Showing posts with label மலையாளர்கள். Show all posts
Showing posts with label மலையாளர்கள். Show all posts

Monday, 16 September 2013

பாராட்டு, பானம், பாலியல் குற்றங்கள் -

பாராட்டு 
செய்தித் தாளைப் புரட்டினால் மோடி சகட்டு மேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்கிற செய்தியை பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன:  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் வாஜ்பேய் மற்றும் அத்வானிக்குப் புகழாரம். ராணுவ அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு. இந்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு. இதைப் பார்த்த உடனே தங்கள் பங்குக்கு சளைத்தவர்கள் இல்லை என மோடியைப் பலர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மோடி பன்முகத்தன்மை கொண்டவர் என வெங்கையா நாயுடு புகழாரம். ஒரு முகத்தை பார்க்கவே பல பேருக்கு பயமா இருக்கு இதுல பன்முகமா... மோடிய அறிவித்ததில் ஒரே வருத்தம் திரு அத்வானிக்குத்தான்... ஆனாலும் அவர் எப்படியாவது வழிக்கு வந்து விடுவார். அந்த நம்பிக்கையை திரு ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்வது இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர் மேலானவர் ஆகிவிட்டார் என்கிற வருத்தமோ என்னவோ?

பானம்

  • லண்டனில் பிறந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஐ.பி. எல். ஊழல் பற்றி எதோ வர தனது அமைச்சர் பதவியை தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஊழல் குற்றம் சாட்டப் பட்ட எந்த அமைச்சர் தண்டிக்கப் பட்டார்... வழக்கம் போல மீண்டும் பதவி. சும்மா இல்லாமல் விவேகானத்தர் சிலை திறக்கப் போன இடத்தில் விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது  என்று உளறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  கலகம் விளைவிப்பவர்கள் எல்லாம் பதிவியில் இருக்கும் போது மது அருந்தியவர் மகானாக இருக்கக் கூடாதா என்ன​? 


  • பார்களைத் தமிழகம் முழுதும் தொடங்கி அதைப் பராமரித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து நமது நாடு நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவை மிஞ்ச அரசியலில் யாரும் இல்லை. நேற்றுக் கூட பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அம்மாவைப் பார்த்தார்களாம். அவர் வெறும் பத்திரிக்கையாளரா என்ன​? அது கிடக்கட்டும். மோடி அவர்கள் மதுரையில் கூட நிற்கப் போவதாகக் கேள்வி. அது என்னமோ தெரியலை எரித்தலுக்கும் திரு மோடி அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் போல - கண்ணகி எரித்த மதுரையில் நிற்கப் போகிறாரே அதனால் சொன்னேன். இதற்கும் கோத்ரா எரிப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அது என்னமோ தெரியலை தமிழகத்தை கலவர பூமியாக ஆக்குவதில் எல்லாருக்கும் என்ன சந்தோஷமோ தெரியலை...


  • சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கேயோ போயாச்சே - புதிதாக அம்மா குடி நீர்... அம்மா உணவகம். குறைந்த விலையில் நிறைந்த தரம். பஸ் ஸ்டாண்டுல குறைந்த விலை போல பார்ஸ்டாண்டிலும் இது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாலியல் குற்றங்கள்
பெண் பாலியல் வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரித்திருக்கிறது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் மரணதண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடும் என்றால் நானே குற்றவாளிகளைத் தூக்கிலிட எழுதிக் கொடுப்பேன் என்று சவால் விட்டாராம். அதுமட்டுமல்ல பலாத்காரம் செய்யப் பட்ட பெண்மீது அவள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றிய பெண். அப்படிப் பட்ட பெண் எனக்கு இருந்திருந்தால் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல வழக்கறிஞர். இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நீதிமன்றம் சிறந்து விளங்கும்.
அவர் வாய் வைத்த நேரமோ என்னமோ...
சிதம்பரத்தில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலாத்காரம் செய்ய, அப்பெண் மருத்துவ மனையிலும் இவர் தமிழக சிறையிலும் இருக்கின்றார்.
ஓடும் பஸ்ஸில் நடந்தது போல ஓடும் ரயிலில் ஏசி கோச்சில் இருந்த ஒரு டாக்டரை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒரு சி.பி.ஐ வீரரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை.  சோழவரத்தில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு கும்பல் வன்முறை செய்திருக்கிறது
இது போன்ற செய்திகளை இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்...
என்னதான் தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காரணம் வேறு எங்கோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை விடுவித்த அரசாங்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் பத்து கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது - எதுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கான தொகையை 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பதற்காக.... அம்மா உணவகத்தில அவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன? சாதாரண மக்களை விட அவங்க சாப்பாட்டுக்கு அதிக பணம்... பேஷ் பேஷ்...


சசி தரூர் அவர்களுக்கும், அனைத்து மலையாளர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். அதனால் இன்று சென்னை, கோவை, உதகமண்டலம் மற்றும் எல்லா இடங்களிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை... வாழ்க தமிழ்!


Tuesday, 27 August 2013

உம்மன் சண்ட்டிக்கு ஒரு உம்மா

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் ஒரு பதிவோ என தவறாக என்ன வேண்டாம். இது அப்படிப்பட்ட பதிவு ஒன்றும் இல்லை.

செல்போன் பயன்படுத்தாத முதல்வர் - திறந்த புத்தகம் என்று சொல்லப் படுகிற கேரளா முதல்வருக்கு எதற்கு ஒரு உம்மா... இப்போதுதான் சோலார் பேணல் விவகாரத்தில் சிக்கிச் சிதறினார் வேறு ஏதாவது பிரச்சனையா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

கேரளத்தில் அரசுப் பணி பெற மலையாளம் கட்டாயம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் தேர்வில் மலையாளம் மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பத்தாம் வகுப்பு பாடத் திட்ட அளவில் அரசு நடத்தும் மொழித் தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே நிரந்தர பணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதுக்கு எதுக்கு உம்மா... தமிழகத்தில் அது மாதிரி ஒரு தேர்வு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை... கோட்டைக்குள் சென்றால் பல மலையாளிகள் தமிழ் தெரியாமலே இருக்கிறார்கள்... இன்னமும் ஞான்  ஞி என்றே பேசுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழித் தேர்வு வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்...

தமிழ் மொழியை தமிழக அரசே கவிழ்க்கும் சூழ் நிலையில் மலையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் உம்மா சண்டிக்கு உம்மா குடுத்தால் தப்பில்லை...
இதைப் பார்த்தாவது நம்மவர்கள் சுரணையோடு இருந்தால் நல்லதுதானே... ஆனால் அவர்களே ஆங்கிலிபிசி ல் பேசினால் நாம் என்ன செய்ய முடியும்?

Wednesday, 29 May 2013

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

Sunday, 19 May 2013

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

Saturday, 7 January 2012

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    Friday, 30 December 2011

    முல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா?


    'லை' யா 'ல' வா? இதுல என்னடா இருக்குன்னு நினைக்கிரவங்களுக்காக...


    வலைப் பதிவொன்றின் வழியாக ஆங்கில பதிவொன்று வாசித்தேன்.
    ராதிகா கிரி  - அதில் எப்படி தமிழகத்தில் மற்றும் மற்ற இடங்களில் பனிபுரியும் மலையாள பத்திரிக்கை ஆசிரியர்கள் கேரள சார்பான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள் என்று விவரித்திருந்தார்கள்.
    சின்ன விஷயம்தான் ஆனால் அது சொல்லும் படிப்பினைகள் ஏராளம்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 'பறந்து' பரந்து விரிந்து இருக்கும் கேரளா நண்பர்கள், எப்படி எப்போதும் உண்மையைத் தாண்டி தங்கள் கேரளா விரும்பிகளாக இருகிறார்கள் என்பது பலருக்கு புரியாது.
    சொன்னால்,  நம்மை பழமை விரும்பிகள் என்று சொல்வதற்கு நிறைய பேர் தயாராக இருப்பார்கள். பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வாசம் செய்யும் எனக்குத் தெரிந்த கேரளா மாநிலத்தின் குடிமகன் ஒருவர் கேரளா சென்று புதிய கார் வாங்கி வந்தார். ஏன்  என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கேரள பதிவென்னோடுதான் இங்கே இன்னமும் அந்தக்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.

    எங்கே இருந்தாலும் எப்படி தாங்கள் விரும்புவதை நிலை நிறுத்துவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.. முல்லைப் பெரியாறு அணை பற்றி அறிய விக்கிப் பீடியாவில் தேடிய போது அதிலும் [mullaperiyar] என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. அதாவது பரவாயில்லை. அதில் எழுதியிருந்த விசயம் - இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ள 'ரப்பிஷ்' ஒப்பந்தம் என்று ஆரம்பித்து இருந்தது.

     ... நான் விக்கி பெடியாவில் லாக் இன் செய்து, அந்தப் பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்னும் விக்கி பீடியாவில் எடிட் செய்ய படிக்க வேண்டியிருக்கிறது. வேறு யாரோ நிச்சையம் முறையீடு செய்து அதை மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை இப்போது மாற்றப் பட்டிருக்கிறது.  ரபிஷை எழுதியது நமது கேரளா நண்பர்கள்தான்.

    தமிழன்பர்கள் நிறைய இது போன்ற பொது தளங்களில் எழுத வேண்டிருக்கிறது.

    ஆனால், நமக்குத் தெரியாமலேயே அல்லது விஷயம் புரியாமலேயே இன்னும் கேரளா கேட்பதில் தவறென்ன என்று கேட்கிற தமிழக வாழ் கேரளா நண்பர்கள் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு - கொலை வெறி பாடலை ... மாற்றி டேம் பர்ஸ்ட் கேரளா புல்லா வாட்டரு - அப்படின்னு மாத்தி அதுல அம்மாவை ரத்த வெறி பிடித்த பேயாக படம் வெளியிட்டு ... இதல்லாம் தேவையா.. விக்கி பெடியாவில் ரப்பிஷ் என்பது... சாமி கும்பிட வருபவர்களை ... அதாவது அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டு வருபவர்களை உதைப்பது, வண்டிகளை நொறுக்குவது ,,,,,

    ஆனால் இங்கே இருப்பவர்கள் மட்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கும், அதை அங்கே ஊருக்கு எடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பு வேண்டுமாம்... அணை உடைந்தால் கேரளா புல்லா தண்ணீர் என்ன புழுகுடா சாமி. அணை உடைந்தால் இடுக்கிக்குதான் வரணும் தண்ணீர்.

     கொஞ்சம் கூட இருக்கிற இடத்தின், சம்பாதிக்கிற இடத்திற்கான கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இப்படி வெறி பிடித்து  உண்மை புரியாமல்  இருப்பவர்களை நாம் என்ன சொல்லுவது... 

    திரு வை.கோ. சொன்னது போல - நீ இந்த ஒப்பந்தத்தை மதிக்கலன்னா நானும் மாநிலப் பிரிப்பை ஒத்துக் கொள்ளலை - இடுக்கி தமிழகத்திற்கு சொந்தம்...
    வேறென்ன சொல்றது...