Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Monday, 2 December 2013

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°

Wednesday, 31 July 2013

இதுவே இறுதியாக இருக்கட்டும்!

ஒவ்வொரு முறையும் அணு உலை அதற்கு எதிராக எழுதுகிற போது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் தோன்றுகிறது... ஆனால் அதனால் இன்றைய மற்றும் நாளைய தமிழ் சமூகம் சந்திக்க இருக்கின்ற ஆபத்துகள் நம்மை அச்சுறுத்துவதால் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகவே இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் என்கிற ஆய்வுப்பட குறுந்தகட்டில் பல கருத்துகள் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன...

ஒப்பந்த மீறல்கள் பற்றிச் சொல்லப் படுகின்றன... வெல்டிங் இல்லாத ரியாக்டோர்ஸ் என்கிற ஒப்பந்த மீறல், இதுவரை அவசர காலச் செயல்பாடு முறைகள் குறித்த ஆவணம் தயாரிக்காத நிலை, பத்து நாளைகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வேண்டிய இடத்தில் ஒன்றரை நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே கைவசம் இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு தனது அழிப்புப் பணியை தொடங்க நீதி மன்ற அனுமதியோடு தொடங்கி இருக்கும் இந்த வேளையில் இது குறித்து தமிழர்கள்  எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியம்.

வி. டி . பத்மநாபன்






Wednesday, 12 June 2013

"மூணு படம் நாலு விஷயம்"

ஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும்  ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம்  உண்டு. ஆனால் என்ன செய்வது..  தொடர்ந்து பெய்து வந்த  நீர்   ஜெர்மனியில்  அணை  உடைந்து ஊருக்குள் வந்து விட்டதாம். இயற்கையின் சக்திக்கு முன்பு எந்த தொழில் நுட்பமும் ஒன்றும் இல்லை.
இது திரு நாராயண சாமியின் கவனத்திற்கு.....



இந்தியாவும்  பாகிஸ்தானும் தொடர்ந்து அடிச்சிக்குது. ஆனால் வாரம் இருமுறை செல்லும் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் லக்கேஜ்ஜை ஸ்கானர் செய்யும்   இயந்திரம் பழுது ஆகி ரொம்பநாள் ஆயிடுச்சாம். என்னத்த சரி பண்ணினாலும் நடக்குறது கட்டாயம் நடக்கும்.  நடக்காதது கட்டாயம் நடக்காதுன்னு அதைச் சரி பண்ணாமலேயே விட்டுட்டாங்களாம்.


அமெரிக்காவின் 29 வயது எட்வர்ட் ஸ்நோடவுன் அமேரிக்கா எப்படி எல்லார் தலைக்கும் மேல பம்பரம் விடுதுன்னு ஹாங்காங் போய் உலகத்துக்கு எல்லாம் தெரியப் படுத்தி இருக்காரு. அதாவது இன்டர்நெட் மூலமாக எல்லாரின் கணக்குகள்  எல்லாவற்றையும், எல்லார் பேசுவதையும் ஒட்டுக் கேட்கிறதாம். அது மட்டுமல்ல மற்ற நாடுகளோடு போட்டிருக்கிற  ஒப்பந்தங்களைக் கூட சீரியசாக எடுத்துக் கொள்வது  இல்லையாம்.  உரிமை பேசுற நாட்டுல இப்படி நடக்குது... இதைக்கேட்டு ஐயையோ ஆனந்தமே ன்னு பாட்டு பாடுறத விட்டுட்டு - ஷாக் ரியாக்ஷன் குடுத்தாராம் நம்ம நாட்டு மேதை ...  இங்க அப்புடி ஒன்னும் நடக்காத மாதிரி... ஒருவேளை உண்மையா இருக்குமோ... பார்டர் விட்டு பார்டர் போற வண்டிகளையே ஒழுங்க நாம பாக்குறதில்லை இதுல போய்  யாராவது டெலிபோன  ஒட்டுக் கேப்பாங்களா என்ன?





இந்தியாவில ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருக்கு - படிக்காத படிப்புக்கு, விண்ணப்பிக்காத தேர்வுக்கு, தேர்வு எழுத மத்திய அரசுத் தேர்வாணையம் ஒபாமா புகைப்படத்தோட தேர்வு அனுமதிச்  சீட்டு வழங்கியிருக்கிறதாம்... இதக் கேட்டா ஒபாமா ஷாக் ஆவாரா மாட்டாரா...




ஏன்  இப்புடி? தொழில் நுட்பம் பல சமயங்களில் கேவலமாய் பிய்த்துக்  கொள்ளும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்கள் இவைகள்...





Sunday, 21 April 2013

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

Sunday, 26 August 2012

... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு


கணினி [கம்ப்யூட்டர்] ஒருவர் இருவர் என்று இன்று எல்லார் கையிலும் வந்துவிட்டது. அதன் சிறு வடிவமான தொலைபேசியிலும் அதன் தொழில் நுட்பம் பகிரப்பட அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது. இணையமும் அதனோடு சேர்ந்து விட  இந்த சோசியல் நெட்வொர்க்குகள் எல்லா இடங்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.   

தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அபரிமிதமானது மட்டுமல்ல மாறாக மிகவும் வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

நண்பர்களோடு பேசலாம், பழகலாம் என்று சமூகத் தளங்களில் இணைய முடிவெடுப்பதற்குள் புதிய புதிய சமூகத்தளங்கள்.  
எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்க யு டியூபுக்கு சென்று பார்த்து பயன்படுத்த முயல்வதற்குள் அடுத்த வசதி என்று போய்க் கொண்டே இருக்கிறோம். 
இந்தக் களோபாரத்தில் நண்பர்களிடம் பேசுவது கூட மறந்து போய் விடுகிறது. 

இப்ப நான் வெறும் முக நூல் மாட்டருக்கே வந்தர்றேன்.

இந்த முக நூல் புத்தகம் இருக்கிறதே இதனை நானும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இடையில் கொஞ்சம் தளர்ந்து போனேன். இருந்தாலும் இந்தத் தளம் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை எழுதாமல் இருக்க முடியவில்லை. என்னை யாருன்னே  தெரியாதவர்கள் கூட எனக்கு நண்பர்கள். 
எவ்வளவு விரைவாக அன்யோன்யமாகிப் போகிறோம். எவ்வளவு நெருக்கமாகிறார்கள். ஒரு நண்பரை உருவாக்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினம் இல்லை. 
எவ்வளவு புதிய புதிய நண்பர்கள் எனக்கும் அவர்களுக்கும். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள். 
முல்லா நாசருதீன் கதையில் வரும் - சூப் ஆப் தி சூப் ஆப் த சூப் ஆப் த --- போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம் அறிமுகமாகி இருக்கிறேன். ஹன்சிஹா போட்டோ போட்டதினாலே நான் நண்பராகிறேன் அவரும் உடனே என்னை நண்பராகச் சேர்த்துக் கொள்கிறார். 
அனுஷ்கா புடிக்குமா அதுனால அந்த போட்டோவைப் பாத்துட்டு அதை எழுதுறது ஆனா பொண்ணான்னு கூடத் தெரியாம நண்பராகி விட்ட சந்தோஷத்துல திளைக்கிறேன். அவர்களிடம் சாட் செய்கிறேன், லைக் பண்றேன். ஷேர் பண்றேன்... 
ஆனா கொடுமை சார் - அப்பா அம்மாகிட்ட பேச நேரம் இல்லை.

என் ஸ்டேட்டசை நாலு பேரு லைக் பண்ணா அதுவும் சந்தோஷமா இருக்கு. திரையைப் பார்த்து பார்த்து குடும்ப உறுப்பினர்களைக் கூட நேராப் பாக்கிறத விட இப்பல்லாம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல பார்க்குறதுதான் புடிக்குது. 

அதனால என்ன ஆச்சுன்னா தெரிஞ்ச ஆட்களை விட, எனக்குத் தெரியாத ஆட்களோட பழகுறதுல ஒரு சுகம் கண்டு போனேன். எந்தவித கமிட்மெண்டும் இல்ல பாருங்க. அவன் கஷ்டத்துல பங்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. என் கஷ்டத்துல 'ஐ ஆம் சாரி' அப்படிங்குற பதிலோட என் நண்பர்களின் கமிட்மென்ட் முடிஞ்சு போகுது. அதுவும் சந்தோஷமாத் தான் தெரியுது.

தன் அண்ணன் பொண்ணு இறந்து விட்டாள் என்று என் நண்பர்  போட்டோ போஸ்ட் பண்ணதை நாலு பேரு லைக் பண்றான் சார்.
எத லைக் பண்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போச்சு. அவ்வளுவு பிஸியாமா! ... அதனால ரெண்டு வார்த்தை கூட எழுத முடியாம போச்சு -
அதுக்காக அதை டிஸ்லைக் பண்ணலாமான்னு  ஒரு குரல் கேக்குது  - நான் என்ன சொல்றது?

முகமே தெரியாத யாரோ ஒருவருடைய சுவற்றிலேயோ [wall] ஆணியில் அடித்ததை அவர் பகிர்ந்து [share] கொள்ள, நான் அதை விரும்பி [like], என் சுவற்றில் ஒட்டிவிட [post] அதை எனது நண்பர்கள், சில சமயம் நண்பர்களின் நண்பர்கள் என்று எல்லாரும் மீண்டும் லைக், ஷேர், போஸ்ட், லிங்க், சஜ்ஜஸ்ட் என்று மீண்டும் அடுத்த ரவுண்டு நமது சுவற்றிற்கே வந்து விடுகிறது.
உலகம் எவ்வளவு சின்ன உருண்டை. முருகன் சுற்றி வருகிற நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. சில சமயம் ஆணை முகத்தான் சுற்றி வரும் நேரத்திற்குள் வந்து விடுகிறது.

இப்ப ஒரு நாளைக்கு இணைய இணைப்பு கிடைக்க வில்லை என்றால் தூங்க முடியலை, சாப்பிட முடியலை.
என் நாலு விட்ட நண்பர் சுவற்றில் என்ன லைக் பண்ணி, ஷேர் பண்ணினார்னு ஒரே யோசனையா இருக்கு!
அனுஷ்கா பொண்ணு தூங்கப் போனுச்சா - அதனோட ஸ்டேடஸ் என்னன்னு தவிக்க விடுது. அதனோட ஸ்டேடசை 650 ஆவதா ஆளா  நான் லைக் பண்ணலைன்னா அது தூங்கப் போகுமா போகதாங்கிற கவலை அதுக்கு மேல வாட்டுது.
என் அப்பா மருத்துவ மனையில் இருந்தப்ப கூட இப்படி எல்லாம் மனசு தவிக்கலைங்க. இப்ப இந்தத் தவிப்பு மனுஷனைக் கிறுக்குப் பிடிக்க வைக்குது.

மக்களே! இப்ப கொஞ்ச நாள்லயே தல சுத்துதே... அதுலேயே இருக்குற நண்பர்களுக்கு...  ஒரு நாள் முக நூல் புத்தகம் காலியானா எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு ஒரே திகிலா இருக்கு....

ஆனா கொடுமையைப் பாருங்க சார் இதைக் கூட நான் முக நூலில் ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலைக் கதியாகிப் போனேன். 

கொசுறு:
நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களே  -
இந்தப் பதிவென்னமோ சீரியஸா எழுதத் தொடங்கியதுதான்.
பாதியிலேயே  ஜாலியா மாறிப் போச்சு. 
சரி  எழுதுனதுதான் எழுதினோம்
காத்திரமும் பகடியும் சேர்ந்து செய்த ஒரு கலவைப் பின் நவீனக் கட்டுரையாக
இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இனி நீங்க --- ஒழுங்காப் பயன்படுத்தணும்... சரியாப் பயன்படுத்தணும். குறிப்பறிந்து நடக்கணும். 
இது ஆல்கஹால் மாதிரி அளவாய்ப் பயன்படுத்தணும் 
என்பது போல நல்ல யோசனைகள் இருந்தால் 
தயவு செய்து காமென்ட் போடுங்க.
வேற யாருக்கும் இல்லாட்டியும் நிச்சயம் எனக்காவது பயன்படும். 

ஒருத்தனின் கிறுக்கை  சரிசெஞ்ச புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

காமென்ட் போடவெல்லாம்  நேரம் இல்லைன்னா
ஒரு  லைக் பண்ணுங்க ...
இல்லாட்டி   ஷேர்  பண்ணுங்க ...
எனக்காக  இல்லாட்டாலும்
இந்த அனுஷ்கா,  ஹன்சிகாவுக்காகவாவது ...




முக நக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே நட்பு.
அப்பு 



Thursday, 26 July 2012

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

Thursday, 12 January 2012

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

Saturday, 12 March 2011

நவீனம் - தொழில் நுட்பம்

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் வெளியூருக்குச் செல்வது என்பதே நினைத்துப் பார்க்க முடியாது - அப்படியே இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை - அதுவும் இருபது அல்லது முப்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. 
அப்போதெல்லாம் தஞ்சாவூர் செல்வதே மிக எதிர்பார்ப்புக்குள்ளானதாய்  இருக்கும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்வதற்குள், இரண்டு மணி நேரம் என்பது சர்வ நிச்சயம்.

இப்போது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வழுக்கி செல்லும் சாலைகள், அதன்மேல் வோல்வோ பேருந்துகள், இரயில்கள், விமானங்கள் என்பதெல்லாம் மிகச் சாதரணமாகி விட்டன. எல்லாரும் விமானத்தை பயன்படுத்தா விட்டாலும் அது மிகவும் அத்தியாவசியமான பிரயாணமாகி விட்டது. ஒருமுறை அதில் செல்ல வேண்டும் என்பதற்காக திருச்சியிலிருந்து சென்னை வரைக்குமாவது செல்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  


இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் 'மலேயாக் கார' வீடு ஒன்றில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டி இருந்தது. பிறகு டாக்டர் ஒருவர் வீட்டில் வந்ததது. அப்போது அவர்களின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து தொலைக் காட்சி பார்க்க வேண்டும். சில பேருக்கு அனுமதி கிடைக்கும்: பல சமயம் வருத்தமாய்த் திரும்பி வருவோம். இப்போதெல்லாம் அப்படியா. தொலைக் காட்சி, குளிர் சாதனப்பெட்டி, இவைகளெல்லாம் சாதாரன பொருட்களாகி விட்டன. முன்பு சிறிய டிரான்சிஸ்டர்கள் வந்தது போல இன்று தொலைக்காட்சிப் பெட்டிகள். தொலைக்காட்சி பெட்டி உள்ள வீட்டிற்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் படையெடுக்க வேண்டிய  அசியமில்லை. எவ்வளவு தூரத்திற்கு அவைகள் அத்தியாவசியப் பொருட்களாகி விட்டன என்றால் அவைகள் பற்றி வரும் விளம்பரங்கள் கூட குறைந்த விட்டன.

அப்போது மிதி வண்டிக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் - அதுவோ அல்லது டைனமொவோ இல்லையென்றால் காவல் துறையினர் பிடித்து விடுவார்கள். ஒருமுறை டைனமோ இல்லாமல் வண்டி ஓட்டி காவலர் ஒருவரிடம் மாட்டியது உண்டு. பல சமயங்களில் அவர்களைப் பார்த்தால் இறங்கி வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது அப்படியா - எவ்வளவு வண்டிகள். 

வேலைகள் சுலபமாகி விட்டன [?], பெண்களின் வேலைபளு வெகுவாய் குறைந்திருக்கிறது.  அடுப்பூதும் பெண்களுக்கு என்றெல்லாம் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது. மிக்சி, கிரைண்டர் - குளிர்சாதனப் பேட்டிகள்.... துணி துவைக்க மெஷின் என்று எல்லா இடங்களிலும் சாதனங்கள். [இன்னமும் பெண்களுக்கு அடுக்களை வேலைகள் தானா?]

கண்டக்டர்கள் பேனா எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதுபோல எவ்வளவு நன்மைகள் நாம் அடைந்திருக்கிறோம் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கதை வைத்திருக்கலாம்.

ஆனால்,  எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தில் அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிருக்கிறது. தொழில் நுட்பம் என்பது மட்டுமல்ல. அதோடு முதலாளித்துவமும் இணைந்து சமூகத்தில் மனித 'மான்பிற்கு' ஒரு பங்கை ஆற்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.

ஆனால் மனிதன் மலம் அல்லும் தொழிலும், சாக்கடை சுத்தம் செய்வதிலும் இன்னும் அந்தப் பயன்பாடு அதிகம் வந்தது போலத் தெரியவில்லை..

வளர்ச்சி பற்றி நிறைய எழுதலாம் -
அதைப் பற்றி இல்லாமல் - தொழில் நுட்ப வளர்ச்சியினால் நாம் என்ன இழந்திருக்கிறோம் எனபதைப் பற்றி எழுதுவோம். அதற்கான முன்னோட்டம் இது. அதாவது தொழில் நுட்பத்தால் நாம் ஒன்றுமே பெறவில்லை என்பதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது  என்பதற்காகத்தான் இப்பதிவு.

அதற்காக - இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியுமா?