Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Thursday, 10 October 2013

ராகுல் காந்தி

நீங்க
எப்போ வருவீங்க எப்புடி வருவீங்கன்னே சொல்ல முடியலை -
[ரஜினி ரசிகர்கள் அமைதி காக்கவும்]

திடீர்னு பிளாஸ்டிக் டப்பாவில மண் சுமந்திங்க எங்கள் தலைவரே,
உங்களை அப்படிப் பார்க்கிறப்ப அயர்ன் பண்ணின சட்டை கசங்காம ஆயிரம் பேரை அடிச்சுட்டு அசால்ட்டா நிக்கிற எங்க ஹீரோக்கள் மாதிரி
மண்ணு ஒட்டாம, கூடை வெயிட்டு கூட கூடிரக் கூடாதுன்னு சுமந்த உங்களைப் பாத்தா பெருமையா இருக்கு.

நான் கும்பகர்ணன் மாதிரிங்க... ஆனா அத ஏன் செஞ்சிங்க எதுக்கு செஞ்சீங்கன்னு விடை தெரியாமலே
பல நாள் தூக்கம் இல்லாமக் கிடக்கேன்.

உங்க சூட் கேசையே நீங்க தூக்க மாட்டிங்க -
நீங்க எப்படி???

சரி அத விடுங்க இன்னும் மூணு மாசத்துக்கு
என்னைத் தூங்க விடாம செய்யவே இன்னொரு செய்தியை சொன்னிங்க பாருங்க என்னால ஜீரணிக்கவே முடியலை.  .

கூட இருந்தபோதெல்லாம் ஒன்னும் சொல்லாம 
அமைதியின் அரசர் நம் பிரதமர் 
தொலை தூரம் சென்ற போது நீங்க சொன்னிங்க  பாருங்க -
குற்றவாளிகளைக் காப்பாற்றும் சட்டத்தை குப்பையில போடணும்னு 
ரொம்ப சந்தோசம் - 
நீங்க கூடை தூக்குறப்பவே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்,
அந்தக் கூடைய அன்னைக்கு தூக்கிப் போட்டதுமாதிரி எல்லாத்தையும் தூக்கிப் போடுவீங்கன்னு...
என்ன செய்யுறது உங்க அளவுக்கு யாருக்கும் இங்க புத்தி இல்லை.

அன்பானவரே -
அப்படியே 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விலக்கு -
அப்படின்னு சொல்ற சட்டத்தையும் பத்தி ஏதாவது அள்ளி விட்டா 
கொஞ்சம் நல்லா இருக்கும்..

காசு எவன் குடுத்தான்னு மக்களுக்குச் சொல்ல கூடாதுன்னு எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கீகளாம்ல...
நல்ல விஷயம்தான்...
நம்ம காங்கிரசுஸ்ல 70 சதவீதத்துக்கு மேலான பணத்தைக் கொடுத்தது 
யாரென்று தெரியாதுன்னு தாக்கல் செய்திருக்கீங்கலாமே 
பா.ஜ.க வும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லைன்னு 
அவர்களும் அந்த அளவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் 
யாருன்னு சொல்லமாட்டேன்னு சொன்னபிறகு நீங்கல்லாம் 
சேர்ந்து இந்த அவசரச் சட்டம் கொண்டு வர்ரீங்க...

சீக்கிரம் இதைப் பத்தி பேசுனா நல்லா இருக்கும். அதோடு சேர்த்து இந்தியக் குடிமக்கள் ஏன் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்... அதனால் மக்கள் அனைவருக்கும் அரசு கேட்கும் கணக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்னும் சொன்னிங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புண்ணியமா போகும்.

ஆமா அடுத்து எப்பங்க பேசுவீங்க
அவர் அமேரிக்கா போன பின்னாடியா?

பாவம் அமேரிக்காவே அடுத்த வேளை சம்பளம் கொடுக்க வக்கில்லாம எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிடக்கான்.
ஆனா வெக்கம் இல்லாம நாம அவன் பின்னடிக் கிடக்கோம்.
என்ன செய்ய நீங்க இப்படி ஏதாவது பேசுவீங்கன்னா இன்னொரு தடவை நம் பிரதமரை அங்கே போய் வரச் சொல்லலாம்.

நீங்க பேசுவீங்க ஆனா நான்தான் இன்னும் ஆறு மாசத்துக்கு தூக்கம் வராம கஷ்டப்படுவேன்.
பரவா இல்லை நாடு நல்லா இருக்கணும்னா தூங்கம இருக்கிறது ஒன்னும் தப்பில்லை.







Tuesday, 13 August 2013

குளோபல் காங்கிரசிடம் சமர்ப்பிக்க காந்திக்கு ஒரு வேண்டுகோள்

பாட்டும்   பெட்ரோலும் 
சின்ன வயசு  விஷயங்கள் பலவற்றை இப்போது நினைக்கிற போது எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுவதால் நான் என் முட்டாள் தனங்களை எல்லாம் மறந்தே போய் விட்டேன்.
சின்ன வயதில் எம். ஜி. ஆர். மற்றும் சிவாஜி படங்களை பார்த்த போதெல்லாம் எப்படி இவர்கள் இப்படி அழகாகப் பாடுகிறார்கள் என்று தோன்றும்... சிவாஜியின் வாயசைவில் அவரே பாடுவது போலத் தோன்றுவதால் அவர்தான் பாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். .... அதாவது பின்னணிப் பாடகர்கள் என்கிற விஷயம் எனக்குத் தெரியவில்லை...
ரஜினிப் படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு - வேறெங்க ஊர்த் திருவிழாக்களில்தான் --- எங்க திருவிழான்னாலும் நடந்து போய் செட்டில் ஆகி ... விடிய விடிய படம் பார்த்த காலங்கள் உண்டு --- நான் சொல்வது இதற்கு முன்பு---

ஒருமுறை ஏதோ ஒரு பாட்டில் ஹீரோ வாய் அசைக்காமல் இருந்தாலும் பாட்டு தொடர்கிறது... எனக்கு முடியலை எப்படி வாயைத் திறக்காமல் இப்படி சுத்தமா சத்தமா பாட முடியும்... நானும் வீட்டுக்கு வந்து வாயை மூடிக் கொண்டு பாடிப் பாக்குறேன்.... ம்க்கும் ம்க்கும் தான்... அதை அப்படியே தொடந்திருந்தால் நான் மங்கி வெங்கி மாதிரி ரொம்ப பேமஸ் ஆகி இருப்பேன்.  என் அண்ணன் நான் செய்யுற செட்டைஎல்லாம் பாத்துட்டு அட மக்கு மக்கு பாடுறது அவன் இல்லை வேற ஆளுன்னு சொன்னதுக்கு என்னைய முட்டாள்ன்னு நினைச்சியான்னு திருப்பிக் கேட்டேன்... இப்ப நினைச்சா சிரிப்பா இல்லை...
°°°
இதாவது பரவாயில்லை எங்க ஊர் மெயின் ரோட்ல இருந்தாலும் சுத்து வட்டாரத்துல இருபது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்கே கிடையாது... ஒரு வாட்டி மே மாச விடுமுறையில் மாமா வீட்டுக்கு திருச்சிக்கு போனேன் - அப்பா கூட்டிட்டுப் போய் விட்டாரு. பெட்ரோல் இருக்கிற இடத்துலதான் பெட்ரோல் பங்க் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... மாமா திருச்சில மட்டும் எப்புடி இம்புட்டு பெட்ரோல் கிடைக்குது எங்க ஊர்ல ஏன் பெட்ரோலே இல்லை - ன்னு கேட்டேன்...  மாமா ரெண்டு விஷயம் சொன்னார்... அட முட்டாப் பயலே... பெட்ரோல் தோன்ற எடத்துல வராது ஊத்தி வச்சு எடுக்குறாங்கன்னு சொன்னதுக்கு போங்க மாமா பெட்ரோல் நிலத்துலேர்ந்துதான் வருதுன்னு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்க நீங்க என்ன ஊத்தி எடுக்குறாங்கன்னு சொல்றீங்க போங்க மாமா ...

°°°
கேட்டா உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா? இவன் இவ்ளோ பெரிய முட்டாப் பயலான்னு  என்னையப் பத்தி நினைப்பு வரும்... பரவாயில்லை... நான் சின்னப்பயலா இருந்தப்பதான் அப்படி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விஷயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் நம்ம நாட்ட ஆள்கிற மிகப் பெரியவர்களைப் பார்த்தா, வளர்ந்த பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளாமல் மேலோட்டமாய்ப் பார்க்கிற அவங்க என்னைய விட பெரிய முட்டாள்களாத் தெரிவதானால் என் சின்ன வயசு முட்டாள் தனங்களை ஜாலியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.
°°°
முப்பது ரூபாயும் மூன்று வேளை  சாப்பாடும் 

முப்பது ரூபாய்க்கு ஒரு நாளைக்கு சாப்பிட முடியும் என்று பேசுற அமைச்சர் அந்த முப்பது ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் போட முடியுமான்னு கேட்டிருப்பாரா ... மூணு வேலை ரோட்டுக் கடையில சாப்பிட்டு இடையில இரண்டு காப்பித் தண்ணி குடிச்சாலே முப்பது ரூபா பத்தாதே அறிவு ஜீவிகளா எப்படி முப்பது ரூபா போதும்?
சரி அது போதும்னா எல்லா அமைச்சர்களுக்கும் 900 ரூபா சம்பளம் குடுத்து மக்களோட மக்களா வைக்கலாமே சாமி... அப்படியே எல்லாரும் கவர்ன்மெண்டு பஸ்லதான் பார்லிமென்ட்டுக்கு வரணும்னு சொன்னாங்கன்னா குடுக்குற 900 ரூபாயையும் பஸ்ஸுக்கே சரியாப் போகும்னு இந்த அறிவு ஜிவிகளுக்குத் தெரியுமா...முப்பது ரூபா குடுத்தா இருக்க இடத்துக்கு சாப்பாடு வந்துர்ற மாதிரி --- வாயை மூடிக்கிட்டா சுதி சுத்தமா பாட்டு வர்ற மாதிரி பேசுறீங்களே மான்பு மிகு அமைச்சர்களே...
முப்பது ரூபாய்க்கு நம்ம தேசியக் கொடிக்குள்ள சுத்தி வைக்கிற பூ வாங்க முடியுமா சாமி.  இதுக்கு வக்காளத்துக்கு  பதிப்பாளர்கள் வேற. உங்க பதிப்பகத்தை எல்லாம் மூடிட்டு ஹோட்டல் நடத்தி முப்பது ரூபாய்க்கு மூணு வேளை  சாப்பாடு போடுங்க நானும் லைப் டைம் பிளான்ல முதல் ஆளா சேர்கிறேன்.

முக நூலில் படிச்சேன் --- ஒரு பணக்காரனின் ஷாம்ப்பூவில் இருக்கும் பழங்கள் கூட ஒரு ஏழையின் தட்டில் இருப்பதில்லை என்று... ஷாம்பே முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாதே அவன் எப்படி சாப்பாடு வாங்க முடியும்...
முப்பது ரூபாய்க்கு ஒரு ஷாம்பூ வாங்க முடிந்தால் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் வீட்டில் இருக்கிற எல்லாரும் சாப்பிட வேண்டியதுதான்.
சரி ஒரு வீட்டில் மூணு இருந்தால் ஒருத்தர் வேலைக்குப் போனால் மூணு பேரும் முப்பது ரூபாய்க்குள்ள  சாப்பிட முடியமா மாமு.

காந்தியின் சுதேசி காங்கிரஸ் 


காந்தித்தாத்தா சுதேசி இயக்கம்னு ஒன்னு ஆரம்பிச்சாரு... கதர் இயக்கம் -- உப்புச் சத்தியாகிரகம்.... வெளி நாட்டுப் பொருட்களை வாங்காதே... புத்தகத்துல படிக்கிறோம்... ருப்பியாவுல மட்டும் காந்தித் தாத்தா சிரிக்கிறார்... இன்னைக்கு இதே காங்கிரஸ்தான் வாங்க வாங்க ன்னு வெளி நாட்டுக் காரனைக் கூப்பிடுது.
ஒரு கட்டுரை ஒன்று படித்தேன். தமிழ்ப் பற்று இந்தியப்பற்றாளர்கள் எல்லாரும் போட்டி போட்டு நாம் அனைவரும் முயற்சி செய்தால், இந்தியப் பொருட்களை வாங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியும்... அதனால் சோப்பு என்றால் சந்திரிகா, சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பூ என்றால் டாபர், குளிர் நீர் பானம் என்றால் இளநீர் ... இப்படி நாம் ஒரே நாளில் வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் இருபது ரூபாய் உயரும் ...

அது மட்டுமல்ல அந்தக் கட்டுரையில சாதாரணக் குடிமகனான எனக்கே தெரிஞ்சுர்க்கே ஏன்  இது நிதி அமைச்சருக்குத் தெரியலைன்னு அண்ணனுங்க கேட்குறாங்க... நம்ம அமைச்சரு அடப் போங்கடா முட்டாப் பசங்களான்னு சொல்றாரு...

நம்ம அண்ணன்களுகிட்ட வருவோம்... ரூபாய் மதிப்பு உயரக் கூடாதுன்னுதானே அவங்க இப்படியே பண்றாங்க... சில்லறை வியாபாரம் முதக் கொண்டு, காந்தி அந்நிய பொருட்களை, துணிகளை வாங்காதீர்கள் என்று எதிர்த்த அந்நிய கம்பெனிகளை உள்ளே கூட்டிகிட்டு வர்றாங்க ... ஒரு ஏரியா விடாம எல்லாப் பக்கமும் கடையத் திறந்து கோகோ கோலாவும் கோல்கேட்டும் வித்தா நான் எங்க போய் தேடுறது... ஏதோ பவொண்டோ  மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சு ஓடுது...

காங்கிரசுகாரர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து நான் என் அண்ணனைச் சொன்ன மாதிரி காந்தியின் சுதேசியை முட்டாள்ன்னு சொல்றாங்க... நான் வளர்ந்துட்டேன்... நம்ம அரசியல்வாதிகள் எப்போ வளரப் போறாங்கன்னு  தெரியலை...
***
வெளி நாட்டு மோகம் நம்மைக் கண்ணை கட்டிருச்சு... எத்தனை காந்தி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இந்தக் காங்கிரசுக்காரர்கள் இப்படி இருக்கிற வரை... இந்தியா ஒளிரனும்னா வெளிநாடு மாதிரி இருக்கணும்னு கதை சொல்லுவாங்க... அவங்களை மாதிரி இருந்தாதான் பிரகாசமா இருப்போம்... பொருளாதாரம் வளரும் அப்படி இப்படி எல்லாம் கதை சொல்லுவாங்க.
இதெல்லாம் வெறும் கனவு... வெளிநாட்டுக்காரனுக்கு மார்க்கெட் இல்லை அதுனால நம்மளைத் தேடுறான்... என் மாமா ரெண்டு விஷயம் சொன்னாருன்னு சொன்னேன். முதலாவது நான் முட்டாப்பயன்னு சொன்னார். இரண்டாவது... தோன்ற எடத்துல பெட்ரோல் வந்தா நாம ரொம்ப பணக்கார நாடா ஆகிடுவோம்...
எனக்கு -பெட்ரோல் தோன்ற எடத்துல வரலை'ன்னு தெரிஞ்சிருச்சு... ஆனா அதே சமயத்துல நம்ம பொருட்களை மட்டுமே நாம பயன்படுத்தினா நாம நல்லா இருப்போம் அப்படின்னு தெரியுது... எனக்கு அறிவு வளர்ந்திருச்சு ...

தோன்ற இடத்துல வர தண்ணியையே அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கிற இந்த அரசியல் வாதிகள் தோன்ற இடத்துல பெட்ரோல் வந்தாலும் நம்ம நாட்டை வளமான நாடா ஆக விட்டிடுவாங்களா என்ன​?
நம்மகிட்ட இருக்குற விஷயத்தை வச்சு நாம பணக்காரனா ஆகிறத தடுக்குற இந்த அரசியல்வாதிகள் முட்டாளா அறிவாளிகளா மாமா!
***
அணுப்பிரகாசம் வெடிப்பிரகாசம் 
அணையப் போற விளக்கு பிரகாசமாய் எரியும்ன்னு சொல்லுவாங்க ... நம்ம நாடு என்னைக்கும் பிரகாசமா இருக்கணும், என்றுமே ஒளி கொடுக்கணும்னு நினைக்கிற பல பேர் ரோட்டுல நின்னு குரல் கொடுக்கிறாங்க.... அணு உலை ஆபத்தானது அது அணையும் போது பிரகாசமாய் எரியும் மெழுகு மாதிரி அது நிரந்தரமில்லைன்னு சொல்றாங்க ...

நம்ம காங்கிரஸ்வாதிகள் கேக்குறது இல்லை... அடப்பாவிங்களா சில்லறை வியாபாரிகள் வயுத்துல அடிக்காதிங்கடா ன்னா கேக்குறதில்லை... அறிவு ஜீவிகள், மனித ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இவர்கள் சொல்லுவதை இந்த அரசியல்வாதிகள் கேட்பதில்லை...

யார் எது சொன்னாலும் அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்கிறது சுதேசிக் காங்கிரஸின் பேத்தி...
எந்த ஊர்ல எவன் போராட்டம் பண்ணினான் தண்ணியை கோகோ கோலா இல்லாட்டி பெப்சிக்கு குடுன்னு.... எந்த ஊர்ல வெளி நாட்டுக் கம்பெனிகளை உள்ள விடுங்கன்னு போராட்டம் பண்ணினான்... நீங்களா உள்ள விடுறீங்க... நீங்களா ஒளிரும் இந்தியாங்கிறீங்க ... நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறார்கள்என்று சொல்றீங்க ... சென்னை என்ன வெறும் மவுண்ட் ரோடா... அப்ப கொட நாட்டுல இருக்குறவங்க எல்லாம் ஏழைகளா என்ன... என்ன கருமாந்திரமோ!
ஆனா நாட்டுக்கு நல்லது, மக்களுக்கு நல்லதுன்னு சொல்ற போராட்ட, வீரம் மிக்க மக்களை, மனித ஆர்வலர்களை, சூழல் நண்பர்களை முட்டாள்கள் என்கிறீர்களே நான் எங்க அண்ணனையும் மாமாவையும் சொன்னது மாதிரி... என்ன செய்ய முடியும்?
வெளிநாடு வெளிநாடுன்னு மோகத்துல இருக்குற இந்தக் காங்கிரஸ் காரர்களை காந்தித் தாத்தாவே நீதான் காப்பாத்தணும்...

ஆனா தாத்தா, நீர் கோமணத்தோட போகாதேயும்,  அப்படியே போனாலும் இன்டிமிசிமியின் கோவனம் கிடைச்சாக் கட்டிகிட்டுப் போம். அப்பத்தான் காங்கிரஸ் ஆபிசுக்குள்ளேயே அனுமதி கிடைக்கும் (இன்டிமிசிமி / ஒரு இத்தாலிய நாயுடு ஹால் மாதிரி) - இப்பப் புரியுதா​?  அதுக்கப்புறம் தான் சுதேசியே பேச முடியும்... ஆமா​!

அப்படியே அவங்க கிட்ட சுதந்திர தின வாழ்த்துக்களையும் சொல்லிருங்க - அதாவது இந்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய முதலாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்த உண்மையான காங்கிரஸ் இதுதான் என்பதால் வாழ்த்துக்களை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

காங்கிரசுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் -  மக்களிடமிருந்து பிடுங்கி அந்நியர்களுக்கு நாட்டைக் கொடுத்ததற்கு... உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன?

Tuesday, 31 January 2012

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.  

Monday, 5 December 2011

அந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்


கொசுறு ஒன்று 
கடந்த பதிவு சில கேள்விகளைத் தருவித்திருக்கிறது. அந்தப் பதிவு பொருளாதார விளக்கங்களை கொண்டிருக்கவில்லை, சிறு வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்வது சரியா? சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டினால்தான் ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி உருகிறதா என்ற கேள்விகள். அதற்கு பின்னூட்டத்தில் எழுதிய பதிலை இப்போது பதிவாக வெளியிடுகிறேன். பின்னூட்டத்தில் படித்தவர்கள் வேறு வலைப் பூவிற்குச் சென்று விடலாம்.
கருத்து
  • கடந்த பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
  • மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை. ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதோ என் கருத்து அல்ல. பல மாற்றுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே சொல்கிற செய்தி.
  • ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
  • நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் போய் விட்டோம். எது நல்ல உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
  • இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட.
  • முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
  • இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் இருந்தும் நாம் காப்பாற்றப் பட வேண்டியது அவசியமே!
  • சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
  • அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். 
  • டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?
கருத்து விவாதங்கள், பரிமாற்றங்கள் தான் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற என்ற ஒன்றை, புதிய யுத்தியை கண்டு பிடிக்கவும் கையாளவும் செய்யும். இல்லையெனில், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிற அந்த ஒரே வழி என்று மேலை நாடுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதைத் தான் பின்பற்றிக் கொண்டிருப்போம்.

கொசுறு இரண்டு 
பல கேள்விகளை கடந்த பதிவில் விதைத்த வௌவால் அவர்களுக்கு நன்றி. அதனாலேயே இந்தப் பதிவு. வருத்தம் என்னவென்றால் அவர் கேட்டது போல பொருளாதார விளக்கங்களை நான் கூற வில்லை; அது இந்தப் பார்வைக்கு தேவையற்றது என்கிற எனது [தவறான !] எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
கொசுறு மூன்று
நேரம் கிடைக்குமெனில் அந்நிய முதலீட்டில் உள்ள நன்மைகளையும் பற்றி எழுதலாம். பரந்து பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். ஆனால் அதை நண்பர்கள் பலர் செய்கிறார்கள்.
வௌவாலின் பதிவு
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

ரேவேரியின் பதிவு
அழியப் போகும் சிறு வணிகர்கள் 

ஜீவானின் கேள்வி
இது சரியா 



 

Friday, 2 December 2011

சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?

ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.


நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.
Posted by Picasa

Thursday, 11 August 2011

கலவரம் - அமெரிக்கா - கடன் அன்பை முறிக்கும்?

வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொண்ட இரு நாடுகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் வல்லரசு என்று கருதப்பட்ட ஒரு நாடு - அமெரிக்கா - தனது கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டது. அதன் வழியாகவே அது உடனடியாக மிகப் பெரிய இக்கட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.காவல் துறையினர் செய்த ஒரு தவறு ஒருவரின் உயிரைக் குடிக்க இங்கிலாந்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நடந்த கலவரம் என்று எண்ணி விட முடியவில்லை.
இன்று அமெரிக்கக் கலவரம் பற்றி -

அமெரிக்கா என்ற உடன், வானளாவிய கோபுரங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், மின்னொளி நகரங்களும், ஹாலிவுட் தொழில் நுட்பம், நாகரிகத்தின் உச்ச கட்டம் என எல்லாரையும் நினைக்க வைத்தது மட்டுமல்ல – இப்படித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் அந்த தாக்கம் தெரியும்.
இந்த மயக்கத்தில் அமெரிக்கர்களும் இருந்தார்கள் – அமெரிக்க மோகத்தில் [நாம் எல்லாரும்தான்?] இருந்தவர்களும் மயக்கத்தில் இருந்தார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது எல்லாரையும் மயக்கத்தில் இருந்து எழுப்பும் மருந்து என்றே என்றத் தோன்றுகிறது.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவர்களது மமதைக்குக் கிடைத்த அடி – அம்மாவுக்கு நேற்று கிடைத்தது போல. ஊரு உலகத்துக்கு எல்லாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி லோக்கல் பஞ்சாயத்துல கோட்டை விட்ட கதைதான். கோடிக்கணக்கான டாலர்கள் இன்னும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மமதையில் இருப்போர் கொஞ்சம் விழித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிக் கடன் வாங்கித் தனது பொருளாதாரத்தை மேல் நோக்கி வைத்திருப்பது – மேக்-அப்பு கதைதானே. எவ்வளவு நாளைக்குத்  தான் சாயம் பூசிக்கிட்டே இருக்க முடியும். அப்படி என்னய்யா கடன் வாங்கி சாயம் பூசி? ஒரு மனிதன் எப்போது செயற்கையாய் தனது அழகைக் கூட்ட முயற்சிக்கிறானோ அது அவனுக்கு ஆபத்திலேதான் முடியும் – என்ன இருக்கிறதோ அதை வைத்து பிழைப்பு நடத்துவது என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்ல உதாரணம்.

இந்தியாவும் அமெரிக்கக் கடன்பத்திரம் நிறைய வாங்கி வைத்திருக்கிறதே – நாளைக்கு என்ன ஆகுமோ? இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா எதுவும் கற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கதிதான் நமக்கும் நாளைக்கு. இதற்குப் பிறகுதான் அளவுக்கு அதிகமான ஊழலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் என்கிற ஒரு மாய வலையில் நாம் எல்லாருமே சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து நாம் எப்போது விழிக்கிறோமோ அப்ப தான் நாம் தப்பிக்க முடியும்.

இன்னைக்கு பொருளாதாரத் தரம் நம்ம நாட்டில உயந்திருக்கு என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்தான் [என்றே நான் நினைக்கிறேன்]. எல்லாவற்றையும் கடன் அட்டை வழியாகத் தேய்க்கிறோம். வருமானம் உயர்ந்ததால் மக்களுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு உயர்ந்தது [முன்பு பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது இப்போது அதிகமாய் இருக்கிறது – அதோடு கடனும் அதிகமாய் இருக்கிறது]– ஒரு மனிதன் கடன் வாங்கி கார் வாங்குகிறான் – மாத மாதம் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கட்டிகிறான் – அதோடு வீடு வாங்குகிறான் – அதற்கும் கடன் வாங்குகிறான் – இப்போது வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, ... இருக்கிறது எல்லாவற்றிற்கும் வட்டியோடு சேர்ந்து கடன் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்கிறவனுக்கு – இருந்தா இப்படி இருக்கணும் என்று தோன்றுகிறது. அமெரிக்கா அதைத்தான் செய்தது – இந்தியா அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது – நாமும்தான்.

முன்பு ஒரே வீட்டில் எல்லாம் இருந்தோம் – இப்ப அப்படி இல்லை. எல்லாம் தனித் தனி – இனி ஒரு வீட்டில் எத்தனை பேரோ அத்தனை கார் – அவ்வளவு கடன் – அளவுக்கு மீறிப் போகிற போது மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க வேண்டியதுதான் – தனி ஆள் கொடுக்கலாம் – அல்லது பிசினஸ் பார்ட்டி கொடுக்கலாம். ஒரு அரசு கொடுக்க முடியுமா – எனக்குத் தெரியலை – அப்படிக் கொடுக்க முடிந்து அமெரிக்கா மஞ்சள் நோட்டீஸ் குடுத்தால் பாவம் – அதிகமா பாதிக்கப்படுவது இந்தியாவாத் தான் இருக்கும் [ அதிகமா அமெரிக்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் இருக்கே!]

டாலருக்கு ஏற்பட்ட கதி இன்னும் சில நாட்களில் ஈரோ –வுக்கு ஏற்படும் – ஜோதிடம் ! 

கடன் அன்பை முறிக்கும் என்று நம்ம ஊரில எல்லாம் முன்பு எழுதியிருப்பார்கள் – இன்றைக்கு கடன் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு நம்மை எல்லாரும் சேர்ந்து தள்ளியிருக்கிறார்கள் – நாமும் நம்மையே தள்ளிக் கொள்கிறோம்.

Tuesday, 8 February 2011

கறுப்புப் பணம் - மந்திரக்கோல்

கறுப்புப் பணம்  செல்லுமா செல்லாதா? 

ஒரு  நாடு விட்டு இன்னொரு நாடு செல்லும் - ஆனால் தன் நாடு செல்லாது.

[அதுசரி நோட்டு கிழிந்தாலே செல்லாதே - கருப்பாய் இருந்தாலும் செல்லுமா?]

கறுப்புப் பண விவகாரம் சில ஆண்டுகளாய் நிலுவையில் இருந்து இப்போதுதான்  ரு வழியாய் மீண்டு எட்டிப் பார்த்திருக்கிறது.


முதல் பட்டியல் விவரம் வேண்டுவோர் இங்கே படிக்கலாம்.

மொத்த கறுப்புப் பணம் ஏறக்குறைய 65,000,000,000,000.௦௦ [இது சரியா தவறா அல்லது எப்படி எண்ணால் எழுதுவது என்று தெரியவில்லை. கணக்கில நாம கொஞ்சம் வீக்.]

அதாவது அருபத்தியஞ்சு லட்சம் கோடிகள் அளவிற்குக் கறுப்புப் பணம் உள்ளதாகச் சொல்லுகிறார்கள். முதல் பட்டியல் வந்ததும் அதில் உள்ள பணம் 52 கோடிகள் என்கிறார்கள்.
இங்கே மதிய உணவுக்கு பருப்பு வாங்கிய கணக்கிலேயே 700 கோடிகள் அளவிற்கு ஒரிசாவில் பிரமிளா மல்லிக் ஊழல் செய்ததானக் குற்றச் சாட்டில் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஐ.பி.எல் புகழ் மோடி தொலைக் காட்சி ஒலிபரப்புக் காண உரிமம் வழங்கியதில் பெற்றுகொன்ண்ட கமிஷன் மட்டுமே 465 கோடிகளைத் தாண்டுகிறது.
2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்கிறார்கள்.
இந்த முதல் பட்டியல் வெறும் 52 கோடி என்பது நம்பும் படிக் கூட இல்லை.
என்ன சாதிக்க விரும்புகிறார்கள்?

கறுப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்று கூடச் சொல்லவில்லை. பட்டியலையாவது முழுவதுமாய் வெளியிடுங்கள் என்றால் அதைக்கூட வெளியிட முடியாது என்று மீண்டும் மாண்புமிகு முகர்ஜி சொல்லியிருக்கிறார். அதோடு சேர்த்து - "பணவீக்கத்தையோ விலைவாசியைக் கட்டுப் படுத்தும் அலாவுதீன் விளக்கோ அல்லது மந்திரக்கோலோ என்னிடத்தில் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் என்பதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? விலைவாசி உயர்வுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பெட்ரோல் விலை உலக அளவில் குறைந்தாலும் நாங்கள் இந்திய முதலாளிகள் லாபம் பெரும் வரை குறைக்க முடியாது. தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவது பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

ஒன்றுமே உங்களால் செய்ய இயலாதெனில் மந்திரக்கோல் இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றுதான் பொருள்.
ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு எதற்கு ஆட்சியில் அமர ஆசை?

ஆனால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்திரமான நாடாய் இருக்கும் என்று கூவுவதற்கு இவரே இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு வரலாம். யார் கண்டது?