Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday, 16 July 2013

நான்கு தலைவர்கள்


நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து நிற்பது போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடப்பது மிக அரிது. இந்தியாவில் இது போன்ற நான்கு பிரதம மந்திரிகள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இப்படி இருப்பது நிச்சயமாக நடக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே நடந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ...


அமெரிக்காவில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எப்போதும் தங்களது நாட்டு மக்களின் நலன், நாட்டு மக்களின் சுதந்திரம், உலக நாடுகளிடம் தங்களது அதிகாரத்தைக் காட்டுவது... தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாகக் காட்டுவது எல்லாவற்றிலும் ஒன்றாகத் தான் இருப்பார்கள்...

வி பிலீவ் இன் சேன்ஜ்  -- என்று சொன்ன ஒபாமா மிகப் பெரிய முன்மாதிரியாகத் தெரிந்தார்... ஆனால் வெளி நாடுகளின் மீது போர்ட் தொடுத்த புஷ்ஷுக்கும் .. வெளி நாடுகளின் இரகசியங்களை ஆராய்ந்த ஒபாமாவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

எட்வர்ட் ஸ்நோடவுன் NSA செய்த வண்டவாளங்களை வெளியில் கொண்டு வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல் அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்... எந்த நாடும் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கிறது...


எல்லா நாட்டுத் தலைவர்களும் செகுரிடி நிறுவன ங்களும் இதைத் தானே செய்கின்றன... அப்புறம் எப்படி எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்?

இது ஒபாமா செய்தது மட்டுமல்ல அவருக்கு முன்பு இருந்த அத்தனை தலைவர்களும் இதைத்தான் செய்தார்கள்...நம்ம தலைவர்கள் அடுத்தவன் செய்த தவறை மட்டும் சுட்டிக் காட்டுவான்... இவர்கள் அந்த விஷயத்தில் யாரும் எதையும் வெளியிடுவதில்லை.. கூட்டுக் களவாணிகள்... அவர்களும் எல்லா நாட்டுத் தலைவர்களும் தான்...

ஆனால் வாய் கிழியப் பேசுவார்கள்.... நாங்கள் தனி மனித சுதந்திரத்தை மதிக்கிறோம் என்று... 
நமக்கெல்லாம் அமெரிக்காதான் முன்மாதிரி... 

Friday, 8 February 2013

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

Thursday, 26 July 2012

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

Wednesday, 4 January 2012

முதல் நாள்

முதல் நாள் மழை பெய்தால் 
வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
செழிப்பாய் இருக்குமாம் நாடு
– பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

முதல் நாள் அழுதால் 
வருடம் முழுதும் அழுவோமாம். 
மனது சொல்லுகிறது.

ஆனால்
முதல் நாள் குடித்தால் 
வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
மனதும் சொல்ல மறுக்கிறது 
அரசும் சொல்ல மறுக்கிறது.


நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


Sunday, 1 January 2012

கனவு மெய்ப்பட வேண்டும் - 2012


கனவு மெய்ப்பட வேண்டும். 
மார்டின் லூதர் கிங்கின் கனவோ, பாரதியின் கனவோ, அல்லது கலாமின் கனவோ மட்டும்தான் மெய்ப்பட வேண்டுமென்றில்லை.


நம் ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் இருக்கும். இல்லைஎன்று மறுப்பதற்கில்லை. எல்லா சமயங்களிலும் அது வெறும் தொழில் சார்ந்த அல்லது என்ன வாங்குவது என்கிற கனவுகளையும் தாண்டி இருக்கும்.


அந்தக் கனவுகள் மெய்ப்பட முயல்வோம். 
வெறும் கனவுகள் என்ன செய்யும்.



புத்தாண்டு வாழ்த்துக்கள்.


"கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
...

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்"

-பாரதியார்  


கொசுறு:
இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவதில் அதிகமான ஈர்ப்பு இருந்ததில்லைதான்.  உலகம் முழுவதும் கொண்டாடுகிற இந்த நாளில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
என்ன தைக்கு மீண்டும் சொல்லிவிட்டால் போகிறது.

HAPPY NEW YEAR
 
Glückliches neues Jahr 
 Bonne année

Thursday, 10 November 2011

நிலவும் ஜூபிடரும் அருகருகே பிரகாசமாய்

ஒரு மாறுதலுக்காக - அறிவியல்

நிலா, சந்திரன், பௌர்ணமி, பூரண நிலவு என்று முழு நிலவு பல பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள முழு நிலவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இன்று இரவு ஒன்பதாம் தேதி [அநேகமாக அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இன்னும் இரவு வரவில்லை] முழு நிலவும் ஜுபிடரும் [வியாழன்] அருகருகே இருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே நான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது அறையில் இருக்கும் மிகப் பெரிய சன்னல் வழியாக அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே எழுதுகிறேன்.

சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு என்பதை நாம் படித்திருந்தாலும், இப்போது எட்டு கிரகங்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் [நமது பள்ளிக் கூடங்களில் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?]. புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இருக்கிற எட்டு கிரகங்களில் மிகப் பெரிய கிரகமான ஜுபிடர் நிலவுக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

நவம்பர் மாத முழு நிலவை Hunter 's மூன் என்று அழைக்கிறார்கள். பல பெயர்கள் அமெரிந்தியர்கள் இட்ட பெயர்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்திற்கான முழு நிலவுக்கும் பெயர் உண்டு. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் அதற்கான பெயர்கள் உண்டு என்றே நினைக்கிறேன்.

எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.





இதைப் பற்றிய ஆராய்ச்சி நிறையச் செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

1. http://earthsky.org/tonight
2. http://en.wikipedia.org/wiki/Full_moon


Thursday, 11 August 2011

கலவரம் - அமெரிக்கா - கடன் அன்பை முறிக்கும்?

வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொண்ட இரு நாடுகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் வல்லரசு என்று கருதப்பட்ட ஒரு நாடு - அமெரிக்கா - தனது கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டது. அதன் வழியாகவே அது உடனடியாக மிகப் பெரிய இக்கட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.காவல் துறையினர் செய்த ஒரு தவறு ஒருவரின் உயிரைக் குடிக்க இங்கிலாந்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நடந்த கலவரம் என்று எண்ணி விட முடியவில்லை.
இன்று அமெரிக்கக் கலவரம் பற்றி -

அமெரிக்கா என்ற உடன், வானளாவிய கோபுரங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், மின்னொளி நகரங்களும், ஹாலிவுட் தொழில் நுட்பம், நாகரிகத்தின் உச்ச கட்டம் என எல்லாரையும் நினைக்க வைத்தது மட்டுமல்ல – இப்படித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் அந்த தாக்கம் தெரியும்.
இந்த மயக்கத்தில் அமெரிக்கர்களும் இருந்தார்கள் – அமெரிக்க மோகத்தில் [நாம் எல்லாரும்தான்?] இருந்தவர்களும் மயக்கத்தில் இருந்தார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது எல்லாரையும் மயக்கத்தில் இருந்து எழுப்பும் மருந்து என்றே என்றத் தோன்றுகிறது.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவர்களது மமதைக்குக் கிடைத்த அடி – அம்மாவுக்கு நேற்று கிடைத்தது போல. ஊரு உலகத்துக்கு எல்லாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி லோக்கல் பஞ்சாயத்துல கோட்டை விட்ட கதைதான். கோடிக்கணக்கான டாலர்கள் இன்னும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மமதையில் இருப்போர் கொஞ்சம் விழித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிக் கடன் வாங்கித் தனது பொருளாதாரத்தை மேல் நோக்கி வைத்திருப்பது – மேக்-அப்பு கதைதானே. எவ்வளவு நாளைக்குத்  தான் சாயம் பூசிக்கிட்டே இருக்க முடியும். அப்படி என்னய்யா கடன் வாங்கி சாயம் பூசி? ஒரு மனிதன் எப்போது செயற்கையாய் தனது அழகைக் கூட்ட முயற்சிக்கிறானோ அது அவனுக்கு ஆபத்திலேதான் முடியும் – என்ன இருக்கிறதோ அதை வைத்து பிழைப்பு நடத்துவது என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்ல உதாரணம்.

இந்தியாவும் அமெரிக்கக் கடன்பத்திரம் நிறைய வாங்கி வைத்திருக்கிறதே – நாளைக்கு என்ன ஆகுமோ? இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா எதுவும் கற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கதிதான் நமக்கும் நாளைக்கு. இதற்குப் பிறகுதான் அளவுக்கு அதிகமான ஊழலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் என்கிற ஒரு மாய வலையில் நாம் எல்லாருமே சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து நாம் எப்போது விழிக்கிறோமோ அப்ப தான் நாம் தப்பிக்க முடியும்.

இன்னைக்கு பொருளாதாரத் தரம் நம்ம நாட்டில உயந்திருக்கு என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்தான் [என்றே நான் நினைக்கிறேன்]. எல்லாவற்றையும் கடன் அட்டை வழியாகத் தேய்க்கிறோம். வருமானம் உயர்ந்ததால் மக்களுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு உயர்ந்தது [முன்பு பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது இப்போது அதிகமாய் இருக்கிறது – அதோடு கடனும் அதிகமாய் இருக்கிறது]– ஒரு மனிதன் கடன் வாங்கி கார் வாங்குகிறான் – மாத மாதம் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கட்டிகிறான் – அதோடு வீடு வாங்குகிறான் – அதற்கும் கடன் வாங்குகிறான் – இப்போது வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, ... இருக்கிறது எல்லாவற்றிற்கும் வட்டியோடு சேர்ந்து கடன் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்கிறவனுக்கு – இருந்தா இப்படி இருக்கணும் என்று தோன்றுகிறது. அமெரிக்கா அதைத்தான் செய்தது – இந்தியா அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது – நாமும்தான்.

முன்பு ஒரே வீட்டில் எல்லாம் இருந்தோம் – இப்ப அப்படி இல்லை. எல்லாம் தனித் தனி – இனி ஒரு வீட்டில் எத்தனை பேரோ அத்தனை கார் – அவ்வளவு கடன் – அளவுக்கு மீறிப் போகிற போது மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க வேண்டியதுதான் – தனி ஆள் கொடுக்கலாம் – அல்லது பிசினஸ் பார்ட்டி கொடுக்கலாம். ஒரு அரசு கொடுக்க முடியுமா – எனக்குத் தெரியலை – அப்படிக் கொடுக்க முடிந்து அமெரிக்கா மஞ்சள் நோட்டீஸ் குடுத்தால் பாவம் – அதிகமா பாதிக்கப்படுவது இந்தியாவாத் தான் இருக்கும் [ அதிகமா அமெரிக்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் இருக்கே!]

டாலருக்கு ஏற்பட்ட கதி இன்னும் சில நாட்களில் ஈரோ –வுக்கு ஏற்படும் – ஜோதிடம் ! 

கடன் அன்பை முறிக்கும் என்று நம்ம ஊரில எல்லாம் முன்பு எழுதியிருப்பார்கள் – இன்றைக்கு கடன் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு நம்மை எல்லாரும் சேர்ந்து தள்ளியிருக்கிறார்கள் – நாமும் நம்மையே தள்ளிக் கொள்கிறோம்.

Friday, 29 July 2011

ராதிகா, ஜெயலலிதா, மம்தா

கடந்த மே மாதம் தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட மன்றத் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக இருந்த போது கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றது.  அதில் இந்தியா-இலங்கையைத் தவிர ஒரு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற முதல் பெண் – முதல் தமிழர் – அவர் ராதிகா சிற்சபையேசன். அவர் Sacarborough-Rouge River தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
மே மாதம் வெளிவந்த தேர்தல் முடிவுகளில் இங்கேயும் பெண்கள் முக்கியத் துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் – செல்வி ஜெயலலிதா மற்றும் மம்தா பாநேர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியைக் காட்டிலும் மம்தாவின் வெற்றி மிகவும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய முற்பத்து  நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த இடது சாரிகளை பதவியிறக்கம் செய்திருக்கிறார்.

இவர்களின் வெற்றி வெளியில் தெரிவதற்கு முன்பே ராதிகாவின் வெற்றி வெளிவந்து விட்டது. இருபத்தி மூன்று ஆண்டுகளாக லிபரல் கட்சியிடமிருந்த இடத்தை NDP பிரதிநிதியாக ராதிகா பெற்றிருக்கிறார். அவரின் கன்னிப் பேச்சு மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கனடாவின் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெண்.

மக்களுடைய விருப்பத்தின் பேரில் முப்பது வயதுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் ராதிகாவைப் பின்பற்றி இன்னும் நிறைய பெண்கள் – அரசியலுக்கு வர வேண்டும். “மாற்றம்’ வேண்டும் என்கிற அதே முழக்கத்தை முன்வைத்தே NDP நிறைய இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது [எதிர்க் கட்சியாக].

  • நமது ஊரிலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர் பருவத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அதற்குப் பிறகு எங்கேயோ காணாமல் போய் விடுகிறார்கள். அதைப் பொறுத்த வரை ஆண்களும் அப்படித்தான். 
  • ராதிகாவின் தொகுதியில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, 'டெரெக் லி' இடமிருந்து பதவியைக் கைப் பற்றியிருக்கிறார். நீண்ட நாட்களாக தான் இருந்து விட்டதாகவும் மாற்றம் தேவை என்று தான் போட்டியிடாமலும் இருந்தார் டெரக். இங்கே கலைஞரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை இருக்கிறது. அவரும் அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் - ஆனால் ஒரு போதும் நடப்பதாய்த் தெரியவில்லை. 
  •   எனவே ஆண்கள் பெண்கள், தங்கள் தொகுதியில் சமுதாய நோக்கில் வலம் வரும் இளைஞர்கள் மக்களால் கவனிக்கப் படுவார்கள் - நிச்சயமாய் -  
  • அரசியல் நாகரிகம் என்பது தமிழகத்தைத் தவிர பல இடங்களில் இருக்கிறது. ராதிகா, தனது முதல் உரையில் சபாநாயகரை வாழ்த்துகிறார். அந்தத் தொகுதிக்கு உழைத்த எதிர்க் கட்சி உறுப்பினரை நினைவு கூர்கிறார். மம்தாவின் பதவி ஏற்பு விழாவிற்கு ஜோதி பாசு நேரில் வருகிறார்.  இங்கே தான் நாகரிகம் என்பதே இல்லை -
  • அரசியல் என்பது சாக்கடைதான். ஆனால் உண்மையான நோக்கமும், தனது வாழ்வின் சிறு வயதிலிருந்தே உடைய சமூக நோக்கை தொடர்ந்து வெளிக் காட்டும் யாரையும், எந்த மக்களாக இருந்தாலும், யாரும் கை விட்டு விட மாட்டார்கள் என்பதே ராதிகாவின் வெற்றி காட்டுகிறது. மாற்றம் விரும்பும் பெண்கள் மாற்றம் கொண்டு வருவதற்குத் தங்களைத் தயார் படுத்துவதும் அவசியம். 

கடந்த வாரம் ஹில்லரி கிளிண்டன் சென்னை வந்தார் அரசு முறைப் பயணமாக வந்தார். ராதிகா அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இயலாது. தமிழக அரசு அவரை அழைத்து தமிழரை பெருமைப் படுத்த வேண்டும். ஈழத் தமிழர் சாகும் போதுதான் குரல் கொடுக்க வில்லை. நமக்கு புகழ் ஈட்டும் பொது கொண்டாடவாவது வேண்டாமா?

Tuesday, 26 July 2011

விபத்துகள் - அணு உலை - தீவிரவாதம்

  • அணு உலை பற்றிய பல விவாதங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாய் இல்லை.
    • வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் தொழிழ் நுட்பத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்ற மமதையோடு இருந்தவர்களுக்கு வரிசையாக ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. ஜப்பானில் ஆரம்பித்தது - நில நடுக்கத்தால் வந்தது வினை. சில ஐரோப்பிய நாடுகள் முழித்துக் கொண்டன. ஜெர்மனி அதில் முதல் நாடாய் தெரிவித்தது. இத்தாலியில் மே மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். [பொது வாக்கெடுப்பு எல்லாம் நம் ஊரில் நடக்குமா என்ன?] ஆனால் நாம் இப்போதுதான் அணு ஆயுத ஆலை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறோம். மிகவும் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து, மக்கள் வசிக்காத பகுதிகளை தேர்ந்தெடுத்து  என்று .... பல வழிகளில் திட்டமிடும் அந்த நாடுகளே ஒதுங்கிப் போக வழி தேடும் போது நாம் இன்று எப்படித் திட்டமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது?
  • இரயில் விபத்துக்கள் 
    • உலகத்தில் மிக நீளமான பாலத்தை கடல் மீது கட்டியிருக்கும் சீனாவில் நேருக்கு நேராக ரயில் மோதியிருக்கிறது. இந்தியாவில் இது நிறைய நடக்கிறது. என்ன அங்கே புல்லட் ரயில் மீது விபத்து நடக்கிறது. இங்கே இன்னும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் போகிறதே ரெகார்டாக இருக்கிறது. அப்படி இருந்தும் இங்கே விபத்துகள் பல்கிப் பெருகுவது எதனால்?
  • தீவிரவாதம் 
    • ஆண்டேர்ஸ் ப்ரைவிக் - ஏறக்குறை என்பத்தி ஐந்து பேரை தனி ஆளாக தேடித் தேடி சுட்டுக் கொன்றிருக்கிறான், கடந்த வெள்ளிக் கிழமை. 'ஐரோப்பிய நாடு பல பண்பாடுகளை உள்ளடிக்கிய நாடுகளாக மாறிக் கொண்டிருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் தங்களது தேசிய, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருவதாகவும்' கூறி தனது கொலைகளுக்கு காரணம் கற்பித்து இருக்கிறான். இதன் மூலம் ஈழ அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமல்ல, மிகவும் அமைதியான நாடு அனைவருக்கும் ஆதரவு கொடுக்கும் நாடு என்று எண்ணப்பட்ட நாட்டில் இது நடந்திருக்கிறது. தொடர்ந்து மும்பையில் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்தத் தீவிர வாத அமைப்பு காரணம் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இழப்பு இரண்டு பக்கத்திற்கும்தான். 
இதனால் அறிவது என்னவென்றால்

- நம்மிடம் அணு உலை எதிர்ப்பு எப்போது வருமென்றால் நாம் அணு உலை அமைத்து அதில் விபத்துகள் வந்து அதனால் மிகப் பெரிய இழப்புகள் வந்தால்தான் நாம் அணுஉலை எதிர்ப்பு என்பது நமக்கெல்லாம் கனவாகும்.
- முன்னேறிய நாடுகளைப் போல தொழில் நுட்பத்தில் முன்னேறி முன்னூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் போனால்தான் எப்போதாவது விபத்து ஏற்படும். இல்லையெனில் இப்போது போல அடிக்கடி ஏற்படும்.
- நாமும் நார்வேயைப்போல ஏற்கனவே அமைதியான நாடு என்று பெயர் எடுத்திருப்பதானால், இங்கேயும் தீவிர வாதம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை இங்கே அரசியல் வாதிகளும் வளர்க்கிறார்கள்.

முடிவாக ...

  • முதலாவது நிகழ்வில் இயற்கையின் சதியினால் மக்கள் உயிரிழக்கிறார்கள் 
  • இரண்டாவது நிகழ்வில் , நமது கவனக்குறைவால் மக்கள் உயிர் இழக்கிறார்கள் 
  • மூன்றாவது நிகழ்வில் நமது அறிவீனம், திமிர், இவைகளினால் உயிர் இழக்கிறோம். 
    • ஈஸ்ட் அல்லது வெஸ்ட் எலாம் ஒரேமாதிரிதான் - சின்ன வித்தியாசம்... அது நமக்கே தெரியும்.

Thursday, 5 May 2011

பின் லேடன் அழிப்பு (!) - இனிமேல் உலகம் அமைதியாய் இருக்குமா?

  • ஒபாமா தேர்தலுக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து வேறு படுத்திக் கொள்ளாமல் இருந்த தருணங்களில், ஒபாமாவை - ஒசாமா போல மீடியா சித்தரித்தது. "Justice is done" என்று ஒசாமைவைப் போட்டுத் தள்ளுவதை நேரில் பார்த்த பிறகு - எனது கட்டளைப் படி எல்லாம் நடந்தது என்று என்று சொன்னதன் வழியாய் தான் தீவிரவாதத்தின் எதிரி என்று நிலை நாட்டியிருக்கிறார்.
    • ஆனால் புஷ் சதாம் உசேனைப் பிடித்ததைச் சொன்ன போது அவரிடம் இருந்த கர்வமான சிரிப்பு ஒசாமைவைக் கொன்றதாகச் சொன்ன ஒபாமாவிடம் இல்லை. "JUSTICE" -
    • இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென்று ground zero வுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஒபமா. 
    • இழந்த பாப்புலரிடியைப் பெற மனிதர்களின் emotion ஐத் தொடுவதையே எல்லா அரசியல் வாதிகளும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
  •  ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்த பின் லேடனைப் பற்றிய தகவல்கள் எப்படி அமெரிக்காவிற்குத் தெரிந்தது என்றுதான் பாகிஸ்தானுக்கு ஒரே கவலை. இது பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று அந்த அரசு சொல்லுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை. இன்னைக்கு பந்த் இல்லை ஆனால் மவுன்ட் ரோடு காலியா இருந்தது அப்படின்னு சொல்றதை நம்புறவங்க வேண்ணா இதை நம்பலாம். இத்தனைக்குப் பிறகும், அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டுதான் இருக்கும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • அமெரிக்கா அடுத்த நாட்டின் எல்லைக்குள் அவர்களின் அனுமதி இன்றி எப்படி நுழைய முடியும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகத்தின் அபாயகரமான தீவிரவாதியாக இருந்தால் கூட - தீவிரவாதிகளின் வன்முறையை விட இந்த அரசு அத்துமீறல் வன்முறைகள் ஆபத்தானவை. எங்கே தவறு நடந்தாலும், குற்றவாளி இருந்தாலும், தாங்களே தண்டிக்கப் பிறந்தவர்கள் என்கிற கர்வத்தை இது வளர்த்தெடுக்கும். இஸ்ரேலுக்கு இது அதிகமாக உண்டு. அமெரிக்காவும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவும்.  இது இந்தியாவுக்குச் செக். 

  • உலகின் மிக அபாயகரமான  தீவிரவாதி இறந்துவிட்டான். இனிமேல் உலகம் அமைதியாய் இருக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • உலக வல்லரசு தான்தான் என்று மீண்டும் அமேரிக்கா நிலை நிறுத்தும் முயற்சியே இது. அமெரிக்க பிரஜைகள் குற்றவாளிகளாக இருந்தாலும், வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப மறுக்கும் இந்த மனித உரிமையை மதிக்கும் இந்த மனிதர்கள், தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் எங்கேயும் சென்று அடிப்பார்கள். தாங்களே வளர்த்து விட்ட சதாம், மற்றும் பின் லேடன் தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதுதான் அவர்கள் தீவிரவாதிகளாகவும், அபாயகரமான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். இந்த சித்து வேலைகளை  எல்லாம் அமெரிக்கா நிறுத்தினாலே தீவிரவாதிகள் உலகில் குறைந்து விடுவார்கள். 

  • சதாமிடமிருந்து அமேரிக்கா ஒன்றைக் கற்றுக் கொண்டது.  இம்முறை அந்தத் தவற்றை செய்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். எதற்கு ஒருத்தனை உயிரோடு பிடிக்க வேண்டும், அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும். போவோம் சுடுவோம். முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இராணுவ வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் யாரேனும் idea கொடுத்திருப்பார்களோ ?

  • கடைசியா ... எனக்கென்னமோ இறந்து போன வீரப்பனை சுட்டு தமிழக அதிகாரிகள் பேர் தேடிக்கொண்டது போல, கிட்னி செயலிழந்து இறந்து போன பின் லேடனை அமெரிக்கர்கள் சுட்டு பேர் வாங்குகிறார்களோ என்றுதான் சந்தேகம்.

    Wednesday, 16 March 2011

    அணு உலகம் - ஆழ்ந்த அனுதாபம்

    • ஜப்பான் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் "அணு" குறித்த விவாதம் எழ ஜப்பானே காரணாமாக இருக்கிறதே என்பது வருத்தம்தான். முன்பு அமேரிக்கா - இப்போது அவர்களே காரணமோ என்றுதான் தோன்றுகிறது. செத்தவனைப் பத்தி தப்பா பேசுறது நாகரீகம் இல்லைதான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் செத்து இது போல நடக்கூடாது என்று அவர்கள் கூவுவது மாதிரிதான் எனக்குத் தெரிகிறது.  
    • அணு உலகம் -  ஆபத்து என்று சொன்னால் அறிவாளிகள் அடிக்க வருவார்கள்.
    • உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி என்கிற நகரங்களில் அணு குண்டு வீசப் பட்ட போது, இனிமேல் உலகத்தில் இப்படி ஒரு அநீதச் செயல் ஒரு போதும் நடக்கக் கூடாது என்றுதான் அனைவரும் விரும்பினர்.
    • ஆனாலும் அதன் பிறகு அழிப்பதற்கு அல்ல, ஆக்கத்திற்கு பயன் படுத்துவோம் என்கிற ரீதியில், ஏறக்குறைய 55 அணுஉலைகளை அமைத்து அந்த நகர்களை அழகு படுத்திய ஜப்பானியர்கள் மீது இயற்கை மீண்டும் அத்தகைய நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
    • இதுவரை இல்லாத அளவிற்கு, பூகம்பம், சுனாமி, அதைத் தொடர்ந்து, வரிசையாக அணு உலைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.  அவைகளிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சுகள் மிக மோசமானவை என்பது அனைவருக்கும் தெரியும்.  இது இயற்கையின் சதி என்றால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. 
    • எல்லாம் எனக்குத் தெரியும்; எல்லாவற்றையும் என்னால் கட்டுப் படுத்த முடியும் என்கிற அறிவு ஜீவிகளுக்கு கிடைத்த பரிசாகத் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.  என்னை மிஞ்சி எதுவும் நடக்காது என்ற மமதை.  தான்தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த உயிரினம் - நான் செய்வதனைத்தும் சரி தான் என்று நியாயப் படுத்தும் குணம். இந்தத் தலைக் கனத்தை எப்படிக் குறைக்க முடியும்?
    • ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை எதிரியாகப் பார்ப்பதும், எல்லைகோட்டு சண்டையை வளர்ப்பதும், தன பலத்தை நிரூபிக்க அணுவைப் பிளப்பதும் - போட்டிக்கு வேறொருவன் அதற்கான முயற்சியில் இறங்குவதும் என்று ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறோம். 

    • உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சி - அது மட்டுமே பிரதானம் - அந்நியச் செலவாணியை அதிகரிக்க வேண்டும். நவீன வளர்ச்சியில் இருந்து பின்செல்ல முடியாது என்பது தெரியும் ஆனால் அதே சமயத்தில் பொறுப்புணர்வு என்பது மங்கிக் கொண்டே இருக்கிறது.  
    • எதையும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்கிற ரீதியில் உலக அரங்கில் பெயரெடுக்க, பொருளாதார வளர்ச்சி என்கிற போர்வையில் சில பெருச்சாளிகள்  வளர்ந்து கொள்ள மட்டுமே அரசு முயல்கிறது. 

    • அமெரிக்கா உள்ளே வந்து விடக் கூடாது, சீனா அருகில் போய்விடக் கூடாது என்பதற்காய் இலங்கைக்கு தமிழரைக் கொல்ல உதவுகிறது. அவர்கள் வேறு நாட்டுத் தமிழர்கள். தமிழ் மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றதற்கு என்ன செய்தது?  தெற்கிருந்து செய்தி போக நேரமாகிறது - ஆனால் இலங்கையிலிருந்து விரைவாய்ப் போகிறது.  நமது அரசும் கொள்கைகளும் வெறும் வெளி வேஷங்கள்  போடும் நாடக தாரிகள். 

    • மூன்றாம் உலகப் போர் தொடங்கினால் அச்சண்டை முடிவுறாது - ஏனெனில் தொடங்கும் போதே உலகம் முடிந்திருக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நவீனப் போர் - பொருளாதாரப் போர். அனைத்து நாட்டையும் ஆட்டிப் படைக்கும் பேய். 
    • வளர்ந்த நாடுகள் என்ற நாடுகளுக்குள்ளும் - ஏழ்மை, வறுமை, விலைவாசி உயர்வு - வேலையில்லாத் திண்டாட்டம். அப்புறம் என்ன வளர்ந்த நாடு, வளராத நாடு? நாமும் அதைப் பார்த்து வளர வேண்டும் என்று ஆசிக்கிறோம்.
    • நில உறவு போயிற்று - மனித உறவு மங்கிற்று - கோடைகளில் நமக்குக் குளிர் வேண்டும் - குளிரில் வெப்பம் வேண்டும் - அணு சக்தி இருந்தால் தான் சாதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு செம்பரம்பாக்கம் தண்ணீர் போகும் - அவர்களுக்கு மின்சக்தி போக மீதி மக்களுக்கு கிடைக்கும். அப்புறம் என்ன நமக்கு வசதி?
    • தொலைக்காட்சிப் பெட்டி வீடு தோறும் போகும் - மின்சாரத்திற்கு என்ன செய்யலாம்? அணு சக்தி வேண்டும். 
    • யாரும் இல்லாத கடைகளில் ஷோ கேசில் எரியும் மின் விளக்குகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணைக்க முன்வந்தாலே இன்னொரு தலை முறைக்கு எரிசக்தி மிஞ்சும். இந்தியாவும் அதனை பின் பற்றுகிறது. அப்புறம் எப்படி மின்சாரம் பற்றும்?
    • சேமிக்கும் பழக்கம் போய் விட்டது -   பணம்- மின்சாரம் - நீர் - எல்லாம்... தேவைக்கு மேலே இல்லையென்றால் கடன் வாங்கலாம்- மின்சாரம் - அணு சக்திதான். சரி நீர் எங்கே வாங்குவது?
    • அமைதி விரும்பிகள் உலகப் போருக்குப் பின் சண்டையிடுவதை குறைக்க வேண்டும் என்றும், சண்டைகளின் அழிவை உணர்த்தியும், பல இடங்களில்  இயற்கையிடமிருந்து பிரிந்து போனதை உணர்ந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறோம். 
    • ஜப்பானியர்கள் இந்தக் குட்டி நகரத்திற்குள் ஐம்பத்து ஐந்து அணு உலைகள் வைத்திருக்கும் போது இந்தியாவில் வெறும் பதினேளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டார்கள் - எதற்கு?

    • செர்நோபில் அணு உலை விபத்து மிக மோசமானது என்ற போது அதில் குறிக்கப் பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஒழுங்காக அமைக்கப் பட வில்லை எனவேதான் விபத்து என்றார்கள். 

    • ஜப்பான் - நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும், அதையெல்லாம் கருத்தில் கொண்டும் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டது என்றும் சொன்னார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கிறது. 
    • இப்படியே போனால், யாருக்காக அணு உலை? மக்களுக்கா?
    • இந்தியாவில் மிகவும் பாதுகாப்பகவே அணு உலைகள் இருக்கின்றன. எந்த நில அதிர்வையும் தாங்கும் என்று, ஏதோ ஒரு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். 
    • எதை வைத்து இவர்களை நம்புவது? நால் வழிச் சாலையில் ஊழல் - பாலங்கள் கட்டுதலில் மோசடி - விளையாட்டு நடக்கும் முன்னே கட்டிடங்கள் சரிவு- கல்மாடியின் ஊழல் - ஊழல் வழக்கில் உள்ள ஒருவரே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம். போலி மருந்துகள் - போலி மருத்துவர்கள் - போலி விமானிகள் [இண்டிகோ விமானத்தில் பனி புரிந்த ஒரு விமானி வெற்றி பெறாத தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றியது மட்டுமல்ல அதுபோல இன்னும் பலர்] - இதில் அணு மின் நிலையங்களை மட்டும் மிகவும் உண்மையோடும், நேர்மையோடும், எந்தவித கலப்படமும் இன்றி, ஜப்பான் முன்வரைந்த பாதுகாப்பு வளையங்களுக்கும் மேலாக, எல்லாவித நில அதிர்வுகளையும் தாங்கிப் பிடிக்கும் வல்லமையுள்ள அணு மின் நிலையங்களை நம்மவர்கள் அமைத்துள்ளார்கள் - இனிமேலும் அமைப்பார்கள். அணு உலைகள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீட்டுத் தொகை என்பதை வெறும் 500 கோடியிலிருந்து பல போராட்டத்திற்குப் பின்னர் 1500 கோடிகளாக மாற்றிய இந்திய அரசு மக்கள் நலம் பற்றியும், அணு உலை அமைக்கும் அந்நிய நாட்டு கம்பெனிகளின் பணியில் தலையிட்டு அனைத்தும் ஒழுங்காக நடை பெறுகிறதா என்று நோண்டி நொங்கெடுக்கும் என நம்புவோம். 

    • நான் இந்தியாவின் மீது அவ நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை.  நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  நம் பண்பாட்டுக் கண்கொண்டு நம் மக்களைப் பார்க்கிற பார்வை வேண்டும். நியூ யார்க்கில் விளக்கு உள்ளது போல நமக்கு வேண்டும் என்றால் - அதுவா நமது முதல் தேவை. மக்கள் பொருளாதாரத்தில் உலக அரங்கோடு போட்டி போட்டுக் கொண்டு ஐந்து நட்சத்திர உணவகங்களில் உணவு அருந்தவோ, காலையில் சிங்கப்பூரிலும், மாலையில் மலேசியாவிலும் இருந்து விட்டு இரவோடு இரவாக இந்தியா திரும்பும் வசதியோ, அடுக்கு மாளிகைகளோ, இரவு பகல் வித்தியாசம் தெரியாமல் இருக்க வண்ண வண்ண விளக்குகளோ - ஆளுக்கு ஒரு வாகனமோ - ... இல்லாவிட்டாலும் பரவாயில்லை - அடுப்பெரித்து கஞ்சி குடிக்க உயிராவது மிச்சமிருக்க வேண்டாமா? 

    • இப்போதாவது அணுஉலைகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு பற்றியோ, அல்லது ஊழல் ஒழிப்பில் உண்மையாகவே இறங்கினாலோ - அறுபத்தி மூன்று சீட்டுக்களைப் பெறுவதற்கும்,  ஆட்சியில் பங்கு கேட்பதற்கும் சி. பி. ஐயைப் பயன் படுத்துவதை விட்டு விட்டு - மாற்று வழி பற்றிய விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினாலோ,  இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு செவி கொடுத்தாலோ - கூடன்குளம் அல்லது நர்மதாப் போராட்டங்களில் உள்ள நியாயங்களை பரிசீலிப்போம் என்கிற அறிக்கையோ விட்டாலோ, இயற்கை அரண்களை அழிக்கும் முயற்சியை கைவிட நாம் முன்வந்தால்தான் நாம் நமது தலைக் கனத்தை  குறைக்க முயற்சிக்கிறோம் என்றாவது படும்.