீண்டு இங்கு வரமுடியாத தூரம் சென்றதாக அறிந்த செய்தி மனதை காயப்படுத்தியது. அவரது இறுதிப் பதிவின் பாடல்கள் எல்லாம் மாய உலகத்தை நினைவுபடுத்துவதாகவே இருந்தது.
இந்த பதிவை அவருக்குச் சமர்பிக்கிறேன்.

மணல் வீடு -

கடற்கரையில் நாமே கட்டிய வீட்டை நாமே இடிப்பதில்லையா? பத்திரமாய் நெடுநாள் இருக்கும் என்று எண்ணுவோம். ஆனால் எதிர் பாராத நேரத்தில் அலை வந்து அடித்துப் போகும். கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஜாலியாக யாரோ அதை உதைத்து  விட்டுப் போவதையும் காண நேரும். மாய[ன்] உலகத்தைப் பற்றி நினைக்கும் போது கடற்கரை மணல் வீடு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


Tuesday, 31 January 2012

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.  

Monday, 28 November 2011

அது என்ன 999 ?


டேம் பற்றிய படம் - பற்றிய தடை சரியில்லை என்று சொன்ன போது, கேரளா உள் குத்தோடும், நடக்கிறது என்று எழுதியதற்கு - புது அணை கட்டுவதில் தப்பென்ன என்று கேட்டார்கள்.

அதற்கு முன்பு - இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை பற்றிய படம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த 999 என்பது சில உள் குத்தோடு எடுக்கப்பட்டது என்று சொன்னோம். இந்த எண் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்த வருடங்களைக் குறிக்கிற எண்.

சின்ன விளக்கம் - நீங்கள் யாரிடமோ அல்லது உங்களிடம் யாரோ சில ஆண்டுக்கான ஒப்பந்தத்தை போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட காலம் முடியும் முன்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதென்றால், சட்டச் சிக்கல்கள் வரும். அல்லது நீங்கள் போட்ட ஒப்பந்தத்தை நீங்களே முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதற்காக நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஏறக்குறைய இன்னும் எண்ணூறு ஆண்டுகளாவது கேரளா அரசு காத்திருக்க வேண்டும். அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் கூடாது அதே சமயம் ஒப்பந்தத்தையும் முறிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.... அணை வலு இழந்து விட்டது.... மக்கள் பீதி... என்கிற ஒன்றில்தான் அதைச் சாதிக்க முடியும். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

வரலாற்றில் சில பிழைகள், மிகப் பெரிய சிக்கல்களாக எதிர் காலச் சந்ததியினருக்கு மாறிப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. அதாவது இப்போது அணை கட்டப் பட்டிருக்கிற இடம் திருவாங்குருக்குச் சொந்தமானது என்று நினைத்து தவறாக நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில், வருடா வருடம் ஒப்பந்தப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறது கேரளா. இதை மீறும் வகையில் இடுக்கியில் ஒரு அணை வேறு கட்டியது. அதற்கான நீர் வரத்து இல்லாத காரணத்தால் இந்த புளுகைக் கிளப்பி விடுகிறது.

வீணாய்க் கடலில் கலக்கும் ஆற்றை தமிழகம் பகுதியில் திருப்பிவிட ஒரு அணை கட்டப்படவும், அதற்கு சரியான இடம் தேடும் பணியில் இப்போது அணை கட்டப்பட்டிருக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஒப்பந்தப் பணம் கட்டி... அணையைப் பராமரித்து வரும் தமிழகம் ... இடையில் இவர்கள் சொன்ன புளுகிற்காக மேலும் பனிரெண்டு கோடிகளுக்கு மேல் செலவழித்தது. இறுதியாக முடியவேண்டிய ஒரு வேலையை செய்ய விடாமல் கேரள காட்டு அதிகாரிகள் - தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் பாரஸ்ட் ஆபிசர்ஸ் - வழக்கு போட்டு சிலரை மானபங்கப் படுத்தவும் செய்ததார்கள். இந்த ஒப்பந்தம் மற்றும் அணையை ஒன்றுமில்லாமல் செய்தால்தான் அவர்களுக்கு இடுக்கியிலோ அல்லது அவர்கள் புதிதாய்க் கட்டும் அனையிலிருந்தோ மின்சார உற்பத்தியைத் தொடங்க முடியும். இதைத் தான் நான் சகுனி வேலை என்று கடந்த பதிவில் குறிப்பிட்டேன்.

இப்படித் தவாறாக திருவாங்கூர் சமஸ்தானத்த்திற்கு சொந்தமான பகுதி என்று நினைத்ததுப் போடப் பட்ட ஒப்பந்த்தம் அதன் பிழையில்தான் அதிகமாக தமிழர்கள் வசித்த அந்தப் பகுதிகள் எல்லாம் சுதந்திரம் பெற்ற போது கேரளாவிற்குச் சென்றது. அந்த ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்வார்களேயானால், அந்தப் பகுதிகள் எல்லாம் பிறகு தமிழர்களின் பகுதி என்றாகிவிடும். எனவே ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்ல முடியாது. அதனால் ஒரே வழி இந்த ஆணை வலுவிழந்தது என்று சொல்வதுதான் அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

உண்மை நிலவரம் அறிய - மற்றும் முழு வரலாற்றை அறிய பின்வரும் கானொளியில் பாருங்கள்.
இதை அறியத்தந்த நண்பர் பூபதி பெருமாள் [கடந்த பதிவில் பின்னூட்டத்தில்] மற்றும் வீரா இளவரசு அவர்களுக்கு நன்றி.



The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.

கொசுறு

கூடங்குளம் வெடித்தால் என்ன ஆகும் என்று யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும். 
ஏனெனில் உண்மை பேசும் டாகுமெண்டரி மற்றும் போராட்டங்களை விட இப்படி சென்சேஷனல் படங்கள்தான் விளைவை ஏற்படுத்துகின்றது.... ஒருவேளை அப்படி கூடங்குளம் பற்றி எடுத்தால்
ஹாலிவுட் கனக்ஷன் இருந்தால் நல்லது. 
ஆனால் அதற்கு கேரளா உதவி செய்யுமா?

Friday, 25 November 2011

அணை பற்றிய படத்திற்கான தடை சரியா?

உடையும் அணை பற்றி ஊரே பற்றி எரிகிற மாதிரி விவாதம். கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்கள். தமிழக முதல்வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி தடை செய்திருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கான எதிர்வினை ஆற்ற வேண்டியது அல்லது எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்தான் - ஆனால் தடை செய்து எதிர்ப்பைக் காட்டுவது சரியானது அல்ல என்பதனால் மட்டுமல்ல - இந்தத் தடையோடு நம் அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாரைப் பற்றி மறந்து போவார்களே என்பதனாலும்தான்.

*     *      *      *      *      *      *     *     *     *    *     *     *

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் என்பது பற்றி விரிவாக எழுத தனிப் பதிவோ அல்லது தொடர் பதிவோ அவசியம் என்பதனால் இதில் அதைப் பற்றி எதுவும் எழுதப் போவது இல்லைஅது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சுய நல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பலப் பல வழிகளில் முயல்கிறது முயலும் என்பதையும் யாம் அறிவோம்.
அது ஒருக்காலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனித்தது இல்லை என்பதோடு அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி எல்லாம் அது சிந்தித்ததும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
  
   *     *     *     *     *     *     *      *     *     *    *     *     *

இந்தத் திரைப் படம் உள் நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலும், அல்லது கேரள அரசு ஆசிரோடே இந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தாலும், இந்த ராய் தனது கடின உழைப்பினால் மட்டுமே ஹாலிவுட் வரை சென்று வார்னர் சகோதரர்களைப் பார்த்து தயாரித்தார்  என்பது பொய்யாகவே இருந்தாலும் - டேம் 999  தடை செய்வது தவறு மற்றும் நியாயமற்றது என்று தோன்றுகிறது. ஏன்? ஒரு திரைப் படம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விதத்தில் மட்டும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் என்பதில் இந்தத் தடை நியாயமற்றது.
டா வின்சி கோட் என்கிற ஒரு படம் வந்தபோது கிறித்தவ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். சில சிறப்புக் காட்சிகள் வெளியிட்டு பார்த்தார்கள் - என்ன நடந்தது அந்தப் படமும் அந்தப் புத்தகமும் இன்னும் பிரபலமானது. இந்தப் படத்திற்கான இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா?

டேம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது [என்ன நம்பர் அது - இதற்குப் பின்னால்தான் கேரள அரசின் மற்றும் இயக்குனரின் சகுனித்தனம் ஒளிந்திருக்கிறது] என்ற படம் ஏதோ ஒரு ராயால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வார்னர் சகோதரர்கள் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் தரம் என்று சொல்லப் படுகிறது.

கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட - அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா... தடை என்பதை விட்டுவிட்டு -- அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமல்லவா...

பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தடை கோருகிறார்கள்.? இந்தப் பிரச்சனையைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். எனவே தடை செய் என்கிறார்கள். இதையே கேரள முதல்வர் கிராபிக்ஸ் செய்து தனது வலைப் பக்கத்தில் போட்டபோது தமிழக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் செயல்பாடு எப்படி இருந்தது? வை.கோ வைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசினார்களா - என்ன செய்ய முடிந்தது. தங்களது எண்ணத்தை, நிறைவேற்ற பரவலாக்க, இன்னும் பரவலாக்கவும், ஒட்டு மொத்த கேரளாவும் - கட்சி வேறுபாடு இன்றி - முடிவு செய்கிறார்கள்.

தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்தி விட்டால் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் தன் பங்கிற்கான கடமை முடிந்து விட்டது என்று சொல்லி மீண்டும் இந்த விஷயத்தை நீதி மன்றத்தின் பார்வைக்கு விடலாம். நாம் அமைதியாய் இருப்போம். அப்புறம் அவர்கள் நீதி மன்றத்தின் கருத்துக்களை சட்டை செய்யாமல் வேறு ஏதாவது செய்வார்கள்... அப்போதெல்லாம் நாம் கட்சி சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம்.

எது எப்படி இருந்தாலும் வெறும் கோஷங்கள் போடுவதால், அல்லது தடை செய்வதுதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு அப்புறம் அந்தத் தீர்மானங்களை குப்பையில் போடுவதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்கிற [பேருக்காவது] அளவிலாவது நாம் இருக்க வேண்டியது அவசியம். அவரால் ஒன்றை மிக்ஸ் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் கேரளா பற்றி ஏதாவது மிக்ஸ் செய்ய ஹாலிவுட்டுக்கு ஆள் அனுப்புங்கள் - அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்... நமக்குள் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது...

கேரளா சகோதரர்கள் எங்கே இருந்தாலும் கேரள அரசின் மற்றும் தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தும் விதத்தைக் நாம் கற்றுக் கொண்டாலே போதும் - இங்கே தமிழர் நலனை அழிப்பதற்கென்றே தமிழக அரசும். மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது - இதில் இந்த DAMN dam 999  அதைவிடப் பெரியதாய் என்ன செய்து விடப் போகிறது?


கொசுறு? 1 
கேட்பாரா நாராயணசாமி?
யார் இந்த ராய் - ஹாலிவுட்டில் படம் எடுக்கும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்? கேரளா அரசின் உதவியில்லாமல் இப்படிப் படம் எடுக்க முடியுமா?  கணக்கு வழக்கு வைத்திருக்கிறாயா என்று அவரிடம் நாராயணசாமி கேட்பாரா? .... கேட்டாத் தெரியும் எல்லா நாயரும் சேர்ந்தே அடிப்பாங்க.

கொசுறு 2 
படிப்பினை - பிளவை ஏற்படுத்துமா?
எத்தனைக் கேரளா சகோதரர்கள் தமிழ் நாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து தமிழர்களின் உணர்வுகளோடு இருக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும், தங்களது பூர்விக சொத்தும், மனதும் எப்போதும் கேரளா விடம் மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், என்றைக்காவது இங்கேயே வாழும் அந்தச் சகோதரர்கள் தமிழர் நலுனுக்காக குரல் கொடுத்தது உண்டா... இந்தியப் பிரஜை என்பதற்காக அல்ல, நாம் இங்கேதானே வசிக்கிறோம் அந்த நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் என்பதற்காக அல்ல, குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது.... ஏற்கனவே அவர்கள் பிளந்துதானே இருக்கிறார்கள் அப்புறம் என்ன பெரிதாய் இந்தப் படம் வந்து பிளவை ஏற்படுத்தப் போகிறது. அப்புறம் எதுக்குப் பயப்படனும்?

கொசுறு 3 
அதுமட்டுமல்ல இந்த நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிற பாட புத்தகங்கள் இன்னும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் என்னத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப் படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் --- இன்ன பிற இத்யாதி இத்தியாதிகளை எல்லாம் தடை செய்ய வேண்டியிருக்கிறது.   
தினமலரும்தான் பிரிவினை மற்றும் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் தினம் செய்தியை வெளியிடுகிறது - அண்மையில் கூட ஒரு மரண தண்டனை கொடுக்கப்பட்டதற்காக தமிழ் ஆர்வலர்கள் கேரளா அரசுக்கு எதிராக எழ வேண்டாமா என்று கேட்டது.....அதற்காக யாராவது அதைத் தடை செய்ய வேண்டுமெண்டு குரல் கொடுக்கிறார்களா என்ன...?


Monday, 21 November 2011

நேர்மை + எளிமை = கலாம் ! ?


நேர்மை + எளிமை = கலாம் ! ?        
                           -    அ. பிரபாகரன் 
அப்துல் கலாம் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. உங்களில் சிலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. எனக்கு எப்போதுமே மனிதர்கள் அதீதமாக சிலாகிக்கப்படுவதில் உடன்பாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எனக்கென்று பிடித்த தலைவர் என்றோ, நடிகர் என்றோ, கட்சி என்றோ யாரும் இல்லை. எல்லா மனிதர்களுமே குறைகளோடும் நிறைகளோடும் வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் தம் குறைகளை நேர்மையான விதத்தில் அணுகுவதாலேயே உயர்ந்து நிற்கின்றார்கள்

அப்துல் கலாம் சில மாதங்களுக்கு முன் எம் கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்தார். அவர் வருகை குறித்து எங்கள் நிறுவனம் மிகவும் பரபரப்பாயிருந்தது. பல முன்னேற்பாடுகள் நடந்தன. அவர் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே அவரது பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வந்து பார்த்து சென்றார்கள். அவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பிருந்தே மெட்டல் டிடெக்டர்களோடும், பயமுறுத்தும் மோப்ப நாயோடும் வந்து நின்று எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தனர். அவர் உரை நிகழ்த்தப்பட்ட அரங்கின் வாயிலில் தற்காலிக சோதனை வாயில்கள் அமைத்து, உடல் முழுவதையும் தடவிப் பார்த்து அனுப்பினர். முழுவதும் நிரம்பியிருந்த அரங்கத்தில் அங்கு பயிற்றுவிக்கும் எங்கள் எல்லோருக்கும் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் பரபரப்பும், நிறைய அலட்சியமுமாக அமர்ந்திருந்தேன். குறித்த நேரத்திற்கு கொஞ்சமும் தவறாமல் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வந்தார். மேடையில் ஏறியவுடனேயே தனக்கென்று தனியாகப் போடப்பட்டிருந்த வி. . பி. நாற்காலியை கோபத்துடன் பார்த்து அதை அப்புறப்படுத்தச் சொன்னார். மேடையில் மற்றவர்களுக்குப் போடப்பட்டிருந்த சாதாரண நாற்காலி கொண்டுவரப்பட்டது. எல்லோரும் அதிசயித்தார்கள் 'எவ்வளவு எளிமையாய் இருக்கிறார்' என்று. எனக்கு இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படிப்பட்ட gimmick களை வியப்போடு பார்ப்பதில்லை
காரணம், சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும்
 காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.

கலாமின் ஆளுமை குறித்து ஏதோ ஒரு விதத்தில் விமர்சன மனநிலையோடு உட்கார்ந்திருந்த என்னை அவரது பேச்சு ஈர்த்தது. அன்று அவர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிப் பேசினார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்த்தப்பட்ட உரையில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாட்டோடு கவனித்த உரைகளில் ஒன்றாக அது அமைந்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புலப்பட்டது.

அவரது உரையின் ஈர்ப்புக்குக் காரணம் அதில் அடிப்படையான நேர்மை இருந்தது. வெறுமனே கோசங்களாக அமையாமல் அவரது நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருந்தது. பலருக்கும் அவரது உரை பிடித்திருந்தாலும் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது இப்போதும் வியப்புதான். பிறகு விழா இறுதியில் அவரோடு குழுவாக புகைப்படம் எடுக்க அவரருகில் வந்தபோது புன்னகைத்தார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த கலாம் கடந்த வாரம் கூடங்குளம் சென்று அதே போன்ற ஓர் உரையைப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்திருக்கிறார். அதற்கு கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
கூடங்குளம் பற்றி நான் பேசப்போவதில்லை. அதுகுறித்த உள் விவகாரங்களில் நான் சென்று விவாதிக்கிற அளவுக்கு எனக்கு விபரமில்லை. அதை மக்கள் மேல் உண்மையிலேயே அக்கறையுள்ள நிபுணர்களுக்கு விட்டுவிடுவோம். இப்போது நான் சொல்ல வந்தது கலாமின் கருத்து பற்றி
 கலாம் சொன்ன கருத்துகளில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் ஏனென்று (16 . 11 11 ) தினமணியில் வந்திருந்த நெடுமாறனின் கடிதத்தையும், கடந்த வாரம் கல்கியில் வந்திருந்த ஞாநியின் கடிதத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் கலாமின் இந்தப் பேட்டியிலும்கூட ஒரு நேர்மை இருப்பதாக உணர்கிறேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கருத்து உள்ளவர்கள்தான். ஆனால் சொல்ல மாட்டார்கள். கலாம் நேர்மையாகத் தன கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரைச்சொல்லவைத்தவர்கள் நேர்மையில்லாதவர்கள். அடிப்படையில் நாணயமோ மக்கள் கரிசனையோ இல்லாதவர்கள். தாங்கள் சொல்லும் ஒரு கருத்தை இப்படி அடிப்படை நாணயமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான பிம்பங்களைக்கொண்டு சொல்ல வைப்பது ஜனநாயகத்தில் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். கலாம் போன்ற பிம்பங்கள் இதற்குதான் பயன் படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி (அவரது முகத்தை தொலைக்காட்சியில் பாரத்தால் ........................  என்னால் தவிர்க்க முடியவில்லை) காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். கொஞ்சம்கூட நேர்மையற்றதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது அவரது பேட்டி. இந்திய ஜனநாயகம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைச் சொல்லுவதாக அவரது பேட்டி அமைகிறது. கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் கணக்கு வழக்கை ஆராயவேண்டும் என்கிறார். இப்படிப் பேட்டி கொடுக்கின்ற அந்த நொடியில் அவரது கணக்கு வழக்கை ஆராய்ந்தால் ஒரு அரசியல்வாதியான அவரிடம் எவ்வளவு பொய்கள் இருக்கும்! ஆனால் அதிகாரம் தந்த கொழுப்பிலும் இந்திய ஜனநாயகத்தின் பாரபட்ச அமைப்பிலும் நம்பிக்கைகொண்டு எந்த லஜ்ஜையுமின்றி திராணியோடு பேசுகிறார்.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? எல்லா காங்கிரஸ்காரர்களின் வருமானவரியையும் கொண்டு வாருங்கள். பாப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளத்தின் நியாயம் எளிமையானது.
அது நம் நாட்டின் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது.
இந்தப் பிரச்சினையை நாம் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அணுகவேண்டும்.
அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்க, இதைப் பத்து லட்சம் (சொல்லப் போனால் 17 லட்சம்) மக்களின் ஜனநாயகப் பிரச்சினையாகவும், வாழ்க்கைப் பிரச்சினையாகவும் பார்க்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது எவ்வளவு கொடுமை. இந்தப் பயமெல்லாம் தேவையற்றது என்று அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடும்.ஆனால், பெரும்பான்மையினர் அங்கு அப்படிதானே நினைக்கிறார்கள்.
அவர்களெல்லாம் முட்டாள்கள் அறியாமையினால் சொல்கிறார்கள் என்று நீங்கள் வாதிட்டீர்களேன்றால் அது முடியாது. பெரும்பான்மையினர் குரலை நீங்கள் மதிக்கத்தான் வேண்டும். ஜனநாயகம் என்பதே நம் நாட்டில் பெரும்பான்மை வாதம்தான். இந்தப்பெரும்பான்மையினரின் அறியாமையினால்தானே நாரயணசாமி போன்ற .... களெல்லாம் ஜெயித்து அமைச்சராகி பேட்டி எல்லாம் கொடுக்க முடிகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இலங்கை கொலைப் புகழ் சோனியா, பேடி எல்லாம் அதிகாரத்தை சுவைக்க முடிகிறது. அப்போது மட்டும் பெரும்பான்யினரின் அறியாமை இனிக்கிறது, இப்போது கசக்கிறதா?
பி. கு. இப்படியெல்லாம் நான் சொல்லுவதால் அணு எதிர்ப்புக்கு வலு சேர்க்க வேறு கருத்து இல்லையென்று தவறாகப் புரியாதீர்கள்.
                                         - அ. பிரபாகரன்
அப்துல்கலாமைப் பார்க்கச் சென்ற உங்களைத் தடவிப் பார்த்தார்கள். அமேரிக்கா சென்ற அப்துல்கலாமை அங்கே தடவிப் பார்த்தார்களாம்ல...