Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Tuesday, 15 February 2011

அன்பர்கள் தினம்

பிப்ரவரி பதினான்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பல எதிர்ப்புகளை வெளிக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
காதலர் தினம் தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், இதற்கான எதிர்ப்பின் வடிவங்கள் கேலிக்குரியதாய் இருக்கின்றது. என்ன மாயமோ தெரியலை சிவசேனா அமைதி காத்திருக்கிறது - இந்த வருடம்!

காதலர் தினக் கொண்ட்டாட்டத்தை எதிர்த்து வாழ்த்து அட்டைகளை எரித்து இருக்கிறார்கள். கலாச்சாரம் சீரழிகிறது என்றால் - தமிழ் புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும், கிறிஸ்துமசுக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து அட்டைகளை எரிக்க வேண்டும். அதென்ன பிப்ரவரி பதினான்கு மட்டும்?

வாழ்த்து அட்டைகள் விற்பது ஒரு பிசினஸ். நாளைக்கு திருவண்ணாமலை தீபம் மிக விமரிசையான நாளென்றால் அன்றைக்கும் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும்தான். அதற்காகாக அப்போதும் அட்டைகளை எரிக்க வேண்டும்.
பிசினஸ் நடை பெற முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்வார்கள். விளமபரம் மூலமாக அதி லாபம் சம்பாதிக்க தொலைக்காட்சிகளும் அதிகமாக விளம்பரம் செய்யும். சிறப்பு காட்சிகள் -?

ஒருவேளை இந்த முதலாளித்துவப் போக்கு பிடிக்காமல், அதனால்தான் அவர்கள் எரிக்கிறார்களா? அப்படியே எரித்தாலும் - இவர்களை முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கிற பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் என்று நாம் கருத முடியுமா என்பதுதான் என் கேள்வி? கலாச்சாரப் பற்று என்பது இதையும் உள்ளடக்க வேண்டுமல்லவா?
ஆனால் இவர்கள் கலாச்சாரம் என்பது என்ன என்றுதான் புரியவில்லை!

காதலர் தினத்தன்று டிஸ்கோத்தே அல்லது கடற்கரைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் ஆபாசம் அதிகமாகி விட்டது என்றும் சொல்கிராரர்கள். அதை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இல்லைஎன்பதற்கில்லை. அதோடு நாம் சரி செய்ய வேண்டிய ஆபாசம் நிறைய இருக்கிறது - குத்தாட்ட திரைப்பாடல்கள் - ஆலயச் சிற்பங்கள் -எனக்கு கலைக் கண்கள் இல்லையோ?

எது ஆபாசம் - எது கலாச்சாரத்தை கட்டிக் காப்பது?
மீண்டும் ஆண்கள் மேல்சட்டை போடாமலும் பெண்கள் மாராப்பு அணியாமலும் இருக்கின்ற கலாச்சாரத்தைத் தான் கட்டிக் காக்க விரும்புகிறார்களா இந்த எதிர்ப்பாளர்கள்?

இராமேஸ்வரத்தில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். நாய்க்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதன் பொருள் என்ன? காதலர்கள் எல்லாம் நாய்களா? அவர்கள் திருமணமானவர்கள் என்றால் அவர்களும் அவர்களது மனைவிகளும் நாய்களா? அட என்னங்கடா சாமி? நாய்களை ஊர்வலமாக வேறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தங்கள் துணைவியோடு அவர்கள் வெளியே போவதே இல்லையா - இப்படித்தான் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? நாய்களோடு நமக்கென்ன பேச்சு? கழுதைகளோடு நமக்கு என்ன உறவு?

அரசியல் தளத்தில் போராட்டம் நடத்துவதற்கும், தங்களின் இருப்பைக் காண்பிப்பதற்கும் இதுதான் சமயமா? விலைவாசி உயர்வு எனக்குப் பெரிதில்லை - குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு பெரிதில்லை - ஊழல் பெரிதில்லை - கோவில் கட்டலாம் - பூமி யாத்திரையும் அதோடு சேர்த்து இப்போது நாய்/ கழுதைகள் ஊர்வலம் போகலாம் .

தனி மனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் இச்சமூகம் நவீனத்துவத்தின் தொடர்ச்சி. இதில் தவறொன்றுமில்லை - ஆனால் அதே சமயத்தில் மனிதன் என்பவன் தனி மனிதன் இல்லை அதையும் தாண்டி ஒரு சமூகத் தொடர்பும், உறவாடலும் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலேயான போராட்டம்தான் இது என்றும் பார்க்க முடியும்.

அதற்காக சமூக உறவை புதுப்பிப்பது என்பது தனி மனித உரிமைக்கு எதிராக இருக்கமுடியாது. அதையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் போது கலாச்சாரக் காவலர்களின் இயலாமையும், காழ்ப்புணர்ச்சியும், தன்னையே கேவலப் படுத்திகொள்கிற மன நிலையும், மீண்டும்  எதையோ கட்டுக்குள் கொண்டுவர முயல்கிற அதிகாரப் போக்கும்தான் அடியில் ஆழமாய் இருப்பதாகப் படுகிறது.