Saturday, 11 August 2012

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

Friday, 10 August 2012

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


Wednesday, 8 August 2012

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது. 





Monday, 30 July 2012

பேசும்படம்

 சில சமயங்களில் படங்கள் நமது எழுத்தை விட அதிகமாக பேசும்...

முதல் படம் நேற்று டோக்கியோவில் அணு உலைகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்..




விபரம்: http://kgmi.com

இந்த கூட்டம் அங்கேயே பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேலும் விபரம்:
http://www.dianuke.org/



விபரம்:

http://www.theaustralian.com.au/

Thursday, 26 July 2012

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

Friday, 6 July 2012

ஏட்டிக்குப் போட்டி

 கடந்த ஆறு நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்ப படையினரின் அட்டகாசங்களை எதிர்த்தும், மீன்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், மதுரை கொழும்பு இடையே விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிப்புச் செய்யப் பட்டதற்கு வணிகர்கள் வரவேற்பும் பாராட்டும் செய்திருக்கின்றனர்.

Monday, 18 June 2012

குப்பை அள்ளேல்


சென்னையின் அக்கினி பிரவேசம் முடிந்து - பள்ளிக்கரனை புகை மண்டலப் பிரவேசம் அதிகமானதில் சென்னை முழுவதும் குப்பைக் கூளங்கள் எல்லா வீதிகளிலும் இருக்க அது மிகப் பெரிய பிரச்சனையாகிப் போனது. 

இந்த எப்.எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த குப்பைக் கூளங்களுக்கு யார் காரணம் என்று மாத்தி மாத்தி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க. அதுல நிறையப் பேரு காரணம் நாமதான் - எல்லாரும் பொறுப்பில்லாம ரோட்டில குப்பை போடுறோம். சின்னப் பிள்ளைகளை  பொறுப்பா வளக்கிறது இல்லை. நமக்கு சிவிக் சென்ஸ் இல்லைங்கிற ரேஞ்சுங்குப் பேசுறாங்க.

சிவிக் சென்ஸ் உள்ள ஐயாக்களே, நடு ரோட்டில குப்பை கிடந்தா சரி.. இந்த நாட்களில் குப்பை கிடப்பது குப்பைத் தொட்டிகளில் . அவைகள் நிரம்பி அதில் போடுவதற்கு இடமில்லாமல் அதன் அருகில் வைத்த குப்பைகள் தான் மலை போல் குவிந்து இருந்தன. அதில் உணவுப் பண்டங்கள் மக்கி புதிய உயிரினங்கள் உருவாகி எவலூஷன் சரி என்று வாதித்துக் கொண்டிருந்தன... நாற்றம் மக்களை அந்தப் பாதையில் கூட அனுமதிக்க வில்லை. 

புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக முப்பத்தி இரண்டு அமைச்சர்கள் தான் சென்னையைக் காலி பணிவிட்டதாகக் கேள்வி. அதென்ன முனிசிப் பாலிட்டி ஊழியர்களும் புதுக்கோட்டைக்குச் சென்று விட்டார்களா?

இப்ப நமது மக்கள் எல்லாரும் அரசை விட்டுவிட்டு நம்மை நாமே குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம்.  அரசில் உள்ளவர்கள் என்னதான் செய்கிறார்கள் ?

வாரத்துல மூணு நாலு நம்ம ப்ரைம் மினிஸ்டர் "பண வீக்கம்" மிகுந்த கவலை அளிக்கிறது அப்படின்னு சொல்றார். இதை நம்ம சொன்னா சரி பதிவில இருந்துகிட்டு அவர் சொல்லலாமா ? ஒருவேளை பண வீக்கம் நமக்கு சிவிக் சென்ஸ் இல்லாததால்தான்  பணத்தின் மதிப்புக் குறையுதோ?

--- புதுக்கோட்டையிலிருந்து ஊழியர்கள் திரும்பி வந்து விட்டார்கள் போல! சிலை சாலைகள் மிளிர்கின்றன ---

நண்பர்களே ...
 வந்துட்டேன்! வந்துட்டேன்! வந்துட்டேன்! 
இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம்  நேரம் கிடைக்கும் என்று கருதுகிறேன். 
நல்லா இருக்கிங்களா?