Showing posts with label மீடியா. Show all posts
Showing posts with label மீடியா. Show all posts

Friday, 10 April 2020

ஈஸ்டர் - 2020 - டிஜிடல் வழிபாடுகள்: நம்பிக்கை கீற்றுகள்

ஈஸ்டர் - 2020
டிஜிடல் வழிபாடுகள்: நம்பிக்கை கீற்றுகள் 

நேற்று எனக்குத் தொலைபேசிய சகோதரி ஒருவர் வேளை நகர் ஆலயம், பெசண்ட் நகர் ஆலயம் எல்லாம் மூடப்பட்டு இருப்பது குறித்து மிகவும் வேதனைப் படுவதாகக் கூறினார். வத்திக்கான் நகரில் தனிஆளாய் திருத்தந்தை யப் பார்த்த நம் எல்லாருமே கூட இதேபோல வேதனையின் பாரம் தாங்காமல் இதயக் கண்ணீர் முட்ட அழுதிருப்போம். சிறு வைரஸ் ஒன்று உலகையே அச்சுறுத்தும் சூழலில் இதைத் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. ஆனால் அதை இலகுவாகக் கடந்து போகின்ற நம்பிக்கைக் கீற்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன

திரும்பிய பக்கமெல்லாம் யூ ட்யூப் சானல்கள். வாட்ஸ் ஆப் செய்திகளில் எல்லாம் லைவ் சிலுவைப்பாதைகள், தொடர்ந்த திருப்பலிகள். ஒவ்வொரு மறைமாவட்டம் மற்றும் பங்குகள் என அனைவருக்கும் தனித்தனிச் சானல்கள். இது இல்லாமல் 24 மணி நேரமும் நம்மை செபத்திலும் திருப்பலியிலும் வழி நடத்த நமக்கு மாதா தொலைக்காட்சி, ஆங்கிலத்தில் - EWTN. தனி மறையுரைகள், சிந்தனைகள். திருத்தந்தையோடு நாம் பயணித்ததால், ஒரு மணி நேர வழிபாட்டில் பங்கெடுத்ததற்காக பரிபூரண பலன்

கொரோனா நம்மை கோவிலுக்குச் செல்ல விடாமல் செய்துவிட்டதே என்கிற மன வருத்தத்தை ஆழப்புதைக்கவே அனைத்தும் நம் இல்லம் தேடி வருகின்றன. கிறித்தவ விசுவாசிக்கான சுதந்திரத் தேர்வு அபரிமிதமாக இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால் கூட எனக்கு ஒரே ஒரு சாய்ஸ்தான். வேறு வழியே இல்லை. ஆனால் இன்றைக்கு தொலைக் காட்சி, திறன்பேசிகள், கணினி என்று பல வழிகளில் டிஜிடல் வழியாக வழிபாட்டில் பங்கெடுக்க அரிய வாய்ப்பு.

குருக்கள் மீடியாவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பங்கு மக்கள் யூட்யூபை சப்ஸ்க்ரைப் (subscribe) பண்ணுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியில் சானலை மாற்றுவது போல ஒன்றில் இருந்து ஒன்றில் மாற்றி வழிபாட்டில் பங்கெடுக்கிறார்கள். புனிதவாரத்தில் ஒரு வழிபாடுதான் என்பது மாறி, நாள் முழுவதும் ஆண்டவரோடு இருப்பது என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம்.

இது மிகவும் அர்த்தமுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. இது கொடுக்கிற செய்திகளுக்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

  1. ஆண்டவர் எப்போதும் நம்மைத் தேடி வருகிறவர். இந்த ஆண்டு வீட்டுக்குள் நாம் கட்டுண்டு கிடக்கிற போது ஆண்டவர் நம்மைத் தேடி வருகிறார் என்பதை, இந்த நினைவுபடுத்தலை, வீடு தேடி வரும் வழிபாடுகள், நமக்குச் சொல்லுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நாம்தான் புனித வாரத்திற்காக ஆலயம் நோக்கிச் செல்வோம். இந்த ஆண்டு நம்மைத் தேடி அவர் நமது இல்லம் நோக்கி வருகிறார்.
  1. இறைமக்கள் வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்துவதற்கான வழிமுறைகளை மிகுந்த, தகுந்த தயாரிப்போடு, முன்கூட்டியே நமக்குக் கொடுத்த தமிழக ஆயர் பேரவைக்கும், குறிப்பாக வழிபாட்டுப் பணிக்குழுச்  செயலருக்கும், அதனை [டிஜிடல்] .புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்த நம்வாழ்வின் துரிதமான சேவையும், நாம் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.
  1. குருக்களின் ஆர்வம் நமக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. ஆலயங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்கிற நிலையில் தனது மக்களின் தேவையை எப்படிப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான தயாரிப்புகள், நேரச் செலவழிப்பு என்று மிகவும் நேர்த்தியாக தயாரிக்கும் ஆர்வம் நமக்கு பணியாளர்கள் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்துகிறது.
  1. இந்த ஆண்டு தவக்காலம் மற்றும் புனித வாரம் பல்வேறு கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. இந்தக் கொள்ளை நோயின் தாக்கத்தில் நமது நம்பிக்கையைப் பலப்படுத்தவும், இந்த கொள்ளை நோய் கொடுக்கிற செய்திகளைப் புரிந்து கொள்வதற்கும், விவிலியத்தின் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை குருக்களும் அருள் சகோதரிகளும் பகிர்ந்து கொண்டிருப்பது நம்மைப் பலப்படுத்துகிறது
  1. இந்த நாட்களில் சிலர் தங்களது தனித்திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது இசையின் வழியாக நமது செபங்களை, ஏக்கங்களை வெளிப்படுத்த உதவி செய்வதும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும், நமது ஒன்றிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
  1. டிஜிடல் கருவிகளை இந்த அளவிற்குப் பயன்படுத்துவதற்கு மக்கள் பழகிக் கொண்டது மிகவும் வரவேற்கத் தக்கது. ஒர் இடர் வரும் வேளையில் எப்படி தங்களைத் தகவமைத்துக் கொள்வது என்பதில் தேர்ந்தவர்களாக இருப்பது நாம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
  1. அந்தத்தப் பங்கு மக்கள் தங்களது பங்கின் சானலைப் பின்பற்றுபவராகப் பதிவு செய்திருப்பது அவர்களது பங்கின் மீதான மக்களின் ஆர்வத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. நேரடியாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லை என்றாலும் தாங்கள் இந்தப் பங்கின் உறுப்பினர் என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிற ஆர்வம் பங்கோடு மக்களுக்கு உள்ள உறவை வெளிப்படுத்துகிறது.
நமக்கு வேறென்ன வேண்டும்? இத்தனை ஆசீர்வாதங்கள் நமக்கு நம்பிக்கையைத் தர வேண்டாமா? இடர் வரும் வேளையில், தனித்திருக்க கட்டளை இடப்பட்டிருக்கிற வேளையில், அரசின் சட்டத்திற்கு உட்பட்டும், நாம் இல்லத்தை விட்டு வெளியில் செல்லாமல் இந்த ஆண்டு நமது வழிபாடுகள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றன. இந்த வேளையில் பணியாற்றுகின்ற அரசுக்கும், அதன் ஊழியர்களுக்கும், உண்ணாமல் உறங்காமல் இருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அவர்களின் சேவைகளையும் மதித்து, அவர்களுக்காக தொடர்ந்து மன்றாடக் கடமைப் பட்டிருக்கிறோம்.

 நம்பிக்கைக் கீற்றுகளை அதிகப்படுத்துவோம்.

    [அடுத்து - “டிஜிடல் வழிபாடு - கேள்விக்கணைகள்?”]






Monday, 6 October 2014

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







Monday, 24 February 2014

தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?

குற்றச்சாட்டு

"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள்  என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள். 

காரணம் குழப்பம் ​​
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.

ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது.  அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். 

கண்டிக்கப் படவேண்டியது 
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.

யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள்  என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம் 
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.

2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு  எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன்  சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...

நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?

நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.

அமேரிக்கா செய்யுமா?

ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---

எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...

உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?

காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே  --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.

அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!



Saturday, 27 October 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர் த்ரி - ஆஜித் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயமாய் சூப்பர் சிங்கர். இந்த முறை ஜூனியர் என்பதனால் இன்னும் அதிகமான நெருக்கம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் ... 
அற்புதமான குழந்தைகளின் குரல்களில் ஏற்கனவே கேட்ட பாடல்கள் கூட இன்னும் இனிதாகவே இருந்தது.

பைனலில் திரு. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத் வெற்றி பெற்றது நிச்சயமாய் அவனுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். உண்மையில் வெற்றி பெறுவதற்கான நபர் அவர்தான் என்றே நான் கருதியிருந்தேன். அப்படி இல்லையென்றாலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.

என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம் அல்லது ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.   இது போல எத்தனை பேர் பெருமைப் பட்டிருக்கிறிர்களோ, யாருக்குத் தெரியும்? 
வைல்ட் கார்டில் இருந்து பைனலுக்கு வரும் நபர்களுக்கு வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது நேரடியாக பைனலுக்கு நுழையும் நபர்களுக்கு இல்லை.  காரணம் நிறைய இருக்கின்றது. 

இந்த முறை நிச்சயமாய் சுகன்யாவும் கவுதமும் ஒழுங்காக பாட வில்லை. இருவரின்  வாய்சும்    ஒத்துழைக்க வில்லை என்பது மட்டுமலாமல் பல இடங்களில் சுருதி சேர வில்லை என்பதும் உண்மை. உண்மையிலேயே சுருதி சேரவில்லையா சேர விட வில்லையா என்பது தெரிய வில்லை. மிகவும் கடினமான பாடல்களையே தேர்ந்தெடுக்கும் சுகன்யா இந்த முறை கொஞ்சம் இலகுவான பாடலையே தேர்ந்தெடுத்தது போலவே இருந்தது. சரி ...அப்படியே அவர்கள் மிக நன்றாகப் பாடி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தோன்றியது...  இது எப்போதும் நடப்பது தானே. அடுத்த முறையில் இருந்து முதலில் நேரடியாக பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் நபர் நிச்சயமாய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே யோசிப்பார் இப்போது சுகன்யா யோசித்துக் கொண்டிருப்பதைப் போல.

வழக்கம் போல திரு மனோ அவர்கள் ஏதாவது சொல்லி அவர்கள் எதையும் கணக்கு பண்ணுவதில்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெளியேற்றப் படும் போது புள்ளி ஐந்து மதிப்பெண்களில் தான் வெளியேறி இருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்று யாரும் உள்ளேயும் இல்லை வெளியேவும் போகவில்லை.  அப்படித் தான் திரு மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த ரவுண்டில் இந்த இடத்தில் சுருதி சேரலை .. உங்கள் இரண்டு பேரில் நீ இதில் சரியில்லை... அதில் சரியில்லை என்று யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் புள்ளி. ஐந்துதான் வித்தியாசம் இருக்கும்.
அது எப்போதுமே பொய் என்பதை அவராக மைக்கைப் புடுங்கி பைனல் மேடையில் பேசி மீண்டும் நிருபித்து விட்டார். அதாவது - அஜூத் மற்றும் பிரகதி இருவரும் அனைத்து நடுவர்களிடமிருந்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றதாகவும், எஸ். எம். எஸ் களில் மட்டும் புள்ளி ஐந்து மதிப்பெண் கூடப் பெற்று ஆஜித் வெற்றி பெற்றதாகவும் திரு. மனோ சொன்னது தாங்கள் ஏற்கனவே இது போல ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சொன்னது உண்மையில்லை என்பதை நிருபித்து இருக்கிறார்.

அந்த புள்ளி பாதி எஸ். எம். எஸ் அனுப்புன அந்தப் புண்ணியாவான் யார்ன்னு தெரிந்தா அந்த மாதிரி பாதி எஸ். எம். எஸ். எப்படி அனுப்பு றதுன்னு சொன்னா நல்லா இருக்கும். ஒருவேளை அவரே புள்ளி. ஐந்து எஸ். எம். எஸ். அனுப்புனாரோ என்னவோ.

என்னதான் உள்ளே அரசியல் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தைப் பார்க்க மாட்டேன் என்கிற உறுதியை மட்டும் என்னால் வழங்க முடியாது. இசைக்கு மயங்காதவர்கள் யாரவது உண்டா... என்ன?

****************************************************

ஆனால் இந்த முறை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஊமைப் படம் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவிக்கே சேரும். இதை தெரியாமல் நடந்த பிழையாகக் கருத முடிய வில்லை.