Wednesday, 15 November 2017

கிறித்தவமும் மெர்சலும் - [இரவல் பக்கம் - 1]


  
சிறுவயது ஞாபகங்கள் சில அவ்வப்போது வந்து கிளுகிளுப்பை ஊட்டும். சில கிலியையும் ஏற்படுத்தும். மெர்சல் படத்தையொட்டி பா.ஜ.க. தலைவர்கள் ஏற்படுத்திய சர்ச்சையும், திரு எச். ராஜா அவர்களின் முகநூல் பதிவும் எனக்கு அப்படி ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் நான் ஆரம்பப்பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் அது. ஓர் மே மாத விடுமுறையில் என் உறவினரின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது ஒன்றுவிட்ட சகோதரனும் நானும் ஏதோ பந்தயம் வைத்து கோலிக்குண்டு விளையாடினோம், நான் ஜெயிக்கப்போகும் நேரத்தில், தோல்வியைப் பொறுக்கமுடியாமல் அந்தச்சகோதரன் “டேய் நீ வச்சிருக்கிறது என்னோட கோலிக்குண்டு, அதைக்கொடுடா,” என்று சண்டைக்கு வந்தான். என் கையில் உள்ளதை அவன் பறிக்க, நான் மறிக்க விளையாட்டின் போக்கே மாறி இருவரும் கட்டிப் புரண்டோம். பந்தயம் மறந்துபோய் சண்டைதான் வந்தது. மெர்சல் படம் வெளிவந்து அதன் மூலமாக விஜயின் பெயர் ஜோசப் விஜய் என்ற உண்மையை எச். ராஜா துப்பறிந்து கண்டுபிடித்து விவகாரம் ஆக்கியபோது எனக்கு இந்தச் சிறுவயது சண்டைதான் ஞாபகம் வந்தது.


   இந்துத்துவவாதிகள் எப்போதும் இப்படிதான். மெயின் ஆட்டத்தைத் திசைதிருப்பி ஆட்டத்தைக் கலைப்பதில் வல்லவர்கள். ஆனால் இந்த முறை என்னவோ எடுபடவில்லை. இந்தத் தமழ் நாட்டில் இது கஷ்டம்தான். இவர்கள் போட்ட கூச்சலில் சரி, அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் படத்தில்? எனப்போய்ப் பார்த்தால் படம் என்னவோ முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகப் போகிறது, எடுத்துக்கொண்டிருக்கிற கருத்து அருமையானது என்பதைத் தாண்டி படத்தில் ஒன்றுமேயில்லை. இவர்கள் சொல்கிற வசனங்கள்கூட ஏதோ போகிற போக்கில் வருகின்றன. அவ்வளவுதான். வழக்கமான மசாலாக்களும், நம்பவே முடியாத திருப்பங்களும், அறிவை மழுங்கடிக்கும் சண்டைகளும், பாடல்களும் என சராசரி தமிழ் சினிமாக்களின் அத்தனை அம்சங்களும், அபத்தங்களும் நிறைந்த விஜய்யின் இன்னொரு படமாகப் போயிருக்கவேண்டிய ஒரு படம், அது ஏற்படுத்திய சர்ச்சைகளால் இன்று பிளாக் பஸ்டர் வரிசையில் சேர்ந்திருக்கிறது. இந்த சர்ச்சைக்குப் பின்னால் முதல் போட்டவர்களின் தந்திரம் இருக்கிறது இது ஒரு வியாபாரயுக்தி என்றெல்லாம் சொல்கிறார்கள். நாம் அதற்குள் போக விரும்பவில்லை. எது எப்படியோ இந்த படத்தினால் தமழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த உருப்படியான விளைவு ஒன்று உண்டு. 



   ஏறத்தாழ ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு சிந்தனையளவில் தமிழர்கள் ஒன்றுபட்ட விஷயம் என்ற ஒன்று உண்டென்றால் அது மெர்சல்தான். (அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும்கூட சமூக வலைத்தளத்தில் ஒன்றுபட்டார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்) கடைசியில் எச். ராஜா கோஷ்டியினர் தாங்கள் மூக்குடைப்பட்டதை சமாளிக்க எஸ்.வி. சேகர் போன்றவர்களெல்லாம் ‘வரும் ஆனால் வராது’ என்று வடிவேல் பாணியில் ‘தப்புத்தான். ஆனால் தப்பு இல்லை’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சென்னை மழைக்கு முன்பாக பேரிரைச்சலோடு மெர்சல் ஆராவாரம் வந்து போனது. அந்த இரைச்சலில் சத்தம் போடாமல் கல்லாக் கட்டியவர்கள் படத்தை முதல் போட்டுத் தயாரித்தவர்கள்தான். 

        சரி! அது போகட்டும் இந்த மெர்சலில் நாம் கவனிக்க வேண்டியது மெர்சல் பேசும் அரசியலையல்ல. மெர்சலை முன் வைத்தும் அதற்குப்பின்னாலும் இருக்கக்கூடிய அரசியலைத்தான் இதில் எச். ராஜாவுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. விஜய்யிக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேசுமுன் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். மெர்சலில் விஜய் போகிற போக்கில் கோயிலைப்பற்றி ஒரு வசனம் சொல்கிறார். அதையொட்டி எச். ராஜா பிரிவினைவாத அரசியலொன்றை முன் வைக்கிறார் இதில் கவனித்தீர்களென்றால் அந்தப் படத்தில் கோயில் என்று சொல்லி பேசப்படும் வசனத்தை எச். ராஜா பொருள் படுத்தும் முறையே தவறானது. விஜய் கோயில் என்று சொல்கிறபோது சர்ச் என்பதும் அதில் அடக்கம். நமது ஊர்களில் யாரும் சர்ச்சுக்குப் போகிறேன் என்று சொல்வதில்லை. கோயில்தான.; இந்துக் கோயிலாக இருந்தாலும் சரி கோயில்தான். கிறித்தவக் கோயிலாக இருந்தாலும் அதுதான். வழக்கு மொழியில் கிராமங்களில், “அந்தோனியார் கோயிலுக்குப் போகிறேன் என்றோ”, “பங்குக் கோயிலுக்குப் போகிறேன்”; என்றோதான் சொல்வார்கள். யாரவது பங்கு சர்ச்சுக்குப் போகிறேன் என்று சொல்வீர்களா? இந்து என்றால், “நான் மாரியாத்தா கோயிலுக்குப் போகிறேன்”; “சிவன் கோயிலுக்குப் போகிறேன்”; என்பார்கள். படித்த நகர்ப்புற மக்கள் மத்தியில் வேண்டுமானால் சர்ச் என்கிற வார்த்தை பிரயோகிக்கப்படலாம். இந்த வசனத்தின் மூலம் கிறித்தவர்கள் உணர வேண்டிய நீதியொன்றும் உண்டு. கோயில் கட்டுவதே சாதனை என்ற சாமியார் மனநிலையும், அதற்கு தூபம் போடுவதே நம் பணி என்ற பங்குப் பேரவை மனநிலையும், கோயில் கட்டறதுக்குத்தான் சாமியார் என்ற மக்கள் மனநிலையும் மாற வேண்டும் என்பதுதான் அது.  

     இருக்கிற கோயிலை இடிப்பதும், இருக்கின்ற கோயிலை சுரண்டுவதும், ஒண்ணும் முடியவல்லையென்றால் நற்கருணை பேழையில் இருக்கும் ஆண்டவரை மாற்றிக் கொண்டுவந்து சிறு ஆலயத்தில் வைத்துச் சிறைப்பிடிப்பதும் போன்ற நம் பிரபலமான ஆன்மீக காரியங்களைப் பற்றியெல்லாம் நாம் மறுபரிசீலனை செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். (ஆண்டவர் சொன்னபடி மனம்தான் மாற முடியவில்லை இடமாவது மாற்றுவோமே என்று எண்ணுகிறோமோ என்னவோ தெரியவில்லை. நற்கருணை ஆலயம் ஒன்றைத் தனியாக எழுப்பினால் அதைச் சந்திக்க எப்போதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் அநேக நகரங்களில் ஆண்டவர் தனியாகத்தான் இருக்கிறார். ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆலயம் வேண்டும் என்பதுதான் நகர்புற வழக்கு). கோயில்கள் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கையல்ல, அனால் அது மட்டுமே ஆன்மீகப் பணியின் அளவுகோல் அல்ல. மத்.25-ம் அதிகாரத்தோடு அதைப் பொறுத்திப் பார்க்க வேண்டும். 

     இந்த பின்னணியில் விஜயின் அந்த வசனத்தை கேட்டுப் பாருங்கள். அவர் யாரைச் சொல்கிறார் என்று புரியும். இப்போது எச். ராஜாவுக்கு வருவோம். இன்னொருவர் எழுதிக்கொடுத்து இந்த வசனத்தைப் பேசியவரைக் கண்டிக்க விரும்பிய அவர் ஷெர்லாக் ஹோம்ஸ் போலத் துப்பறிந்து ஆதாரத்தோடு ஜோசப் விஜய் என்ற அடையாளத்தை வெளியிட்டார். விஜய் கிறித்தவர் என்பதுதான் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியுமே. அதை வெளிப்படுத்தியதன் ஒரே நோக்கம், இவன் கிறித்தவன்; அதனால்தான் இந்துக்களை அவமானப்படுத்துகிறான் என்று, அந்த வசனத்தை எழுதியவனிலிருந்து, பேசியவனிலிருந்து, கேட்டவனிலிருந்து, தமழ் நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத ஒன்றை நிறுவி அதன் மூலம் தமிழர்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து கிறித்துவர்கள் எல்லாம் அயல்நாட்டுச் சாமியைக் கும்பிடுபவர்கள் என்று தமிழர்களாகிய நமக்குச் சொல்ல விரும்புவதுதான். இங்குதான் தமிழர்களாகிய நாமெல்லோருமே சிந்திக்க வேண்டும். 

      தமிழர்களாகிய நாமெல்லோருமே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்தான். அது தமிழர் சமயம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் சமணம், பௌத்தம் போன்றவை வந்தன. அதுவரையில் நாமெல்லோரும் தமிழர் சமயம்தான். கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை சமணம் பௌத்தம் ஓங்கி நின்றன. அந்த கால கட்டத்தில் தமிழர் சமய வாழ்வு நெறிகளை மீட்டெடுக்க வந்தவர்கள்தான் திருமூலரும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும். திருமூலர் காலத்துக்குப் பின்வந்த சைவ மதத்தை வடஇந்தியப் பார்ப்பனர்கள் உள் வாங்கி இந்து மதத்தின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டனர். இதை நான் சொல்லவில்லை. மயிலை சீனி வெங்கடாசலம் போன்ற ஆய்வாளர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். எனவே பார்க்கப்போனால் தமிழர்களாகிய நமக்கு எச். ராஜா போன்றவர்கள்தான் அந்நிய மதம். இன்னும் ஒரு விதத்தில் பார்க்கப்போனால் கிறித்தவம் தோமையார் காலந்தொட்டே, அதாவது எச்.ராஜா போன்றோர் முன்வைக்கும் இந்து மதத்துக்கு முன்பே இருக்கிறது. எனவே, தமிழர்களுக்கு இவர்கள்தான் அன்னியர்கள். இதை நான் ஒரு வாதத்துக்காக முன்வைக்கிறேனே தவிர, அடிப்படையில் இப்படி மனிதர்களை மார்க்கம் சார்ந்து பார்ப்பது தவறு. கிறித்தவம் என்பது நம் நிறைவாழ்வுக்காண நம்பிக்கை. தமிழ் என்பது என் பிறப்பிற்கான அடிப்படை. இந்தப் பிரிவினைவாதிகள் செய்யும் பிதற்றல்களால் இப்பொதெல்லாம் தேவையற்ற கேள்விகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் இப்படி இல்லை. 

     “நீங்கள் கிறித்தவராக இருந்தும் தமிழில் இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள்”, என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக்கொண்டார். அடப்பாவிகளா! வரலாற்றைப் படியுங்கள். நிகழ்காலத்தையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். பெஸ்கியிலிருந்து கால்டுவெல் வரை தமிழுக்குக் கிறித்துவம் ஆற்றிய பணிகள்தான் எத்தனை? தமிழ்க் கீர்த்தனைகள் அமைத்து முதலில் பாடியது நாம்தானே. பெரியபாளையம் மாதாவைப் பற்றி மாயூரம் வேதநாயகம் எழுதிய கீர்த்தனை எவ்வளவு நயம் வாய்ந்தது! வேண்டுமானால் கவிஞர் செம்பை சேவியர் எழுதிய விளக்கவுரையைப் படித்துப் பாருங்கள். இப்படி எத்தனை சொல்லலாம்?
நிகழ்காலத்துக்கு வாருங்கள். நம்முடைய ஆலய வழிபாடுகளில் எத்தனை பிறமொழி வாக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன? ஆமென், அல்லேலுயா என்று ஏதேனும் ஒன்றிரண்டு இருக்கலாம். நாம் என்ன, இன்னும் லத்தீனிலும், சமஸகிருதத்திலுமா வழிபாடு செய்கிறோம்? பிரிவினைவாதம் பேசுபவர்கள் இதே கேள்வியைக் கொஞ்சம் அவர்களை நோக்கிக் கேட்டுப் பார்க்கட்டும். எனவே நாம் அன்னியர்களா? எண்ணிப்பாருங்கள். 

    கிறித்தவர்கள் அடிப்படையில் தமிழர்கள். கிறித்துவம் என்பது அந்தந்த பண்பாட்டின் வழி நிறைவாழ்வை கண்டடையச் சொல்லும் வழிமுறை. இயேசு யூதராகத்தான் இருந்தார். நாம் தமிழராகத்தான் இருக்கமுடியும்.


        அடுத்து இந்தப் படத்தை முன் வைத்து விஜய் செய்ய விரும்பும் அரசியலுக்கு வருகிறேன். அவர் செய்ய விரும்புவது அல்லது செய்வதாக நினைத்துக்கொள்வது எம்.ஜி.ஆர் பாணி அரசியல். எம்.ஜி.ஆர் எப்படி எந்த வித சித்தாந்தமுமில்லாமல் தன்னை ஒரு தலைமையாகக் கட்டமைத்தாரோ அதேபோன்ற ஒரு பாணியை விஜய் கையாள விரும்புகிறார். இப்போது காலம் மாறி விட்டது. அதுவமல்லாது எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்குத் திராவிடம் என்ற இயக்கமும், சித்தாந்தமும் ஆரம்பத்தில் துணைநின்றன. எனவே, எம்.ஜி.ஆர் போன்றே இவர் தன்னைக் கற்பனை செய்துகொண்டால் அது இன்று சாத்தியம் இல்லை. சமீபகால வரலாற்றில் விஜயகாந்த் இதற்கு ஒர் உதாரணம். எனவே, தன் கொள்கை என்ன? இலட்சியம் என்ன? அதற்கான செயல் திட்டம் என்ன என்பதை விஜய் தெளிவு படுத்த வேண்டும். அதற்கு சாத்தியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு முறை ராகுலோடும், இன்னொருமுறை மோடியோடும் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதெல்லாம் கதைக்கு ஆகாது. கொள்கையற்ற, மாந்தீரிக  கதாநாயகர்களை இனியும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் தமழ்நாட்டை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை. அது எச்.ராஜா பேசக்கூடிய அரசியல் போன்றே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். எனவே இதை வைத்து விஜய் செய்யும் அரசியலைக்குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டும். 


பின் குறிப்புகள்: 

1) விஜயின் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் பாண்டேயிடம் படாத பாடுபட்ட நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. ஜோசப் என்ற பெயருக்கு விளக்கம் சொல்லப் போனவர் பெரும்பாடுபட்டு தன்னை மனிதராக நிருபிக்க முயன்றார். திடீரென்று இயேசு ஒரு சித்தர் என்றார். சரி, அவர் இயேசுவை எப்படியோ பார்த்து விட்டுப் போகிறார். அது அவர் தனிப்பட்ட விஷயம், கிறித்தவ பெயர் என்றால் ஆம் என்று நேரடியாகச் சொல்வதில் என்னதயக்கம்? தமிழனாக இருக்கிறவன் கிறித்தவனாக இருக்க முடியாதா? சார், கிறித்தவனாக இருப்பது என்பதே அடிப்படையில் மனிதனாக இருப்பதுதான். உங்கள் சித்தர் விளக்கத்தைக் கேட்டு எனக்கு கொஞ்சம் சித்தப் பிரமை வந்துவிட்டது. 

2) இந்த மெர்சல் சர்ச்சை வந்ததிலிருந்து சமூகவலைத் தளங்களில் கிறித்தவனை டிஸ்டர்ப் பண்ணாதே என்ற ஓர் அபத்தமான பாட்டு உலாவருகிறது. அவ்வப்போது என் வாட்ஸ் அப்பில் வந்து கிறித்தவனாகிய என்னை அது டிஸ்டர்ப் செய்கிறது அந்தப் பாட்டைப் பத்தாததற்கு விஜயின் டான்சோடோடு கோர்த்துவிட்டிருக்கிறார்கள், பாவம் விஜய். அநேகமாக தெருக்களில் நின்று நோட்டீஸ் கொடுத்தும், ஸ்க்கபீர்களில் இறைந்தும் நரகத்தைக் காட்டிப் பயமுறுத்தி பாமரமக்களை டிஸ்டர்ப் செய்யும் ஏதோ ஒரு குழுவின் வேலை இது என்று நினைக்கிறேன். தயவு செய்து இது போன்ற அபத்தங்களை நிறுத்தவும். இது ஒரு மோசமான எதிர்வினை, வன்மையாகக் கண்டிக்கிறேன். 

* * * * *
[இக்கட்டுரை வழங்கிய நண்பருக்கு நன்றி ]

Tuesday, 31 January 2017

புதுமையை நம்புகிறவன் - மெரினாவிலிருந்து ஒரு செய்தி -

புதுமையை நம்புகிறவன்
[இரவல் பக்கம்]

     சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் அவரது கணவரும் என்மேல் பிரியமாக இருப்பார். அப்படி ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதில் வெரோனாவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் நற்கருணை ஆராதனை செய்யும் புகைப்படம் இருந்தது. அதைக்காட்டி, உங்களுக்கு இதில் உன்ன தெரிகிறது? என்றார். அப்பம் வெள்ளையாக இருக்கிறது, வேறொன்றும் தெரியவில்லை என்றேன். அவரோ என்னைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்தார். அவரது கணவர் புன்னகைத்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் அவரது கணவர் நிறைய வாசிப்பவராக இருக்கக்கூடும். அவரது அறையில் மிகத் தடிமான புத்தகங்களும் முக்கியமான களஞ்சியங்களும் இருந்தன. நமது ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கலாம் அவை. அவரது கணவர் சிறுபுன்னகையோடு சொன்னார்; இந்த அப்பத்தில் இயேசுவின் உருவம் இவருக்;குத் தெரிகிறது என்று இவள் சொல்கிறாள், உங்களுக்குத் தெரிகிறதா? எனக்கு வெறும் அப்பம் மட்டும்தான் தெரிகிறது என்றார்.

     அந்தப் பெண்மணி உணர்ந்த இயேசுவின் உருவம் தெரியும் அந்தப் புதுமையை என்னால் அன்று உணர முடியாததுபோல பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது. இறையியல் படிக்கின்ற காலங்களில் மைக் எவான்ஸ் போன்ற பெந்தகோஸ்து பிரச்சாரகர்களின் சீரணி அரங்கக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவை எனக்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் அதிசயம் மற்றும் வினோதமாகவும், நேர்த்தியாக நடைபெறும் சர்ரியலிச நாடகக் காட்சி போலவும் தோன்றும். அடிப்படையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பவன் மனித வாழ்வில் இறைவன் அசாதாரணமான ஈடுபடும் சாத்தியங்கள் உண்டு என்பதை நம்புவனாக இருக்கவேண்டும். நான் நம்புகிறேன். இருப்பினும் பெரும்பாலான மாதா கண்சிமிட்டுதல், சிலுவையில் இரத்தம் வடிதல், சுவற்றில் உருவம் தெரிதல் வகையிலான புதுமைகளை நான் பொருட்படுத்தியதில்லை. அது தனி நபர் அனுபவம் சார்ந்தது. அவரவர் மனச்சான்று சார்ந்தது. என்னைப் பொருத்தவரை எனக்கு அது நிகழவில்லை. அவ்வளவுதான்.

     ஆனால், என் தனிப்பட்ட வாழ்வின் வழி நடத்துதலிலும் சமூக வரலாற்றின் இயக்கங்களிலும் கடவுள் அற்புதங்கள் செய்பவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன். கடந்த சனிக்கிழமை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி ஓர் அற்புதமாக அமைந்து போனது.

     கடந்த சனிக்கிழமையன்று நானும் என் நண்பரும் மெரினாவுக்குச் சென்று போராடும் இளைஞர்களோடு இருந்துவிட்டு வரலாமே என்று புறப்பட்டோம். அது இப்படி ஓர் உன்னதமான அனுபவமாக அமையும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகவும் அது அமைந்து போனது. உலகில் வேறு எங்கேனும் போராட்டமே கொண்டாட்டமாகவும், கொண்டாட்டமே போராட்டமாகவும்; நிகழ்ந்;திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு புதுமைதான். ஜல்லிக்கட்டுக்கான ஒரு சாதாரணப் போராட்டம் எப்படி இவ்வளவு தீயாய்ப் பரவியது? ஏதோ கிராமங்களில் மட்டும் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு எப்படி இத்தனை ஆதரவு கிடைத்தது. லேப்டாப் இளைஞர்களும் வாட்ஸ் அப் நவநாகிர்pக யுவதிகளும் எப்படி போராட முன் வந்தார்கள்? வாழ்க்கையிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திராத நகர்ப்புற மாந்தர்கள் எப்படிக் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் உட்கார்ந்து சென்றார்கள்? மக்களை மந்தைகளாவே வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் இவர்கள் பின்னால் போக நேரிட்டது எப்படி? கேள்விகள் எதற்குமே எந்தவிதமான தர்க்கரீதியான பதி;ல்கள் இல்லை. இது நிச்சயமாக என் காலத்தில் நான் கண்ட புதுமைதான். புதுமை என்பது ஏதோ அமானுஷ்யமாக வாழ்வின் இயக்கங்களுக்கு மாற்றாக நடக்க வேண்டியதில்லை. வரலாற்று இயக்கங்களுக்குள் இறைவன் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி தருவதே விவிலியம் கூறும் புதுமைகளிலெல்லாம் பெரிய புதுமை. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய விடுதலையைவிட வேறு எந்தப் புதுமை உண்டு? அது வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாகத்தானே நடைபெற்றது. மெரினாவில் நிகழ்ந்த புதுமை அனுபவத்தில ஒருநாள் சஞ்சரித்து வந்த எனக்கு சமகாலச் சமூகத்தின் பன்முகக் கூறுகளை பார்க்;கும் அனுபவமாக அது அமைந்து போனது.

     ஒரு பின்நவீனத்துவச் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அனைத்துக் குறியீடுகளும் நிறைந்து கிடந்தது மெரீனாக் கடற்கரை பெரிய கூட்டம். கடற்கரை முழுவதும் மணலோடு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம நின்றது. ஆனால் ஒன்று பட்ட குவியம் இல்லை. வழக்கமாக இப்படிப்பட்ட போராட்டங்களில் எதிர்கொள்ளும் பெரிய தலைமைகள் இல்லை. எங்கும் ஜனத்திரள். ஆங்காங்கே சிறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கொஞ்சம் பொதுக்கூட்டம் போன்ற தோற்றம் இருந்ததே தவிர ஆங்காங்கே அதே போல பல கூட்டங்கள் நடந்தன. யார் வேண்டுமானாலும் பேசினார்கள். எவருக்கும் மைக் கிடைத்தது. சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் ட்ரம்ஸ் வாசித்தார்கள். சிலர் தப்பு வாசித்தார்கள். சிலர் கரகாட்டம் ஆடினார்கள். சிலம்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள். கோசம் போட்டார்கள்;. சிலர் அமைதியாக பேனர் வைத்துக் கொண்டு நின்றார்கள். சிலர் மைக்கில் பேசினார்கள். சிலர் மைக் இல்லாமலும் பேசினார்கள். சிலர் சாலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். எங்கிருந்தோ பிஸ்கட் பாக்கெட்கள் வந்தன. தண்ணீர் வந்தது. வாழைப்பழத்தார்களை சிலர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீர் டாய்லெட்டுகள் ஆங்காங்கே நின்று கொண்டு மனிதர்களின் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பின. சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போனார்கள். மைக்கில் அறிவிப்புச் செய்ததும் மீண்டும் கிடைத்தார்கள். சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் சென்று பங்கேற்காவிட்டால்;; ஆயுசு குறைந்துவிடும் என்று எண்ணியது போல குடும்பத்தோடு வந்து பார்த்தோ பங்கெடுத்தோ சென்றான் என்று தோன்றியது. மொத்தத்தில் பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான சிறியவைகளின் உடைபட்ட கொண்டாட்டமாக அது அமைந்தது.

     இதைக் கடந்து வந்திருந்த மக்கள் யாரென்று பார்த்தால் பெரிய புதுமை காத்திருந்தது. கிராமத்தினர் இருந்தார்கள். கிராமத்தில் இருந்து பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சென்னை வந்து கம்பெனியிலோ, ஹோட்டலிலோ நிரந்தரமாகவோ, நிரந்தரமில்லாமலோ வேலைபார்க்கும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தார்கள். நல்ல படிப்புப் படித்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பீட்டாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்று லட்சமோ, ஐந்து லட்சமோ நன்கொடை கொடுத்துக் கல்லூரிகளில் சேர்த்துவிட்ட பிள்ளைகள், பதாகைகளோடும் கோசங்களோடும் நின்றார்கள். பெரியார் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். தீவிர கம்யூனிசம் பேசுபவர்கள் இருந்தார்கள். தமிழ்த்தேசியவாதிகள் இருந்தார்கள். எந்த இசங்களும் தெரியாத அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள். திருநீறு, குடுமிகளோடு வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ்ப் பெண்களாக இருக்காது என்று தோன்ற வைத்த சிவப்புப் பெண்களும் சுடிதார்களுடன் இருந்தார்கள். சும்மா வந்தவர்களும் இருந்தார்கள். மிகுந்த தீவிர உணர்ச்சியோடு அங்கேயே தங்கி கண்களில் கனலோடு போராடிய இளைஞர்கள் இளம் பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்லப் போனால் பன்மைத்துவத்துக்கான அங்கீகரிப்பாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது மெரினாக் கடற்கரை. பின்நவீனத்துவத்தின் நேர்மறை அம்சமே பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதுதானே!.மொத்தத்தில் ஓர் வித்தியாசமாக அனுபவமாகவும், அற்புதமாகவும், நமது பண்பாட்டு உணர்வையும் அடையாளத்துக்கான தேடலையும், கொண்டாட்ட உணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டி எழுப்புவதாக இருந்தது மெரினா அனுபவம். இந்த உணர்வு நிலையிலே சஞ்சரித்துவிடாமல் நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உண்டு. அவற்றுள் சில.

·         முன்பு போலத் தூய்மைவாதம் பேசி ஒன்று திரட்டப்பட்ட அணிச்சேர்க்கைகளைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழி என்று சொல்பவர்கள் தங்கள் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பின் நவீனத்துவ உலகில் பல்வேறு கருத்தியல்கள். நோக்கங்கள் உள்ளவர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் சேரும் புள்ளிகளை இனம்கண்டு கொள்வதே சாத்தியம் என்பதை மெரீனா கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது ஒரு நல்ல அம்சம்.

·    மற்ற மாநிலங்களில் பம்மாத்துக் காண்பிப்பது போல் தமிழகத்தில் பன்மைத்துவத்தையும், இங்குள்ள பண்பாட்டு வேர்களையும் அழிக்க நினைத்தால் அந்த பருப்பு இங்கே வேகாது. இங்கே மோடி  மஸ்தான் வேலைகளெல்லாம் பலிக்காது.

·    இப்போது நடைபெற்ற போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. அமுக்கப்பட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டுக் குவியலே ஜல்லிக்கடட்டு. தமிழகம் புறக்கணிக்கப்படுதல், விவசாயிகளின் தற்கொலை, ரூபாய் நோட்டு செல்லாததால் கோபம், வேலையின்மை, ஜெயலலிதா மரணம் எதிர் கொள்ளப்பட்ட விதம் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நொறுங்கொண்ட தன்னிலைகளின் எதிர்ப்புக் குரலே ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை உணர வேண்டும்.

·         தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், செயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ஐ தமிழகத்தின் இருண்ட நாளாக அறிவித்திருக்கிறார். செயலலிதா இருந்திருந்தால் இந்தப் போராட்டம் எப்படி எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்வர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையாகத் தெரிந்த ஓ.பி.எஸ் இதை அறிவித்திருப்பது நல்ல நகை முரண்.
·         இந்தப் போராட்டத்தை முன் வைத்து பல்வேறு ஆதர்சங்களும், பிம்பங்களும் தலைமைகளாகக் கட்டமைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அது மிக மேம் போக்கானதாகவும் நம் சமூகச் சிக்கல்களின் புரியாமை வெளிப்பாடகவும் தெரிகிறது. குறிப்பாக, கலாமின் வழிவந்த கூட்டம் ஒன்று சகாயம் போன்றவர்களைத் தீர்வுகளாவும், இலட்;சிய நாயகர்களாவும் கட்டமைக்க முயல்வது தமிழ்ச்சமூகம் அடிப்படையில் தன் பிரபுத்துவ மனநிலையில் இருந்தும் நாயக வழிபாட்டுச் சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

·         ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ் அடையாளத்துக்கான போராட்டமாகவும், நமக்கான பண்பாடுகளை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்துக்கான போராட்டமாகவும் பார்க்கப்பட வேண்டும். மாறிவரும் விஞ்ஞான உலகில் தமிழ்ச்சமூகத்தில் ஜல்லிக்கட்டின் பொருத்தப்பாடு இன்மை, மற்றும் அதில் இருக்கக்கூடிய சனாதன அம்சங்கள் என்றும் கவனத்துக்குரியவை.

·         இப்போராட்டம் தமிழ்ச் சமூக எதரிகள் யார் என்பதை மக்கள் புரி;ந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது யாரெல்லாம் போலிஸ் அட்டூழியத்தை சிவனின் திருவிளையாடலாகப் பார்த்தார்கள் என்பதையும் உணர்ந்தாலே இது புரியும்.

·         இக்கட்டுரையை எழுதி முடிக்கும் இத்தருணத்தில் போராட்டம் காவல் துறையின் அராஜகத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இருக்கிற பயங்கரவாதத்திலேயே கொடூரமான பயங்கரவாதம் காவல் துறையின் பயங்கரவாதம்தான். காரணம், அது அரசு அங்கீகாரத்தோடு செய்யப்படுகிறது. ஆனால் என்ன ஒன்று, சமூக வலைத்தளங்களால் அது முன்னெப்போதையும்விட இது பயங்கரமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜாலியன் வாலாபாக்கிலிருந்து, கூடங்குளம் வரை வரலாறு முழுக்க எல்லாப் போராட்டங்களிலும் இதுதான் உண்மை. ஆனால் செல்போன் யுகத்தில் இது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் காவல் துறையினர் இனி பத்திரிக்கையாளர்களின் காமெராக்களை அணைத்துவிட்டு முன்னெச்சரி;க்கையாக தங்கள் அராஜகங்களைத் தொடங்குவார்கள் என்று நம்பலாமே தவிர வேறு எதுவும் நல்லது நடக்கும் என்று தோன்றிவில்லை.

முடிவாக:
     அற்புதங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அற்புதங்களை அனுபவிப்பவர்கள் அந்த நேரத்தில மட்டும் பரவசப்பட்டுவிட்டு பிறகு வழக்கமான இயல்புநிலைக்குத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை அதிசயித்து ஆகா, ஓகோவென ஆர்ப்பரித்தவர்கள் அவரை அரசராக்க விரும்பியவர்கள் (யோவா 6) பிறகு தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி அவரைச் சிலுவையில் அறையக் கோசமிட்டார்கள். இந்த பின் நவீனத்துவ அற்புதங்களில் ஒன்றான இந்தப் போராட்டத்தின் பங்குதாரர்களும் அப்படிப் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. வால் ஸ்டிரீட் எழுச்சி நமக்;கு ஞாபகம் வரவில்லையா? பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன்  நெகிழ்வுத்தன்மை (Fluidity) மற்றும் தற்காலத் தன்மை (Momentariness). இந்த ஜல்லிக்கட்டு எழுச்சியும் அப்படிப் போய்விடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆக்கச் செய்வதே வரலாற்று அற்புதங்களை நம்புகிறவர்களின் பணியாக இருக்க முடியும்.


Friday, 7 October 2016

Breaking the Chains

Scholars have often repeated the same thing about violence.
Violence often begets violence or that violence is spiral – it continues eternally.
Take the example of a son whose father is killed by someone. The son, when he identifies the culprit, waits for an opportune time to take away his life. The same fate will await for him.

The enmity between two persons or groups or nations continue although the initiators of violence are no more. The chain can be only broken when one of the descendants one day forgives the other.

The idea of forgiveness and the breaking of the continued violence can be explained with an example. Charles Taylor writes how this was possible in the political realm of South Africa. According to him the harmonious living is possible today only because of the victim who rises vertically to forgive the other. It is possible. What one has to do is to break the chain of hatred with love; break the chain of resentment with forgiveness. It is not that you do it because you are powerless but because you are powerful, inspired by the love of God.

Nietzsche had spoken in his genealogy of morals that resentment of the weak created the morality of evil. In his dictionary, forgiveness is the tool of the week to subdue the powerful. For the one who wanted to retrieve the sense of self-transcendence against instrumental rationality and establish the transformation of the values it may have seemed correct. He wanted to recover the human creativity and transcend nihilism through aesthetics.

When it comes to the political realm, Nietzsche's genealogy does not help. I am not undervaluing the moral motive behind the claim of Nietzsche, but the political outcome of it. Taylor himself suggests that Nietzsche's followers turn to be anti-humanists. Leaving aside the philosophical debate, when one turns to the political conflicts between nations or groups, the only way to break the chain of hatred and war is to forgive.

The Death of Christ on the Cross is the real witness to the end of bloody sacrifice. Unbelievers may not subscribe to the faith of the Christians, but the fact is that humanism one values in the world has come out of and shaped of the agapeic gospel of Christ.

Monday, 3 October 2016

இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாநில அரசு ...

வாரியம் அமைக்க முடியாது என்கிற மத்திய அரசு ...

நீரைப் பகிர்ந்து கொள்ள முடியாத மாநில அரசு ....

பேச்சு வார்த்தை கூட நடத்த இயலா மாநில அரசு...

போரை வைத்தே அரசியல் நடத்தும் அரசுகள்

என்ன ஆச்சு என்றே தெரியாத மாநில மக்கள்???

இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல்
சிவனே என்று இருக்கும் ஊடகங்கள் ...

ஆனால் தேவையென்றால் திருச்சிக்கு வருவார்கள் -


இத்தனைக்கு நடுவிலும் அடிபட்டு ஊனமாய்க் கிடந்தாலும்
தொலைக்காட்சியில்
ஜனகன போடும்போது
நான் எழுந்து நின்று சல்யூட் அடிப்பேன்  - பாரத் மாதாக்கி ஜே

ஏனெனில் ஒரே இந்தியா
ஒரே அரசு

வாழ்க பாரதம்



Tuesday, 20 September 2016

தேசப் பற்று - சில கேள்விகள்

இந்தியா என் நாடு என்பதிலும் 
அதில் நான் உறுப்பினன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல்தான் இருந்தேன் - இருக்கிறேன் - 

ஆனால் எப்போதும் மீண்டும் மீண்டும் தேசப்பற்றை உறுதி செய்யும் குரல்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன.

ராம்குமார் சிறையில் கொல்லப் பட்டதற்கு வரும் எதிர்ப்புகளைக் கண்டு தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

"குற்றவாளி ராம்குமார் சிறையில் இறந்ததற்கு கொதித்துப் போயிருக்கிறீர்களே எத்தனை பேருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இறந்தது நமக்குத் தெரியும்? - நீங்கள் எல்லாம் மனிதர்களா? இந்தியர்களா?
ஜெய் ஹிந்த்" - என்று ஒரு செய்தி வாட்ஸ் ஆப் - பில் வந்தது.
= = = = 

இறந்த இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்களும் 
அவர்களை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

= = = = 

ஐயா தேசப் பற்றாளரே 
இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்?

ஆற்றை அதன் போக்கில் விடாமல் தடுத்த கர்நாடக நண்பர்களை பார்த்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்...

இந்தியாவில் அங்கம் வகிக்கும் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகளை, சரக்கு லாரிகளை, கார்களை எரித்த அவர்களிடம் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்...

தமிழ் பேசுகிறான் என்பதற்காக அவர்களை, துகில் உரித்து, அறைந்து, காவிரி கன்னடர்களுக்கே என்று கன்னடத்தில் சொல்ல வைத்த அந்த காட்டுமிராண்டிகளைப் பார்த்து சொல்லுங்கள் ஜெய் ஹிந்த் ....

அங்கே அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் இல்லையா?
இழந்த சொத்துக்கள் இந்தியாவைச் சார்ந்தது இல்லையா? 

அப்போதெல்லாம் ஆவேசப் படாத நீங்கள் திடீரென பாய்ந்து வருவது ஏன்?

எல்லைபாதுகாப்பு எப்போதும் ஆபத்து நிறைந்ததுதான். அவர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டியது அவசியம் தான்... அதற்காக,

இந்தத் தருணத்தில் நடக்கும் காட்டு மிராண்டித்தனங்களை பற்றி நாம் பேசக் கூடாதா?

இந்தத் தருணத்தில் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி பேசிக் கூடாதா?

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத் துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நீதிமன்றங்களும் முக்கியம். நீதிமன்றங்களை அவமதிக்கும் போதும் இந்த ஆவேசம் வேண்டும்.

சட்டத் துறையைப் போல காவலும் அவசியம்தான். காவல் தூதர்கள் மனித உரிமைகளையும் மீற முடியாது. குற்றம் உறுதி செய்யப் படும் வரை அவன் குற்றவாளி அல்ல. நாளை உங்களைக் கூட கைது செய்யலாம். சிறையில் வைக்கலாம். அதனால் நீங்கள் குற்றவாளி ஆகிவிட மாட்டீர்கள். உங்களுக்கும் மர்மமான சாவு வரலாம். அப்போதும் நாங்கள் மர்ம இறப்புகளுக்கு விளக்கம் கேட்டுக் குரல் எழுப்புவோம்.

ஏனெனில் மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.





Tuesday, 13 September 2016

காவு வாங்கும் காவிரி

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை

அவன் ஆற்றில் அணை போடுகிறான் 
நாம் வயலில் மனை போடுகிறோம்.


அவனுக்கு உணவு தேவை - எனவே ஆற்றில் நீர் பதுக்குகிறான்.
 நமக்கு மனை தேவை எனவே ஆற்றில் மணல் எடுக்கிறோம்.

அவன் அணை கட்டி நீரைத் தேக்குகிறான்.
நாம் நீர் தேங்க இடமில்லாமல் மனை  காட்டுகிறோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 
ஆற்றுக்கு அணை 
என்பது அதோடு முடிந்து விடுவதல்ல 

அதைத் தொடர்ந்து 
காற்றுக்கு வேலி யும் வரும்.

நாம் குளம் அழித்து 
மணல் எடுத்து,
மனை கட்டி 
வாழ வரும் போது 
மரமும் இருக்காது 
மழையும் இருக்காது

காற்றுக்காயும் 
கையேந்தும்  
காலம் வரும்.

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை


Friday, 26 August 2016

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---