Monday, 16 November 2015

மழையில் மாடு மூழ்கியது

மாட்டு அரசியல் என்பதை என்னோடு பணிபுரிந்தவர் பி. பி (Beef Politics - B.P) என்று சுருக்கமாய்ச் சொன்னார். பி.பி எகிர்றது நல்லது இல்லை. அது உடம்புக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும்தான்.

தொடர்ந்து வந்த விவாத மேடைகளில் அந்த மாடுகள் மூழ்கியதாவே தெரிகிறது. வெள்ளம் வடிந்தவுடன் மாடுகள் மீண்டும் வெளிவரலாம்.

மார்ச் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். ஒரு குழுக்கள் கட்டைகளோடும் கத்திகளோடும் சுற்றுகிறது. காவலர்கள் அவர்களுக்குத் துணி நிற்கிறார்கள். மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் கட்டிப் போட்ட உதைக்கப் படுகிறார். லாரி தீ வைக்கப் படுகிறது. அவைகளைச் செய்த நபர்கள் தங்கள் முகம் தெரியும் படி அந்த வீடியோவைப் பதவு செய்து சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

வீடியோவிற்கு இங்கே சொடுக்கவும்

கடந்த மாதம் ஒரு ஒட்டுனரைக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

வீடியோ
அரசாங்கம் அமைத்யாய் இருக்கிறது. உலகம் முழுவதும் போய் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் நமது பிரதமர். 
கோமாதாவின் காவலர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பச்சோந்திக் குரல் எழுப்புகிறது. போலிஸ் எதற்கு? சட்டங்கள் எதற்கு? 
சட்டங்களை ஒரு குழு ஆயுதங்களோடு நிலைநாட்ட வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கிறது என்றால் அரசின் வேலை என்ன? 

இந்தத் தருணத்தில்தான் நம் பிரதமர் (இன்றைய செய்தித்தாளின் செய்திப் படி) தீவரவாதத்தை உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனது நாட்டில் இப்படி நடக்கும் தீவிர வாதத்தை தன்னால் ஒடுக்க முடியவில்லை என்பதனால்தான் உலக நாடுகள் அதை எதிர்க்க வேண்டும் / ஒடுக்க வேண்டும் என்று பெசியதாகவே எண்ணத்த தோன்றுகிறது.


Sunday, 15 November 2015

ROSARIO KRISHNARAJ -RIP


Born 10 August 1931     Baptised 7 October 1949   Ordained 1 May 1963    Died 14 November 2015  


Tuesday, 10 November 2015

தீபாவலியா - தீபாவளியா - தீப/ஒளியா ?

படித்தேன் ரசித்தேன்

"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.



- தீபாவலி இதுதான்

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............


இது  தீபா - வளி

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு  மிகப் பெரிய ஒளி

))))))))))))))))))))))))))))



Saturday, 5 September 2015

அப்துல்கலாம் நினைவிடம்

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட அன்று இராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை
என்பது மிகப்பெரிய மனக்குறையாகவே இருந்தது.

அந்தக்குறை இன்று தீர்ந்தது.

ஆசிரியர் தினமான இன்று ஐயா அப்துல் கலாம் அவர்களின்
நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த கிடைத்த
வாய்ப்பு மிகப் பெரிது.
ஆகச்சிறந்த ஆசிரியர்களில் அவரது இடம் மிகச்சிறந்தது
என்ற எண்ணம்கூட இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியது என்று சொல்லலாம்.

கனவு காணுங்கள்.





Tuesday, 4 August 2015

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?




Monday, 27 July 2015

அப்துல்கலாம்

சற்று நேரத்திற்கு முன்பு, உயர் திரு அப்துல் கலாம் இறந்து போனார் என்ற துயரச் செய்தியைக் கேட்டபோது அவரது அன்பான, கனிவான முகம் கண்முன்னே வந்து நின்றது. அவரைப் பற்றி எழுதலாம்  என்று அமர்வதற்குள் அத்துனை  கட்டுரைகள் வந்து விட்டன. 

எஸ் எம் எஸ்கள்  / வாட்ஸ் அப்  செய்திகள், வீடியோக்கள் பரிமாற்றம் என தேசம் முழுவதும் அவரைப் பற்றி பேசும் ஒன்றே அந்த மனிதர் மாமனிதர்  என்பதற்கு சாட்சியாகும். ஒரு அரசியல் தலைவர் திடீரென இறந்து போனால் கூட இத்தகைய பரிமாற்றங்கள் நிகழத்தான் செய்யும். ஆனால் இந்த பரிமாற்றம், மாநிலம் கடந்து, மதம் கடந்து, கட்சி கடந்து நடக்கிறபோதும், பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளைப் பார்க்கிற போதும், எவ்வளவு மாசில்லாத மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் மற்ற தலைவர்களைக் காட்டிலும், எவ்வளவு  மேலானவர்,என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஒரு மனிதன் இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும் இவ்வளவு தாழ்ச்சியோடு இருக்க  முடியும் என்பதற்கு, நம் காலத்தில் இவரை விடச் சிறந்த ஒரு உதாரணத்தைத் தர முடியாது. 

அவரது அறிவிற்கும், படைப்புத்திறனுக்கும் இந்தியத துறையில் அவர் ஆற்றிய பணிகள் சான்றாக  இருக்கும்.

தமிழ்வழிக் கல்வியில், தன் பயணத்தைத் தொடங்கிய அவர் தொட்ட உச்சம் ஒன்றே போதுமானது - தாய் மொழிக் கல்வி ஒன்றும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்ட.

தனது பதவிக் காலத்தில், குடியரசுத் தலைவருக்கு உண்டான பகட்டைக் களைந்து விட்டு மக்கள் தலைவராக இருந்ததை ஒரு போதும் மறக்க முடியாது.

எத்தனை குறைகள் நம்மிடத்தில் இருந்தாலும் நேர்மறையான விடயங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியா முதன்மையான நாடு என்று சொல்லும் அந்த மனிதரின் பாஸிடிவ் அணுகுமுறை நம் ஒவ்வொருவருக்குமே இன்று தேவைப்படுகிறது.

பிரம்மச்சார்யம் உலகிலுள்ள எல்லார் மேலும் அன்பு காட்ட உதவும் என்பதற்கும் சான்றே அப்துல்கலாம்.

அவர் செல்லாத பள்ளிகள்,  கல்லூரிகள் மிகக் குறைவே. ஒவ்வொரு முறையும், சில குழந்தைகளையாவது ஊக்கப் படுத்துவதில் அயராது இருந்தார் என்பதற்கு சான்றாகவே பேசிக் கொண்டிருக்கையிலேயே அவர் உடல் தளர்ந்தது.

நீங்கள் விஞ்ஞானியாய், இந்தியராய், ஆசிரியராய், எழுத்தாளராய், பேச்சாளராய், அன்பான மனிதராய், உண்மைப் பற்றாளராய் எல்லாருக்கும் ருக்கும் உத்வேகம்  தந்திருந்தாலும், எங்களுக்கு நீர் தமிழராய் இருக்க வும் உத்வேகம் தந்திருக்கிறீர் என்பதும் மிகப் பெருமையே. 
எங்கு சென்றாலும் தமிழின்  பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகிற்குச் சொன்னவரே, உங்கள் நம்பிக்கை உங்களை வாழ்விக்கும்.




Saturday, 4 July 2015

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===