Monday, 22 August 2011

அன்னா ஹசாரே மற்றும் அரசியல் வாதிகள்

அன்னா ஹசாரே - இந்தியாமுழுவதும் உச்சரிக்கப்படும் மந்திரம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இவரைத் தவிர வேறு யாரும் நமது கண்ணுக்குத் தெரியப் போவது இல்லை.

இந்தியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. ஊழல் பெருச்சாளிகளைத் தவிர எல்லாரும் அதை விரும்புவர். எனவே இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டம் - ? பற்றி பெரிய அபிப்பிராயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஊழலற்ற நாட்டிற்கான விதையை யார் விதைத்தால் என்ன? நாம் வேண்டும் என்று விரும்புவதை யாராவது ஒருவர் செய்யும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க கை தானே எழுகிறது.
அன்னா பற்றி முதலில் மீடியாக்கள் செய்தி கொடுத்த போது எனக்கு அப்படித் தான் தோன்றியது. இன்றும் ஒன்றும் பெரிதாய் மாற்றம் இல்லை. ஆனால் சில கேள்விகள் கூடச் சேர்ந்து கொண்டன. இனிமேல் எனக்குள்ளும் மாற்றம் வரலாம் -

  • ஜன் லோக்பால் தாக்கல் செய்யப் பட - ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒரு மாயை எல்லா இடத்திலயும் இருந்து எழுப்பப் படுகிறது. அவர்கள் இப்போது ஆட்சியில் இருப்பதால் இது தவிர்க்கப் பட முடியாது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் இதற்கு பெருத்த ஆதரவு தருவது போல இல்லை - பி . ஜே. பி. யும் பின் வாங்கிவிட்டது. இதுவரை மிகக் குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே இதற்கு ஆதரவு தராத போது இத்தனை ஆண்டுகள் பதிவியிலேயே ஊறித் திளைத்த ஒரு கட்சி எப்படி ஆதரவு தரும். எந்த அரசியல் வாதியும் இதற்கு ஆதரவு தர விரும்ப வில்லை. அதனால் அடிப்படையிலேயே நமது அரசியல் அமைப்பில் ஏதோ குறை இருக்கிறது.


முதலில் பகடி -
ஏன் இந்த அரசியல்வாதிகள் இதை எதிர்க்கிறார்கள்?
அவர்களுக்கு நாட்டின் மீது உள்ள பற்றுதான். குழம்பாதீர்கள் -
ஜன லோக்பால் நிறைவேறிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அரசியல் வாதிகளை விடுங்கள் - அது எல்லாரும் ஓட்டு மொத்தமாக எல்லா அரசியல் வாதிகளும் உள்ளே போக வேண்டியதுதான். ராசா வின் குற்றச் சாட்டை எடுத்துக் கொண்டால் பிரதமர் உட்பட எல்லாரும் உள்ளே  -
அப்புறம் பழைய அரசு என்று பார்த்தாலும் - எல்லாக் கட்சியிலிருந்தும் உள்ளே போவார்கள்.
இதில் அரசு அதிகாரிகள் - எந்த அரசு அலுவலராக இருந்தாலும் - ஒரு பக்கம் காசு வாங்காமல் எதையும் நகர்த்துவது இல்லை.
"அன்னா லோக் பால் " சொல்லுவதுபடி பார்த்தால் எல்லா அரசு அலுவர்களும் - சிறு மட்டம் தொடங்கி பெரு மட்டம் வரை - எல்லாரும் ஊழல்வாதிகள்தான். ஏன்னா யாரு வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அப்ப ஒட்டு மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப் படும். அப்படியெனில் - பால் நிறைவேறிய நாள் தொடங்கி வெறும் கைது படலம்தான்.
அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு - அப்புறம் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் சிறு பியூன் தொடங்கி -
ஒவ்வொரு மட்டத்திலும் வெகு சிலர் தவிர -
மேல்மட்டம் வரை எல்லாரும் உள்ளே போக வேண்டியதுதான். எல்லாரும் உள்ளே போகும் பட்சத்தில் நாட்டில் எதுவும் நடைபெறாது. அரசியல் வாதிகள் உள்ளே போனால் பரவாயில்லை.
ஆனால் அரசு இயந்திரம் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டால் என்ன ஆவது - எது ஊழல் - பெரிய லெவல் மட்டும் இல்லை - சின்னதும்னு ஜன் லோக்பால் சொல்லுது. - அதில் லஞ்சம குறைந்த பட்சம் உள்ளே வரும் - நமக்கு வர வேண்டிய காசை ஒரு அரசு அலுவலர் தராமல் விட்டால் - அதை அவர் எடுத்துக் கொண்டால் - அல்லது ஒன்றைத் தருவதற்கு எதாவாது பதிலாகக் கேட்டால் - அது லஞ்சம் / ஊழல் -
அப்படின்னா முதல்ல மக்கள் புகார் குடுப்பது [சென்னையில் பேருந்து கண்டக்டர்கள் மேலதான்] அவர்கள் தொடங்கி எல்லாரும் உள்ளே போயிட்டா எப்படிப் பஸ் ஓடும் - ஆட்டோக்கள் சொல்ல வேண்டாம் [அவர்கள் அரசு அலுவலர்கள் இல்லை]- அப்புறம் அலுவலகம் - அப்புறம் ஒன்னொன்னா மேல பொங்க - இப்படி எல்லாரும் உள்ள போயிட்டா நாட்டின் ஸ்திரத் தன்மை பாதிக்கப் படும்னுதான் -
எல்லா அரசியல் வாதிகளும் ஜன் லோக் பாலை எதிர்க்கிறார்கள். இப்போது புரிகிறதா அவர்கள் நாட்டு பற்று....

அப்புறம் மீடியா
தாங்கள் ஒன்று நினைத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்பதற்கு இவர்கள் தான் - இது வரைக்கும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் - நியாயமான போராட்டங்கள் - இவர்கள் நினைத்தால் சப்போர்ட் உண்டு இல்லையென்றால் ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை - பழங்குடியினர் போராட்டம் / நியாயமான போராட்டங்கள் பலவும் மறைக்கப் படுவதும் - தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - இதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்வது வேதனைக்குரியதுன்னு ஒரு பத்திரிக்கயாளர் [Tehelka] சொல்லியிருக்கார். இணைப்பில் பாருங்க - [ஆங்கிலம்]

http://www.youtube.com/watch?v=hYbhpbdkWhg

  • எந்த ஒரு தொழிலும் இப்போது நேர்மை இல்லை - அடிப்படை அரசியல் பொருளாதார மாற்றங்களில் நாம் கவனம் செலுத்தாமல் - மேலோட்டமாக - ஒரு நபரை முன்னிறுத்தி செயல்படுத்தப் படும் போராட்டம் - அதில் உள்ள நிறை குறைகள் பற்றிய பொது விவாதம் - இவைகளுக்கு எல்லாம் இன்னும் வழி வகுத்தால்தான் எதற்குமே நல்லது. ஒரு சுதந்திரமான ஊழல் ஒழிப்பு நிறுவனம் என்பது இப்போது பிரகாசமாகத்தான் தோன்றுகிறது. முதலில் அப்படித்தான் பல விஷயங்களுக்குத் தோன்றியது.

    •  மக்கள் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றுதான் வாக்குரிமை பெற்ற போது நினைத்தோம். நல்லவர்கள் யாரையாவது தேர்ந்தெடுக்க முடிந்ததா..

    • நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்த பிறகு - பண்ணையார்கள் எல்லாம் குறைந்து விட்டார்களா? வேறு விதத்தில் பண்ணையார்கள் வர வில்லையா.

    •  T V S பார்சல் சர்வீஸ் எல்லாம் எப்படி வந்தன? 

  • எல்லாம் சரிதான் ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சரி செய்ய ஒருதலைவர் வரும் வரை காத்திருப் பதை விட அடிப்படை மாற்றங்கள் பலவற்றைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது.

சரி இந்த ஊழல் அரசு அலுவலகங்கள் - அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா - கார்பரெட் நிறுவனங்கள்  - ஆட்டோக் காரர்கள் இவர்களுக்கெல்லாம் லோக்பால் கிடையாதா?

Thursday, 18 August 2011

"இங்கிலாந்துக் கலவரம் - "கலவரம் கண்ணை மறைக்கும்


கடந்த வாரம் - அமெரிக்கக் கலவரத்தைப் பற்றி எழுதுகிற போதே இங்கிலாந்துக் கலவரம் பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் தொடங்கினேன் - அமெரிக்கக் கலவரம் நமக்கு கடனில் கவனம் தேவை என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறது. இங்கிலாந்துக் கலவரம் - காவல் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.
காவல்துறையினரின் ஒரு தவறால், ஒரு நபர் இறந்து போக வந்தது கலவரம். என்னதான் வளர்ந்த நாடாக இருந்தாலும் - கலவரம் காட்டுத் தீ போல பரவியது - அது சிதைந்த நாடாகத்தான் தோன்றியது. எனக்கு வீர பாண்டிய கட்ட பொம்மனில் - ஒருவர்  சொல்லுவாரே "சூரியன் கூட எங்களைக் கேட்டுத் தான் எழும்" பாவம் இங்கிலாந்து. அவர்கள் சொன்னால் கூட யாரும் கேட்பதற்கு இல்லை - எங்கே இவர்களிடம் வந்து PERMISSION கேட்பது.

தங்களது உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற சில முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கிலாந்துக் கலவரம் காட்டியது. FACE புக் BASE புக் ஆகிவிட்டது. இந்தக் கலவரம் சமூகத் தொடர்பு வலைகள் வழியாகவே மிக வேகமாகப் பரவியிருக்கிறது. ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு போராட்டமாகவே இது இருந்தது.

கறுப்பின சகோதரர்களின் கோபத்தின் விளைவாகவே இது இருந்தது. தங்களது அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாக இதைப் பார்க்கலாம். ஆனால் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லாரும் சமம் என்பது எல்லாம் ஏட்டளவிலே இருந்தாலும், சமூகத் தளத்தில் கருப்பர்கள் அங்கீகாரம் இழந்தவர்களாகவே இருக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளின் அடக்கு முறையின் வெளிப்பாடு.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கல்லூரி மாணவர் [ஆப்ரிக்க இன நண்பர் ]- பெல்ஜியத்தில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு விசா வாங்கச் சென்றார். அவருக்கு விசா மறுக்கப் பட - அந்த அலுவலரை அனாவசியத்திற்கு திட்டிவிட்டு வந்ததாகச் சொன்னார் - "எங்க நாட்டிற்கு வந்து எங்களை அடிமைப் படுத்த யாரிடம் விசா வணங்கி வந்தீர்கள் - இப்போ எதற்கு அனுமதி மறுக்கிறாய்" - என்று கத்தினாராம்.
என்ன கத்தினாலும் விசா கிடைக்காது. கிடைக்க வில்லை.

இங்கிலாந்தில் உள்ள பல ஆப்ரிக்க இனத்தவர் உள் நுழைய நிறைய அனுமதி தொண்ணூறுகளுக்குப் பிறகு நிறையவே வழங்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் முதலில், அடிமைகளாக அழைத்து வரப் பட்டவர்கள்தான் முதலில் அதிகம். இப்போது புகலிடம் தேடி இங்கு வந்தவர்கள் ... ஏற்கனவே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் நிறைய புகலிடம் தேடி வருகிறார்கள். இந்த வன்முறையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க இனத்தின் மீதான கரும் புள்ளியாகவே இது அமைந்து விட்டது.

ஒரு புறம் அவர்களின் கோபம் நியாயமானதாய்த் தெரிந்தாலும், மறுபுறம் கோபத்தினை வெளிப்படுத்தும் வழி இதுதானா என்கிற கேள்வியும் கூட எழுகிறது. அல்லது - தங்களது கோபத்தை வெளிப்படுத்தக் கூட அவர்களுக்கான உரிமை மறுக்கப் படுகிறதா என்பதும் தெரிய வில்லை.

ஆனால் - பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கியவர்களாக ஆப்ரிக்க இனத்தவர்கள் இங்கிலாந்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் - கடைகளை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு செல்லும் நிலைக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. இதுதான் அவர்களது போராட்டத்தைக் கூட கலவரம் என்று சொல்ல வைத்திருக்கிறது.

அமேரிக்கா கடன் வாங்கி பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. கடன் வாங்கக் கூட வழியில்லாமல் கடை உடைத்து பொருள் அல்லும் நிலையில் இங்கிலாந்தவர்கள் இருக்கிறார்கள். அதுதான் அவர்கள் கண்ணை மறைத்து விட்டது போல...

Monday, 15 August 2011

சுதந்திர இந்தியாவும் - இத்தாலியும்


 இந்திய சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை சொல்லும் இவ்வேளையில், சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்த ஒரு வீடியோவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 இந்த வீடியோ மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தாலி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லும் வீடியோ.

அப்போது நண்பர்கள் சிலர் ஒரு தலைப்புக் கொடுத்தார்கள் - ஏன் சோனியா காந்தி இந்தியாவை நேசிக்கிறார்?  மிகச் சரியான தலைப்பு. 
இந்தியா சுதந்திர இந்தியா

வீடியோவில் - இத்தாலி என்பதை இந்தியா என்று
வாசியுங்கள் -

கொடி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

 சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Thursday, 11 August 2011

கலவரம் - அமெரிக்கா - கடன் அன்பை முறிக்கும்?

வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொண்ட இரு நாடுகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் வல்லரசு என்று கருதப்பட்ட ஒரு நாடு - அமெரிக்கா - தனது கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டது. அதன் வழியாகவே அது உடனடியாக மிகப் பெரிய இக்கட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.காவல் துறையினர் செய்த ஒரு தவறு ஒருவரின் உயிரைக் குடிக்க இங்கிலாந்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நடந்த கலவரம் என்று எண்ணி விட முடியவில்லை.
இன்று அமெரிக்கக் கலவரம் பற்றி -

அமெரிக்கா என்ற உடன், வானளாவிய கோபுரங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், மின்னொளி நகரங்களும், ஹாலிவுட் தொழில் நுட்பம், நாகரிகத்தின் உச்ச கட்டம் என எல்லாரையும் நினைக்க வைத்தது மட்டுமல்ல – இப்படித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் அந்த தாக்கம் தெரியும்.
இந்த மயக்கத்தில் அமெரிக்கர்களும் இருந்தார்கள் – அமெரிக்க மோகத்தில் [நாம் எல்லாரும்தான்?] இருந்தவர்களும் மயக்கத்தில் இருந்தார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது எல்லாரையும் மயக்கத்தில் இருந்து எழுப்பும் மருந்து என்றே என்றத் தோன்றுகிறது.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவர்களது மமதைக்குக் கிடைத்த அடி – அம்மாவுக்கு நேற்று கிடைத்தது போல. ஊரு உலகத்துக்கு எல்லாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி லோக்கல் பஞ்சாயத்துல கோட்டை விட்ட கதைதான். கோடிக்கணக்கான டாலர்கள் இன்னும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மமதையில் இருப்போர் கொஞ்சம் விழித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிக் கடன் வாங்கித் தனது பொருளாதாரத்தை மேல் நோக்கி வைத்திருப்பது – மேக்-அப்பு கதைதானே. எவ்வளவு நாளைக்குத்  தான் சாயம் பூசிக்கிட்டே இருக்க முடியும். அப்படி என்னய்யா கடன் வாங்கி சாயம் பூசி? ஒரு மனிதன் எப்போது செயற்கையாய் தனது அழகைக் கூட்ட முயற்சிக்கிறானோ அது அவனுக்கு ஆபத்திலேதான் முடியும் – என்ன இருக்கிறதோ அதை வைத்து பிழைப்பு நடத்துவது என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்ல உதாரணம்.

இந்தியாவும் அமெரிக்கக் கடன்பத்திரம் நிறைய வாங்கி வைத்திருக்கிறதே – நாளைக்கு என்ன ஆகுமோ? இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா எதுவும் கற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கதிதான் நமக்கும் நாளைக்கு. இதற்குப் பிறகுதான் அளவுக்கு அதிகமான ஊழலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் என்கிற ஒரு மாய வலையில் நாம் எல்லாருமே சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து நாம் எப்போது விழிக்கிறோமோ அப்ப தான் நாம் தப்பிக்க முடியும்.

இன்னைக்கு பொருளாதாரத் தரம் நம்ம நாட்டில உயந்திருக்கு என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்தான் [என்றே நான் நினைக்கிறேன்]. எல்லாவற்றையும் கடன் அட்டை வழியாகத் தேய்க்கிறோம். வருமானம் உயர்ந்ததால் மக்களுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு உயர்ந்தது [முன்பு பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது இப்போது அதிகமாய் இருக்கிறது – அதோடு கடனும் அதிகமாய் இருக்கிறது]– ஒரு மனிதன் கடன் வாங்கி கார் வாங்குகிறான் – மாத மாதம் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கட்டிகிறான் – அதோடு வீடு வாங்குகிறான் – அதற்கும் கடன் வாங்குகிறான் – இப்போது வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, ... இருக்கிறது எல்லாவற்றிற்கும் வட்டியோடு சேர்ந்து கடன் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்கிறவனுக்கு – இருந்தா இப்படி இருக்கணும் என்று தோன்றுகிறது. அமெரிக்கா அதைத்தான் செய்தது – இந்தியா அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது – நாமும்தான்.

முன்பு ஒரே வீட்டில் எல்லாம் இருந்தோம் – இப்ப அப்படி இல்லை. எல்லாம் தனித் தனி – இனி ஒரு வீட்டில் எத்தனை பேரோ அத்தனை கார் – அவ்வளவு கடன் – அளவுக்கு மீறிப் போகிற போது மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க வேண்டியதுதான் – தனி ஆள் கொடுக்கலாம் – அல்லது பிசினஸ் பார்ட்டி கொடுக்கலாம். ஒரு அரசு கொடுக்க முடியுமா – எனக்குத் தெரியலை – அப்படிக் கொடுக்க முடிந்து அமெரிக்கா மஞ்சள் நோட்டீஸ் குடுத்தால் பாவம் – அதிகமா பாதிக்கப்படுவது இந்தியாவாத் தான் இருக்கும் [ அதிகமா அமெரிக்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் இருக்கே!]

டாலருக்கு ஏற்பட்ட கதி இன்னும் சில நாட்களில் ஈரோ –வுக்கு ஏற்படும் – ஜோதிடம் ! 

கடன் அன்பை முறிக்கும் என்று நம்ம ஊரில எல்லாம் முன்பு எழுதியிருப்பார்கள் – இன்றைக்கு கடன் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு நம்மை எல்லாரும் சேர்ந்து தள்ளியிருக்கிறார்கள் – நாமும் நம்மையே தள்ளிக் கொள்கிறோம்.

Tuesday, 9 August 2011

அதிரடித் தீர்ப்பு - சமச்சீர் கல்வி

உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஏறக்குறைய எழுபது நாட்கள் - ஆடிய ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. யார் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், வந்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது - நின்று, கவனித்து, செல்ல வேண்டும். அம்மா இப்படிப் பலமுறை நிற்காமல் சென்று பிரச்னையை எல்லாருக்கும் உருவாக்குகிறார். அது ஏன் என்பதுதான் புரியாமல் இருக்கிறது? 
  1.  உச்ச நீதி மன்றம் இதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு வழியில்லையா?

  2. இந்தத் தீர்ப்பின் வழியாக சமச் சீர் கல்வியில் எல்லாம் சரி என்பதோ, அல்லது அதில் எதுவுமோ சரியில்லை என்பதோ அல்ல. அது விவாதத்துக்குரியது. ஆனால், எந்த ஒரு செயலையும் தனிப்பட்ட ஆளாக முடிவெடுக்கும் போக்குதான் இன்னும் மாறவில்லை. இதைத் தான் அனைவரும்  கவனிக்க வேண்டும். 

  3. இன்னும் சிலர் மாணவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேற வில்லை என்று நினைக்கிறார்கள் - இன்னும் நாட்கள் எடுத்து ஒழுங்காக விவாதத்துக்கு உட்படுத்தி, பள்ளிகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இல்லாமல், கல்வியாளர்களின் ஆலோசனை கேட்டு, பரந்த விவாதத்திற்கு உட்படுத்தி செய்யவேண்டியது.  அதை அம்மாவும் கற்றுக் கொள்ள வேண்டும்  - எதிர்ப்பாளர்களும் உணர வேண்டும். 

  4. எதைச் செய்தாலும் தான்தான், தனது முடிவுதான் என்று இல்லாமல், தனி ஆளாக இல்லாமல் - தனி ஆளாக முடிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. 

  5. மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக எதையும் செய்து விடலாம் என்பதோ, மாற்றிச் சிந்திப்பவர்களை அடக்கி விடலாம் என்பதோ, சமச்சீர் கல்வி பற்றி பேசும் ஆசிரியர்களை மிரட்டுவது என்பதெல்லாம் நல்லதல்ல.

  6. வெற்றி பெற்றவர் - மக்களின் நன்மையை முன்வைக்க வேண்டுமே தவிர தந்து விருப்பு, வெறுப்போ - அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நன்மையையோ முன்வைப்பது அல்ல - கருணாநிதி அந்தத் தவறைச் செய்தார். அதனால்தான் அம்மா வந்தார். அம்மாவின் மேல் உள்ள அன்பினால் அல்ல. அம்மா அதேத் தவறைச் செய்தால் நட்டம் அவருக்குத் தான்....

Friday, 5 August 2011

சோ - வெனப் பெ [பொ]ய்யும் சமத் தாழ்வு மழை


தமிழகத்தின் மிகச் சிறந்த காமெடியனும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளரும், தலை சிறந்த அரசியல் ஆலோசகரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படக்கூடிய திறமை வாய்ந்தவரும், வாதங்களை எடுத்து வைப்பதில் வேறு யாரைக் காட்டிலும் புலமை நிறைந்தவரும், - எனப் பலராலும் போற்றப் பட்டுக் கொண்டிருக்கிற சோ - வின் தலை சிறந்த வாதங்கள் நிறைந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  இட்லி வடை வரை சென்று அதைப் படித்துவிட்டு பிறகு இங்கு வந்து வாசிக்கலாம். 
அதற்குப் பின்னூட்டம் போடலாம் என நினைத்து பிறகு இங்கே பதியலாம் என எழுதுகிறேன்.

அந்தக் கட்டுரைக்குப் பதில் மொழி எழுதி அக்கட்டுரை - விளம்பரப் படுத்தப் படுமோ என்கிற வேதனை இருந்தாலும் - அது என்னமோ மிகச் சிறந்த கட்டுரை என்பதுபோலவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போலவும் எழுதியிருக்கிற மக்களைப் பார்க்கிற போது....
சோவின் வாதம் - சமத்துவம் தவறு என்பதுதான். சாதி ஒழிப்பு தவறு - பிராமண எதிர்ப்பு தவறு. - சாராம்சம் இதுதான்-  அதில் வேற சுக்கு ஒன்னும் இல்லை. இதுக்கு மேல நாம் எழுதினா நாம் வாதத்தை திசை திருப்போரோம்னு சொல்லுவாங்க. ஆனா அவர் நல்லா திருப்பலாம்.
  • ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் பேசிய வசனமாம் - அப்ப இத்தனை ஆண்டுகள் எதுவும் மாறலை என்பதை விட - இவர்கள் பத்திரிகை  நடத்தி எதையும் மாற விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் - அப்படியா? நாடு எந்த விதத்திலும் வளர்ச்சியடையக் கூடாது - அப்போதுதான் இவர்கள் கிண்டல் செய்யலாம் - கேலிப் படங்கள் வரையலாம். பத்திரிகை  நடத்தலாம். 
  • சமச்சீர் என்ற சென்ற ஆட்சியாளர்கள் "ஸ்டன்ட்" அடித்தார்களாம்  ஆனால் அதை எதிர்க்கும் இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையானவர்களாம் - மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாம் - திராவிடம் என்பது பற்றி பேசாமல் அதனால் சமத்துவம் பற்றி பேசாமல் - ஏற்றத் தாழ்வை எப்போதும் உயர்வாய் வைக்கிறவர்கள்.
  • இந்த வக்கீல் - ஸ்டே ஆர்டர் பற்றியெல்லாம் பேசுவார்கள் - அனால் இந்த விஷயத்தில் மட்டும் இவர்களுக்கு எதுவும் புரியவில்லை. உயர் நீதி மன்றம் தவறு - உச்ச நீதி மன்றம் தவறு- இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் நீதி மன்றம் சரி - இல்லையென்றால் தவறு. 
  • "சமச்சீர் வக்காலத்துகள் வாய்ச்சவாடல்களாம்" - இவர்கள் மட்டும் என்ன சவடால்கள் என்று தெரியவில்லை.
    • சமச்சீருக்கும் விமானத்திற்கும் முடிச்சுப் போடுறாரு. படிக்கிற ஆளுங்கல்லாம் ஆமா - சோ தான் கரீட்டு - ன்னுறாங்க. எல்லாரும் விமானத்தில் போவதற்கான CAPABILITY இருக்காங்குறது வேற - எல்லாரும் துக்ளக் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லலை தலைவரே - எல்லாரும் துக்ளக் வாங்குறதுக்கான "வாங்கும் திறன்" இருக்காங்கிறதுதான் கேள்வி - அதுனால எல்லாரையும் நடந்து போகச்சொல்லலை - ரன் வே போடுறதுல மட்டும் கவனம் செலுத்தாம கிராமங்களுக்குக்கும் போக்குவரத்து வசதிக்கு வழி பண்ணுங்க - சென்னையில மட்டும் எல்லா வசதிக்கும் வழி பண்ணாதிங்க - தமிழ் நாட்டுல உள்ள எல்லாரும் வசதியோட வாழம்னு சொன்னா.. 
    • நல்ல ஹோட்டல் மோசமான ஹோட்டல்தான் இருக்குமாம் - எல்லா கடைகளிலும் கிடைக்கும் பொருள் சுத்தமான பொருளாய் இருப்பதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் - சில கடை மோசமாய்த் தான் இருக்கும், சில கடைதான் சுத்தமாய் இருக்குமாம் - அப்புறம் என்ன ராசா -அதுதானே சொல்ல வர்றீங்க -டீ மட்டும்  சாப்பிடறவன் வக்கத்தவன் - அவன் உருப்பட மாட்டான் - நீங்க மட்டும் நல்லா இருங்க - 
    • அப்புறம் அரசுப் போக்குவரத்து - அரசு அலுவலர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் போகச் சொல்லுவதில் கிண்டல் வேற... ஹுண்டாய் ல வேலை பார்க்கிற இவர் மாருதி கார்ல போய் இறங்கச் சொல்லுங்க ... இவங்க கோயில்ல மட்டும் வேற யாரும் போகக் கூடாது ஆனா அரசு அலுவலகங்கள்ல வேலை பார்க்கிறவன் அரசுப் பேருந்துல போகச் சொன்னா இவருக்கு என் வருத்தமா இருக்கு...
    • இது போல நிறைய சவாடல்கள் ---
  •  எவ்வளவு கோபம் பாருங்க - "ல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"    அவருக்கு என்ன பிரச்சனைன்னா உயர் நிலையில இருக்கிற எல்லாரையும் கீழ இழுக்கிறோம் அப்படின்றதுதான் பிரச்சனை. 
  • தரமான கல்வி கொடுக்கத்தான் ஜெயலலிதா சமத் தாழ்வு கல்வியை எதிர்க்கிறாராம் - தரமான கல்விக்கு தமிழக முதல்வரும் மிகச் சிறந்த உதாரணமாம்.  என்ன அருமையா - முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்டன்ட் அடிக்கிறார்களாம் - இவர் மட்டும் தரம் தரும் தனியார் கல்வியை ஊக்குவிக்கும் உத்தமாராம் - 
  • அடுத்து சித்த மருத்துவம் பற்றி வேற - அய்யா - மாற்று மருத்துவத்திற்கு வழி விடுங்க -
  • இதுக்கு மேல எழுதணுமா என்ன? 
  • விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேறு எழுதியிருக்கிறார் - நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும் - சமச்சீர் கல்வியை vதிர்ப்பதன் மூலம் - நாட்டில் ஏற்றத் தாழ்வும், சீர் கெடும், சாதியமும் தலை விரித்தாடும் - அதுதான் வேண்டும் என்று ஷோ காட்டியிருக்கிறார். 
  • அவரது வாதங்களுக்குப் பின்னே உள்ளது ஒன்றே ஒன்றுதான் - அதை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. முன்பு மோசமாய் இருந்த பாடத்திட்டமே கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம் போதும். அவர்களுக்கு எல்லாம் பள்ளிக் கூடமே தேவையில்லை - இதுல இதுவேறயா என்பதுதான் சோ - வின் வதம். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் இருக்க வேண்டும் - இதுதான் அவரின் நோக்கம். விஷத்தை எவ்வளவு அழகாய்ப் பூசி மொழுகுகிறார். 
    • எல்லாரும் எழுத வந்துட்டா என்ன ஆகிறது - சோ - வுக்கு வருத்தமெல்லாம் பதிவர்கள் மீதுதான் - எல்லாரும் எழுத வந்துட்டால்--- அவனவன் அவனவனுக்குப் பகவான் கொடுத்த வேலையைச் செய்துடால் அவாளுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.  நம்மாலும் படிக்கிறதுனால, எழுதுறதுனாலதான் பிரச்சனையே. அதனால் சோ எனா சொல்ல வர்றார்ணா ...
  • ஏற்கனவே இது போன்ற விவாதங்கள் பற்றிய ஒரு கட்டுரை- 
சோவெனப் பெய்திருக்கும் இந்தப் பொய் மழையில்,  இது சமத்தாழ்வு என்பதற்கான எந்த வாதமும் இல்லை. வெறும் பொய் வாதங்கள் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வசனங்கள் - கிண்டல் என்ற பெயரில் விஷம் - அரசு பஸ் - இல்லை அரசுப் பேருந்து - தமிழ் கூட அவருக்குக் கிண்டல் ஆகிவிட்டது.  பேருந்தை அவா எப்படிச் ஷோல்லுவான்னு ஷோன்னா நன்னாயிருக்கும். இதை வெளியிட்டு இட்லி வடை - தயிர் வடையாகிக் கொண்டிருக்கிறதே என்பதுதான் எனது வருத்தம் -